Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சிவனுடன் தீட்சிதர்கள் சிதம்பரம் வந்தார்களாம். தீட்சிதர்கள் சிதம்பரத்தில், சிவன் எவ்விடத்தில்!!!

சிவன் மூவாயிரம் தீட்சிதர்களைக் கூட்டிக் கொண்டு சிதம்பரம் வந்தானாம். தீட்சிதர்கள் கோயில் நகைகளைக் களவெடுத்துக் கொண்டு, கோவிலிற்கு வரும் பெண்களின் கைகளை பிடித்து சேட்டை விட்டுக் கொண்டு, ஒருத்தன் மேல் ஒருத்தன் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொண்டு சிதம்பரத்தில் பக்திப்பரவசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிவனுடன் வந்தவர்கள் என்பதால் சிதம்பரம் கோயில் தங்களது சொத்து என்று அடம் பிடிக்கிறார்கள். இவர்கள் இங்கே என்றால் அந்த சிவன் எங்கே?. பிள்ளை கொடுத்து பிரிந்த காதலன் போல் எங்கே போய் விட்டான்.

சிவன் எந்தக் காலத்திலடா வந்தான், தீட்சிதர்களுடன் வருவதற்கு. சிவன் வந்தான் என்பது ஒரு ஜதீகம், ஒரு புராணம், பரம்பரையாக வந்த ஒரு வழக்கு. இதை எல்லாம் தூக்கிப் பிடிச்சு கேக்கிறியே, உனக்கென்ன மண்டை கழண்டு போச்சா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால் இதை வைத்து சிதம்பரம் கோயில் தங்களுடையது என்று தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள். பாலச்சந்திரனை பயங்கரவாதி என்று ஊளையிட்ட சுப்பிரமணியசுவாமி என்னும் பார்ப்பன வேதாளம் அதற்கு ஆதரவாக வாதாடுகிறது. மெத்தப்படித்த நீதிபதிகள் மினக்கெட்டு அந்த வழக்கை விசாரிக்கிறார்கள்.

சிவன் தீட்சிதர்களுடன் வாக்கிங் வந்த கதையை உண்மையென்றால் சிங்கத்திற்கு பிறந்தவர்கள் சிங்களவர்கள், புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்து போனார். (வட இந்தியாவில் வாழ்ந்த புத்தர் மத்திய இந்தியாவையே தாண்டியிருக்கமாட்டார்.) அயோத்தி ராமர் பிறந்த பூமி. உலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டது என்ற பைபிள்கதை இஸ்ரேல் யூதர்களிற்கு வாக்களிக்கப்பட்ட பூமி. குரான் பிழையே இல்லாத புத்தகம் போன்ற எல்லா புராணங்களையும் ஏற்றுக் கொண்டு வழக்காடலாம்.

தமிழர்கள் எவருமே சமஸ்கிருதம் பேசுவதில்லை. எதற்கும் உபயோகப்படுத்துவதில்லை. பார்ப்பனர்கள் மட்டுமே ஓதுகிறார்கள். ஆகவே இவர்கள் தமிழர்கள் இல்லை. தாங்கள் வெளியிலே இருந்து வந்தவர்கள் என்று அவர்களே சொல்கிறார்கள். எனவே இவர்கள் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர்களும் இல்லை. இந்த கோயிலை மன்னர்கள் கட்டினார்கள். அவர்கள் மக்களின் உழைபினை வரி என்று சுரண்டியும், வெட்டி எனப்படும் ஊதியமில்லாத கட்டாய வேலைக்கு மக்களை பலாத்காரமாக ஈடுபடுத்தியும் இக்கோவில்களை கட்டினர். மன்னர்கள் காலத்தில் இவர்களிற்கு வரி கிடையாது. கட்டாய உழைப்பு கிடையாது. மேலும் உழைப்பும், பார்ப்பனர்களும் மகிந்தாவும், உண்மைகளும் போல. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. ஒரு கல்லைக் கூட எடுத்துப் போட்டிருக்க மாட்டார்கள்.

இந்த மண்ணும் இவர்களினது அல்ல. இவர்களினது பணத்திலோ, உழைப்பிலோ கட்டியதும் இல்லை. அப்படி இருக்க என்ன மயிர்நியாயத்தில் இவர்கள் கோயிலிற்கு உரிமை கொண்டாட முடியும். எத்தனையோ கோடி வருமானம் வரும் இந்த கோவில் சொத்துக்களை தீட்சிதர்கள் கொள்ளையடிக்கிறார்கள். வெறும் முப்பதாயிரமே கோவில் வருமானம் என்று கணக்கு காட்டியிருக்கிறார்கள். இந்த கோவிலை தீட்சிதர்களிடம் கொடுக்கக்கூடாது பொதுக்கோவிலாக வைத்திருக்க வேண்டும் என்று சிவனடியார் ஆறுமுகசாமி சார்பாக வாதாடிய வழக்கறிஞரிடம் நீதிபதி சௌகான் “நிதிக் கையாடல் பற்றி பேசுகிறீர்கள். உங்களிற்கு தனிப்பட்ட பிரச்சனை எதாவது இருக்கிறதா? கோயில் சொத்தை அபகரிக்க நினைக்கிறீர்களா என்று தன் பார்ப்பனிய பாசத்தை காட்டினார். புகார் கொடுக்கச் செல்லும் அப்பாவியையே குற்றவாளி ஆக்கும் தமிழ்நாட்டு பொலிசையே நீதிபதி அய்யா மிஞ்சி விட்டார்.

காலம் காலமாய் தாங்கள் வாழ்ந்து வந்த மலையிலே இருந்து, காட்டிலே இருந்து பழங்குடிமக்களை துரத்தி விட்டு பெருமுதலாளிகளிற்கும், அந்நிய நாடுகளிற்கும் இயற்கையை இந்திய அரசுக்கொள்ளையர்கள் விற்கும் போது இந்த நீதிபதிகள் வாயையும், மற்றதையும் பொத்திக் கொண்டு ஆமாம் சாமி போடுவார்கள். இது தான் பணக்காரர்களிற்கும், பார்ப்பனர்களிற்கும் கூழைக்கும்பிடு போடும் அரசும், அதிகாரவர்க்கமும்.

தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துமுறையில் எழுத வேண்டும் போன்ற அதிபயங்கர யோசனைகளை அள்ளி வீசும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை எழுதினார். சரஸ்வதி நாக்கிலே வாசம் செய்கிறாள் என்றால் சலம் கழிக்க எங்கே போவாள் என்று பெரியார் சொன்னதை ஒரு ரிக்சாக்காரருடன் நாகர்கோவிலில் வைத்து பேசும் போது அந்த ரிக்சாக்காரர் "அதெல்லாம் ஒரு குறியீடு. இப்படி கிண்டலடிப்பது விளக்கமிலாத செயல்" என்று சொன்னாராம். அந்த நாகர்கோயில் ரிக்சாக்காரர் உண்மையா, அல்லது ஜெயமோகனது கதாபாத்திரமா தெரியவில்லை. இது உண்மையில் நடந்திருந்தால் ரிக்சாக்காரர் பெரியார் சொன்னதை தான் ஆமோதித்திருப்பார். ஏனென்றால் தொழிலாளிகள் தான் இப்படியான கிண்டலும், கேலியும் உடைய மொழி கொண்டவர்கள். பெரியார் சொன்ன ஒரு கிண்டலை தூக்கிப் பிடிக்கும் ஜெயமோகன் தீட்சிதர்கள் சிவனுடன் வந்ததால் கோயில் தங்களிற்கு தான் என்று அபேஸ் பண்ணுவதை பற்றி வாய் திறக்கவில்லை. இவர்களினது புராணக்குப்பைகளை கிண்டலடித்தால் அது குறியீடு. சொத்து என்று வந்து விட்டால் அவையே வழக்கிற்கு ஆதாரங்கள். இது தான் இந்துத்துவம்.

தொண்ணூறு வயதுடைய ஆறுமுகசாமி என்கிற சிவபக்தர் சிதம்பரத்து சிற்றம்பலமேடையில் தேவாரம் பாடுவதற்கு இந்த நாய்கள் விடவில்லை. அவரை மேடையிலே இருந்து தள்ளி விட்டார்கள். அவர் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ பாடவில்லை. தமிழ்நாட்டிலே தமிழில் பாடுவது இந்த நாய்களிற்கு பொறுக்கவில்லை. உலகத்திலேயே இப்படி ஒரு கேவலம் தமிழருக்கு மட்டுமே நடக்கும். இதை அகில உலக தமிழ்நாயகன் கருணாநிதி ஏனென்று கேட்கவில்லை. இனமானக்காவலர் "மானமிகு" வீரமணி கேட்கவில்லை. சுற்றுலா வரும் அப்பாவிச் சிங்களவர்களை அடிக்கச் சொல்லும் "செந்தமிழன்" சீமான் கேட்கவில்லை. "மாவீரன்" நெடுமாறன் கேட்கவில்லை. பாவம், அவரே ஒரு இந்துத்துவவாதி. பிறகு அவர் எப்பிடி பார்ப்பனர்களை கேட்பார்.

ஆறுமுகசாமியிற்கு கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யுனிஸ்ட்டுக்களான மக்கள் கலை இலக்கிய கழகத்தினரே துணையாக நின்றனர். இன்றும் சிதம்பரம் கோயிலை போதுச்சொத்தாக்க வேண்டும் என்று அவரும்,ம.க.இ.க வினருமே போராடுகின்றார்கள். சிதம்பரம் கோயிலை தீட்சிதர் சொத்தாக்காதே!!. தமிழில் பாடும் உரிமையை நிலை நாட்டு!! என்ற கோரிக்கையை நிறைவேற்ற சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியபடியே உயிர் துறப்பேன் என்று அந்த ஏழைக்கிழவன் ஓங்கிக் குரல் கொடுக்கிறான். இவர்களோ மானாட,மயிலாட பார்த்தபடி பணத்தை எண்ணுகிறார்கள். வீழ்ந்து விடாத வீரம் என்று சொல்லிக் கொண்டு கொள்ளையர்களினதும், சாதிவெறியர்களினதும் காலிலே விழுகிறார்கள்.

ஜெயலலிதாவின் காலை அல்ல, காரையே விழுந்து கும்பிடும் அ.தி.மு.க அடிமை நாய்களில் ஒன்றான ஓம்சக்தி சேகர் என்ற கட்டைப்பஞ்சாயத்து ரெளடி சிதம்பரம் கோயில் வழக்கு பற்றி பிரச்சாரம் செய்த ம.க.இ.க தோழர்களை "அம்மாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறீர்களா" என்று அடித்திருக்கிறான். அ.தி.மு.க வின் முட்டாள், அடிமைநாய் என்றாலும் அம்மா என்றால் பார்ப்பனியம், பார்ப்பனியம் என்றால் அம்மா என்பது விளங்கியிருக்கிறது. அதனால் தான் தீட்சிதர்களிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களை அடிக்காவிட்டால் அம்மா கோபிப்பா என்ற பயத்தில் அடித்திருக்கிறான். அம்மா என்றால் பார்ப்பனியம், பார்ப்பனியம் என்றால் அம்மா என்பது தமிழ்நாட்டு மக்களிற்கு எப்போது விளங்கப் போகிறது.