Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வசந்தம் இழக்கப்படும் நிலம்

தூரத்தேயிருந்து

குண்டுகளை வீசிய டோராப்படகுகள்

எங்கள்

இறங்குதுறையை ஆக்கிரமித்துக்கொண்டது

கிராமத்து தலைநிலம்

அழகையும் அமைதியையும் தொலைத்து

படைமுகாம்களால் சூழப்பட்டுக்கிடக்கிறது

மக்கள் விடுவிக்கப்பட்ட பெயரில்

விலங்கிடப்பட்டுக் கிடக்கிறார்கள்

கடற்காற்று வருடியகரையில்

சுவர்கள் எழுந்து

மண் சுகத்தை தொலைத்திருக்கிறது

அரசமரத்து வேர்களைச் சுற்றி

அரண் அமைக்கப்பட்டிருக்கிறது

பட்சிகள் கூட வந்துறங்கியதிற்கான

எந்தத் தடயங்களுமில்லை

மரத்தடியில்

கூடியிருந்து பேசியபொழுதுகளையும்

சுகமான நினைவுகளையும்

இளையதலைமுறை இழந்துபோயிருக்கிறார்கள்

 

எல்லாநிகழ்வுகளிலும் படையினர்பிரசன்னம்

வசந்த விதிமுறையாக்கப்பட்டுள்ளது

நிரந்தரமாகவே

நிலைகொள்ளவதற்கான தயாரிப்புகள்

அடைப்புகளால் மூடப்பட்டு படுவேகமாகிறது

இயற்கையின் வசந்தவாழ்வை

மகிந்த வசந்தம் விழுங்கிக்கொண்டேயிருக்கிறது

-22/08/2012