Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கலை-இலக்கிய அரஙகம்–7 (சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு)

இன்னொரு எஸ்.பொ. ஆகியுள்ள — இனியொருவின் சபாநாவலன்

“யர்ரும் சொன்னதை சொல்வார், சொல்வதை செய்வார் வேறொன்றும் புரியாது!” விடிய விடிய ராமர் கதை விடிந்தால் ராமருக்கு சீதை என்ன முறை என்பதுபோல் உள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய புலிப் புரட்சியாளர்களின் தொடர் கேள்விகள். எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக எஸ்.பொ. பாடிய பல்லவியை இப்போ சபாநாவலன் பாடுகின்றார். இதைச் சொன்னால் சொல்பவர்களை அரச ஆதரவாளர்கள் ஆக்கி காட்டுகின்றார்.

நாம் திட்டவட்டமாக சொல்கின்றோம். இந்த மாநாட்டுக்கான எதிரான எதிர்ப்பு அரசியல் புலி பாசிசத்தினால் கட்டமைக்கப்பட்டது. அதன் சாதக பாதக அம்சங்கள் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இதற்கு முன்னாள், இந்நாள் புலம்பெயர் புலிப்பினாமி எழுத்தாளர் கூட்டமும் தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டமும் சேர்ந்து வில்லுப்பாட்டு பாடுகின்றார்கள்!

இவை எல்லாவற்றையும் விட இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து எதிர்ப்புக்கள் எழவில்லை என்பதையும், சாதக-பாதக அம்சங்களை நடுநிலை நின்று எடுத்து சொல்பவர்களையும் தான் காணமுடிகின்றது!. இதை பெரிதுபடுத்துபவர்கள் மேலே சொல்லப்பட்டவர்களே. இவர்களில் வெறுமனமே கேள்விகள் கேட்கும் போர்க்குண மரபில் வந்துநிற்கும் சபாநாவலன், புலிச் சங்கத்தின் நக்கீரனாகி – நீங்கள் எது சொல்லிடினும் பொருள் குற்றம் குற்றமே என நெற்றிக் கண்ணைத் திறக்கின்றார் மாநாட்டாளர்களை நோக்கி!……

“ஊடகவியாளர்களை அனாதைப் பிணங்களாக தெருவோரத்தில்  பேரினவாதிகளின்  பசிக்குப் புசிக்கக் கொடுக்கும்,  இலங்கை அரச பாசிசத்தின் எல்லைக்குள்ளேயே எழுத்தாளர் மாநாடு நடத்தி கேள்வி கேட்கப் போகிறார்களோ என ஒரு கணம் சிந்திக்கத் தோன்றியது. தமிழ்ச் சங்கம் அமைத்து மன்னர்களிடமே வினாவெழுப்பிய  போர்குணத்தின் மரபில் பிறந்ததல்லவோ “சர்வதேச” தமிழ் எழுத்து மரபு!. ஆக ராஜபக்சவின் காலடியில் நடைபெறும், இந்த சர்வதேச விழா முன்னோடி முருகபூபதியிடம் தொடர்பு கொண்டு இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி அறிக்கைவிட்டால் சிக்கல்கள் தெளிவாகும் எனக் கோரியிருந்தேன்.”

1. இலங்கை அரசின் இனப்படுகொலையை “சவதேச” எழுத்தாளர் மாநாட்டு    ஏற்பாட்டாளர்கள் கண்டிக்க வேண்டும்.

2. மாநாடு நடப்பதால் இலங்கை அரசின் இனப் படுகொலையையோ போர்க் குற்றங்களையோ ஏற்றுக் கொள்வதாகாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

புல்லரிக்கின்றது சபாநாவலனின் கேள்வி கேட்கும் போர்க்குண மரபு, போராட்டப் பாரம்பரியம் வைக்கும் கோரிக்கைகள்!.

இங்கிருந்து கொண்டு அங்கே போராடு என்கின்ற புரட்சிகரப் போராட்ட அறைகூவல்!. தாய் -தந்தையர் இறந்தால் போவதற்கான சகலதும் இருந்தும், போகப் பயப்படும் ஜீவன்கள் எல்லாம், இங்கிருந்து மாநாட்டுக்காரர்களுக்கு ஓடர்கள் போடுகின்றார்கள்! நாலு சுவருக்குள் இருந்து முணுமுணுக்காமல் வீதியில் இறங்கிப் போராடினால் என்னவென்று, இவர்களை அங்கிருந்து சொந்த-பந்த-உறவுகள் எல்லாம் கேட்கின்றார்கள். உன் தாயின் இறுதிக்கிரிகைக்காவது வந்தால் என்னவென்று, கேள்விகளை மாற்றிப் போட்டால் தங்களுக்கான விடைதான் மற்றவர்களுக்கும்….இதுதான் மாநாட்டுக்காரர்களுக்கும்!

புலிப் போதகர்கள் இம்மாநாட்டை சர்வதேச புரட்சிகர அகிலத்தின் மாநாடாக கணித்து கோசங்கள் போடச் சொல்கின்றார்கள். அதை அறிக்கைகள் ஆக்கச் சொல்கின்றார்கள்.  இனியொருவில் நாவலனின் கட்டுரைக்கு சில பின்னோட்டக்காரர்கள் கடந்தகால அரசியல்-போராட்டங்களின் கணிப்பீடுகள்-மதிப்பீடுகள் பற்றிய தவறுகளை  சுட்டிக் காட்டுகின்றார்கள்.  உண்மை தான் எங்கும் எதிலும்  புரிதல் பற்றியதும், அதை கேள்விக்குள்ளாக்குவதுமே முக்கியம். இம் மாநாடு பற்றி ஒவ்வொருவரும் தம் புரிதலிருந்து எதிர்ப்பு-ஆதரவு-நடுநிலை பற்றியெல்லாம் பேசுகின்றார்கள்!

எதிர்ப்பவர்கள் எல்லாம் இம் மாநாடு இப்படித் தான் நடை பெறவேண்டுமென வேண்டுகோள்கள் விடுக்கின்றார்கள். இது கடந்த காலங்களில் புலிப் பாஸிசம் தலித் மக்களையும், முஸ்லிம் மக்களையும் நடாத்திய விதம் போன்றதே!. இதில் மாநாட்டுக்காரர்களுக்கு சுயம்-சுயநிர்ணயம் என்பது இல்லையோ?. ஓர் நிகழ்வை நோக்கி அபிப்பிராயம் சொல்வது வேறு, கட்டப்பஞ்சாயத்துப் பாங்கிலான் ஓடர்கள் வேறு!. கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை. அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை என்கின்றார்கள் மாநாட்டாளர்கள்.  இல்லை இனப்படுகொலைகளை கண்டிக்க வேண்டுமென ஓடர்கள் போடுதுகள் கட்டப்பஞ்சாயத்தின் பண்ணாடைகள்.

இதில் எம் ஆதங்கம் இது தான், இம்மாநாட்டில் அரசு இதுவரையில் தன் தலையை நுழைக்கவில்லை.  எதிர்ப்பாளர்கள் வைப்பது போனற் நிபந்தனைகளை வைக்கவில்லை. மாநாட்டாளர்களின் சுயத்தில் தலையிடவில்லை!  இந் நிலையில் அரசு அது செய்யும், இது செய்யும் என்ற கேள்வி ஞானத்தில் இருந்து புலம்பத் தேவையில்லை. அரசு அப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் நீங்களும் அரசும் சுயம்-சுயநிர்ணய மறுப்பில் ஓர் நாணயதின் இரு பக்கங்களே. கடந்த காலங்களில் நாம் சகலவற்றின் ஐனநாயக மறுப்பபையும், சுட்டிக் காட்டியிருக்கின்றோம், எதிர்த்திருக்கின்றோம், அம்பலப்படுத்தியிருக்கின்றோம். அது அரச-புலிப் பாசிசம் முதல், குகநாதனிற்கு எதிரான கட்டப்பஞ்சாயத்து சர்வாதிகார அரசியல் ஈறாக. இந்த மாநாடும் சுயத்தை இழந்தால், பேரினவாத பேழைக்குள் புகுந்தால், அல்லது புகுத்தப்பட்டால் கடந்த காலங்களில் செய்ததைத் தான் செய்வோம். இதில் எம்மை விட மக்கள் செய்ய வேண்டியதை சரியாகச் செய்வார்கள்.

மாவோயிஸ்டுக்கள் முரண்பாடுகளைக் கையாள்வது, தேச-கால-வர்த்தமானம், ஸ்தூல நிலைமைகளை கணக்கில் கொண்டே!. நேபாளம் வரை போய் மாவோயிஸ்டுக்களை சந்தித்து விட்டு வந்தவருக்கு, இதைக் கூட சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என கட்டுரை பிரசுரிப்பார். ஆனால் அது அவருக்கு சரியா வராது.  காரணம் அவர் இப்போ கட்டப் பஞ்சாயத்துக்காரர்களிடம் அல்லவோ “சரியானதைப்” படிக்கின்றார்!  படிப்பிப்பவர்களும் புலியிலிருந்து தானே “புரட்சிவரை” சகலதையும் கற்றுக் கொள்கின்றார்கள். அல்லது ம.க.இ.க.காரர்கள் சொல்வார்களா, இம்மாநாட்டை அரசு தான் நடாத்தவுள்ளதென?

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

1.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 1)

2.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 2)

3.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 3)

4. கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 4)

5. கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 5)

6.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 6)