Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரேமதாச-தமிழீழ விடுதலைப் புலிகள் "தேனிலவு" ஆரம்பம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 59

ரணசிங்க பிரேமதாச இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் வடக்குக்-கிழக்குப் பகுதிகள் உட்பட இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஜக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் "துரோக"க் குழுவாக முத்திரை குத்தப்படாததால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்து விட்ட ஈரோஸ் (EROS) இயக்கம் ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்றதன் மூலம் இலங்கைப் பாராளுமன்றத்துக்கு ஈழவர் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 13 பேர் தெரிவாகியிருந்தனர்.

வடக்குக்–கிழக்கு இணைந்த மாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியிருந்த நிலையில் வடக்குக்–கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவும், ஈழவிடுதலைப் போராட்ட அரசியலும் தமது கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருப்பதை கண்டுகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் ஈரோஸ் இயக்கத்தை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்ததன் மூலம் அரசியல் களத்தில் தமது செல்வாக்கை ஈரோஸ் மூலமாக மீளவும் நிலைநாட்ட முயன்றனர். தமிழ்மக்களது அரசியல் எதிர்காலம், தமிழ்மக்களது அரசியல் நலன்கள் என்பவற்றைப் பின்தள்ளிய, தமது பிற்போக்குத் தலைமையின் நலன்களை ஒரே நோக்கமாகக் கொண்ட காய் நகர்த்தலாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவில் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் ஈரோஸ் பங்குபற்றுதல் அமைந்திருந்தது.

வடக்குக்-கிழக்கு மாகாண சபையை தேர்தல் மூலம் கைப்பற்றியிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் வடக்குக்-கிழக்கு மாகாணசபையை பலப்படுத்தும் நோக்கில் தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கும் - தவறான வழிமுறையில் - செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டிருந்தனர். தமிழ் தேசிய இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவித்தல் பகிரங்கமாக வெளியிடப்பட்டபோதும் அதில் இணைந்து கொள்வதற்கு பெருமளவில் வடக்குக்-கிழக்கு இளைஞர்கள் முன்வராததையடுத்து தமிழ்த் தேசிய இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு துப்பாக்கி முனையில் ஆரம்பமானது.

வடக்குக்-கிழக்கு பகுதியில் வீடுகளிலும், வீதிகளிலும், விளையாட்டரங்குகளிலும், வணக்கத்தலங்களிலும் இளைஞர்களும், மாணவர்களும் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்துக் கடத்திச் செல்லப்பட்டு தமிழ்த் தேசிய இராணுவத்தைக் கட்டியமைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது. பல சந்தர்ப்பங்களில் தாம் கடத்தப்படுவதிலிருந்து தப்புவதற்காக இளைஞர்கள் தப்பி ஓடும்போது இளைஞர்களை நோக்கி அல்லது ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் "மண்டையன் குழு"த் தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடந்து கொண்டிருந்த இத்தகைய செயற்பாடுகளிலிருந்து தப்புவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்களும் இளைஞர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி தென்னிலங்கைக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்.

இந்திய அரசின் ஆயுத உதவியோடு பலம் பெற்றிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளேயே தீவிர இடதுசாரிக் கருத்துக்களை தலைமையிலிருந்து கீழணி உறுப்பினர்கள் வரை கொண்டிருந்த இயக்கமாகவும், இந்திய அரசின் ஆயுத உதவியோடு பலம் பெற்றிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளேயே ஓரளவு ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருந்த இயக்கமாகவும், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் செயற்பட்டு சாதிரீதியாக முத்திரை குத்தப்பட்ட இயக்கமான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் இந்தியப் படையின் உதவியுடன் துப்பாக்கி முனையில் இளைஞர்களையும் மாணவர்களையும் கடத்தி தமிழ்தேசியத்தின் பேரால் தமிழ்த் தேசிய இராணுவத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் பேசிவந்த புரட்சிகர " இடதுசாரியம்" "ஜனநாயகம்" "மக்கள் போராட்டம்" அனைத்துமே காட்சியறைப் பொருளாக மாறி விட்டிருந்தது.

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியிருந்த ஜக்கிய தேசியக் கட்சி அரசு பதவியேற்றதையடுத்து ஜனாதிபதி பிரேமதாச ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவித்திருந்தார். பிரேமதாசவின் போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக நிராகரித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளோ இந்தியப்படை வடக்குக்-கிழக்கு பகுதிகளிலிருந்து வெளியேறும் வரை தாம் போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்கப் போவதில்லை என பதிலளித்திருந்தனர்.

ஆனால் பெரும் மாற்றத்துக்குட்பட்டுக் கொண்டிருந்த வடக்குக்-கிழக்கு அரசியல் நிலைமைகள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கவலை கொள்ளச் செய்துகொண்டிருந்தன. வடக்குக்-கிழக்கு மாகாணசபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தம்மைப் பலப்படுத்தும் அதேவேளை வடக்குக்-கிழக்கு மாகாணசபையை செயற்பாடுள்ளதாக மாற்றுவதை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான இந்தியப்படையின் குறிவைப்புகளும், தாக்குதல்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதையும் கண்டுகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனாதிபதி பிரேமதாசாவால் அறிவிக்கப்பட்டிருந்த ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம் வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாணசபையின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், தமது பலவீனமான நிலையிலிருந்து மீண்டுவரவும் ஜனாதிபதி பிரேமதாச தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி அரசுடன் பேசுவதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதி பிரேமதாசவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான அன்டன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகரத்தினம் யோகி, பரமு மூர்த்தி ஆகியோருக்கும் இடையில் முதலாவது சந்திப்பு மே 4, 1989 கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதிலும், வடக்குக்-கிழக்கு ஒன்றிணைந்த மாகாணசபையின் செயற்பாடுகளை முடக்கி முடிவுக்கு கொண்டுவருவதிலும் ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி பிரேமதாசவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரே படகில் பயணிக்கத் தொடங்கியிருந்தனர். ஜனாதிபதி பிரேமதாச தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான "தேனிலவு" கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகியிருந்தது.

ஜக்கிய தேசியக் கட்சி அரச பிரதிநிதிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இந்தியப்படையினரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதையும், வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையை செயலற்றதாகச் செய்வது என்பது தொடர்பாக இருந்தபோதும் அது மட்டுமே அவர்களது ஒரே நோக்கமாக இருந்திருக்கவில்லை.

இலங்கை ஜனாதிபதியைப் பொறுத்தவரை ஜனதா விமுக்திப் பெரமுனவின் இலங்கை அரசுக்கெதிரான கொடூரத்தனமும் கொலைவெறித்தன்மையும் கொண்ட தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமிருந்தது. இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்கள், அவர்களது குடும்ப அங்கத்தினர், அரச பதவிகளில், பல்கலைக்கழகங்களில் முக்கிய பதவி வகிப்போர், அரசபடைகளில் பணிபுரிவோர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் கூட ஜனதா விமுக்தி பெரமுனவின் கொலைப்பட்டியலில் இடம்பெற்றுக் கொண்டிருந்ததுடன் சிவில் நிர்வாகத்தைச் சீர்குலைப்பதையும் தமது குறியாகக் கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கைகுலுக்குவதன் மூலம் வடக்கு கிழக்கிலிருந்து இந்தியப்படையை வெளியேற்றும் அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தற்காலிகமாகவேனும் சமாதானத்தை மேற்கொள்வதன் மூலம் ஜனதா விமுக்திப் பெரமுனவினரை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி பிரேமதாச தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி அரசு செயற்பட ஆரம்பித்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இந்தியப்படையின் சுற்றிவளைப்புக்குள் வன்னிக்காட்டுப் பகுதிக்குள் முடக்கப்பட்ட நிலையில் ஆயுதவிநியோகம், நிதி பற்றாக்குறை என்பன அவர்களை ஒரு நெருக்கடிநிலைக்கு இட்டுச்சென்று கொண்டிருந்ததோடு தமது "ஏக தலைமை"க் கனவு கலைந்து கொண்டிருப்பதையும் கண்டுகொண்டிருந்தனர். இலங்கை அரசுடன் "நட்புறவு" கொள்வதன் மூலம், இலங்கை அரசிடமிருந்து - இந்தியப்படையை வெளியேற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் இலங்கை அரசிடமிருந்து - ஆயுதங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததோடு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமையிலான வடக்குக்-கிழக்கு மாகாண சபை அரசையும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடனும், இந்தியப்படையின் வருகையுடனும் இந்தியாவிலிருந்து வடக்குக்-கிழக்குப் பகுதிக்கும் தென்னிலங்கைக்கும் வந்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அழித்தொழித்து தமது " ஏக தலைமை" யை நிறுவிக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளும், உடன்பாடுகளும், செயற்பாடுகளும் கச்சிதமாகவும் அவர்களது இலக்குகளை நோக்கியும் சென்றுகொண்டிருந்தன.

இலங்கை அரசுடன் மட்டுமல்லாது இலங்கை அரச படைகளுடனும் நெருக்கமான தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டுவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதங்களும் பணமும் வவுனியாவிலுள்ள சேமமடு காட்டுப்பகுதிக்குள் கொண்டுவந்து தரையிறக்கப்பட்டன.

இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள், பண உதவி, மற்றும் இலங்கை அரசபடைகளுடனான நெருக்கமான நட்புறவுடன் இந்தியப்படைகளுக்கெதிராக மட்டுமல்லாது வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபைக்கெதிராகவும், ஏனைய விடுதலைப் போராட்ட "துரோக"க் குழுக்களுக்கெதிராகவும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கெதிராகவும் தீவிர தாக்குதல் நடவடிக்கைகள் - வெறித்தனமான தாக்குதல்கள் - ஆரம்பமாகின.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் மன்னார் பகுதியில் அமைந்திருந்த புளொட் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரின் உதவியுடனேயே இத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த போதும் புளொட்டுடனான கடும்மோதலின் பின்பே தமிழீழ விடுதலைப் புலிகள் இம்மோதலில் வெற்றிபெற முடிந்திருந்தது.

இலங்கையின் பெரும்பான்மை இனக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற ஓரே காரணத்திற்காக "துரோகிகள்" எனக் கூறி யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா உட்பட பலரையும், சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் இலங்கை இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாட ஒழுங்கு செய்திருந்த ஒரே காரணத்துக்காக சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவையும், தமது மிரட்டல்களுக்கு அடிபணிய மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பஞ்சலிங்கத்தையும் மிருகத்தனமாகக் கொன்றொழித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து மன்னார் பகுதியில் அமைந்திருந்த புளொட் முகாமைத் தாக்கி அழித்திருந்த போதும் "மண் மீட்பாளர்களாகவே" தம்மை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இலங்கை அரச பிரதநிதிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்ந்த சந்திப்புக்கள் சுமுகமாகவே தொடர்ந்து கொண்டிருந்தன. வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையை நிர்மூலமாக்கும் திட்டத்துடனும் அதற்கு ஆதரவாக இருக்கும் இந்தியப்படையை வெளியேற்றும் நோக்கிலும் செயற்பட்ட பிரேமதாச, தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்பவை அனைத்தையும் கொடுக்கச் சித்தமாக இருந்தார்.

ஆயுத உதவி, பண உதவி உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனங்கள் - லொறிகள் - எதுவித சோதனைகளுமின்றி வவுனியாவிலிருந்து கொழும்பு செல்லவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடவும் பிரேமதாச அனுமதி வழங்கியிருந்தார். இத்தகையதொரு சூழ்நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பெரும்தொகையான ஆயுதங்களை தென்னிலங்கைக்கு எதுவித சோதனையுமின்றி கொண்டுவந்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அரசியல் விரோதிகளை அல்லது "துரோகி" களை அழித்தொழிக்க ஆரம்பித்தனர்.

இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் செய்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் தமது எதிரிகளை அல்லது "துரோகிகளை" அழிப்பதை நோக்கிய செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தையும் அதன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறி வைத்திருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச விரும்புவதாக விடுத்த வேண்டுகோளையடுத்து தமது இருப்பிடத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதங்களுடன் அனுமதித்திருந்தனர். பேச்சுவார்த்தைக்கென சென்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டிருந்த அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிவசிதம்பரம் ஆகியோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பியோடுகையில் அமிர்தலிங்கத்தின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் உயிரிழக்க சிவசிதம்பரம் காயங்களுடன் உயிர் தப்பினார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பிரேமதாசாவுடனும் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடனும் கூடிக் குலாவி களிப்புற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை இலங்கை அரசின் உதவியுடன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரை(13 July 1989) கொன்றொழித்திருந்தனர். நயவஞ்சகத்தனமான முறையிலான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக் கணக்கான உரிமை கோரப்படாத கொலைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலைகளை தமிழீழ விடுதலை இயக்கம் செய்ததாகக் குற்றம் சாட்டி தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்தொழிப்பதற்கு ஒரு காரணமாகக் கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலைப் பாணியிலேயே அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரனை கொலை செய்திருந்தனர்.

சிங்கள இனவாதத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் குறுந்தேசிய வாதத்தையும், இனவெறியையும் தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டி வளர்த்ததோடு மட்டுமல்லாமல் சிங்கள மக்கள் குறித்த கீழ்த்தரமான பேச்சுக்களை மேடைகளில் பகிரங்கமாக முழங்கிய அமிர்தலிங்கமும் அவரது கூட்டணியும் பாராளுமன்றத்தைக் குறிவைத்துத் "துரோகி" அரசியலை அறிமுகப்படுத்தி தமது அரசியலுக்கு மாற்றான அரசியற்கருத்துக் கொண்டவர்களை அழித்தொழிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள், அவர்களால் வளர்த்து விடப்பட்டு அவர்களால் கட்டுப்படுத்த முடியாதவாறு தமிழ்ச் சமுதாயத்துக்குள் பூதாகரமாக வளர்ந்து புரையோடி விட்டிருந்த "துரோகி ஒழிப்பு" அரசியலுக்குப் பலியாகி "துரோகி"களாகவே இறந்து போயினர்.

(தொடரும்)

01/06/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51

52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53

54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 54

55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 55

56.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 56

57.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 57

57.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 58