Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் "தேனிலவு" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை வந்தடைந்திருந்த வேளையில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக வடக்குக்-கிழக்கில் போராடிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலை இயக்கங்களின் திசைவிலகல்களால் விடுதலை இயக்கங்களிருந்து ஒதுங்கியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சியும் கொழும்பை வந்தடைந்திருப்பதைக் காண முடிந்தது.

வடக்குக்-கிழக்குப் பகுதியுடன் ஒப்பிடும்போது கொழும்பு ஓரளவு பாதுகாப்பெனக் கருதியே பெரும்பாலானவர்கள் கொழும்பை வந்தடைந்திருந்தனர். இவர்களில் பலர் முன்பு இலங்கை அரசால் தேடப்பட்டவர்களாகவும், இலங்கை அரசின் சிறைகளில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் விடுதலை செய்யப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். இலங்கை அரச படைகளினதும், இந்தியப் படைகளினதும் கெடுபிடிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளினது கெடுபிடிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சியே பலரும் கொழும்பை வந்தடைந்திருந்தனர்.

எனது நண்பர்களான வசந்தன், அருள் ஆகியோரையும், நாம் புளொட்டில்  இருந்து வெளியேறிய போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் எமக்கு ஆதரவு தந்தவர்களான கண்ணன், அருளானந்தம், பரம் போன்றவர்களையும் கொழும்பில் சந்தித்து  நான் கொழும்பில் தங்குவதற்கு தற்காலிகமாக உதவி செய்யும்படி வேண்டியதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறைகளில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதித்திருந்தனர்.

நிரந்தரமாக தங்குவதற்கான இடத்தை தேடும் பொருட்டு புளொட்டில் எம்முடன் செயற்பட்டு இலங்கை இராணுவத்தினரால் கைதாகி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுதலையாகி கொழும்பில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரமணனையும், கண்டியில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விக்கினமூர்த்தியையும் சந்திக்க முடிவு செய்தேன்.

ரமணனைச் சந்தித்து கொழும்பில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வாடகை வீடொன்றைப் பெறுவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்ட அதேவேளை விக்கினமூர்த்தியைச் சந்திப்பதற்கென கண்டிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தேன். கொழும்பு-கண்டி வீதி நெடுகிலும், கம்பஹாவில் தொடக்கி நிட்டம்புவ, மாவனெல்ல, கேகாலை, கண்டி வரை இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட சிங்கள இளைஞர்கள் வீதிகளில் ரயர் போட்டு எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்த காட்சிகளைக் காண முடிந்தது.

இலங்கை அரசபடைகளின் இச்செயலானது தமிழீழ விடுதலைப் புலிகள் T.E.L.O இயக்கப் போராளிகளை கொன்றொழித்து வீதிகளில் ரயர் போட்டு எரியூட்டிய சம்பவத்தை மீளவும் மனதில் கொண்டுவந்தது. கொழும்பு கண்டி வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட இளைஞர்கள் அனைவரும் J.V.P உறுப்பினர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என அறியப்பட்டிருந்தனர். சிங்கள மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இத்தகைய கொடூரத்தனமான செயல்கள் மூலம் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கெதிரான J.V.P யினரின் தொடர்ச்சியான வன்முறைகள் பெருமளவிற்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

கண்டியில் விக்கினமூர்த்தியை சந்தித்து எனக்குத் தங்குவதற்கான அறையொன்றை வாடகைக்குப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பியிருந்தேன். தென்னிலங்கையில் வாழ்வதற்கு சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட நான் அறவே சிங்கள மொழி தெரிந்திருக்காத நிலையில் சிங்கள மொழியைக் கற்க ஆரம்பித்தேன்.

பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி பிரேமதாச ஆயிரக்ககணக்கில் J.V.P இளைஞர்களை  அழித்தொழித்த அதே நேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்கு மாகாண அரசினால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட இந்தியப் படையினர் ஆதரவுடன் செயற்பட்ட அனைத்து இயக்கங்களையும் மற்றும் முற்போக்கு-ஜனநாயக சக்திகளையும் அழித்தொழித்து விட்டிருந்ததுடன் வடக்குக்-கிழக்கில் ஒரு அரசாங்கத்துக்கு ஒப்பான அதிகாரம் பெற்றவர்கள் போல செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.

பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான "தேனிலவு" முடிவுக்கு வந்திருந்தது. J.V.P யைச் சேர்ந்தவர்களையும் அதன் தலைவர் ரோகண விஜேவீரவையும் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்காவையும் அழித்தொழித்திருந்தன் மூலம் பலம் பெற்றிருந்த பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் வடக்குக் கிழக்கில் E.R.O.S இயக்கம் தவிர்ந்த ஏனைய தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையும் அழித்து பலம் பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் போருக்கானத் தயாரிப்பில் இறங்கியிருந்தனர். இதே காலப் பகுதியில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்குமிடையேயான உறவும் முரண்பாடுகளும் மோசமானதொரு நிலையை அடைந்திருந்தன.

தென்னிலங்கையில் J.V.P அழிக்கப்பட்ட நிலையில், வடக்குக்-கிழக்கு மாகாண சபை செயலற்றதாக்கப்பட்டு இந்தியப்படை இலங்கையிலிருந்து வெளியேறி விட்டிருந்த நிலையில் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போரை நோக்கிய தயாரிப்புக்களை மேற்கொண்டதில் வியப்பேதுமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் "தீப்பொறி"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. எமது ஆதரவாளரான யோகனும் செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் விசாரணையை முகம் கொடுத்துக் கொண்டிருந்தவேளை "தீப்பொறி"க் குழுவில் முன்னணியில் செயற்பட்டுக் கொண்டிருந்த அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்வதற்கான திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களால் நான் கொழும்பை வந்தடைந்து இரண்டு வாரங்களுக்குள்ளாகவே எனது வீடு உட்பட எம்முடன் முன்னணியில் செயற்பட்ட தேவன், காசி(ரகு), விஜயன், சுரேன், சண்முகநாதன் ஆகியோரின் வீடுகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரே இரவில் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர். பெரும்பாலான "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது வீடுகளில் இரவில் தங்காதலால் தமிழீழ விடுதலைப் புலிகளால் செயற்குழு உறுப்பினர் சண்முகநாதனைத் தவிர ஏனையவர்களை கைது செய்திருக்க முடியவில்லை. சண்முகநாதன் அயலவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்குள்ளேயே எமது செயற்பாடுகள் அனைத்தையும் குறுக்கிக் கொண்டமை, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவின் தவறான கணிப்பீடு, எமது இரு தோழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணையில் இருந்த போதும் கூட நாம் எச்சரிக்கையுடன் செயற்படாமை போன்ற காரணங்கள் சண்முகநாதன் கைது செய்யப்படுவதற்கும் ஏனைய "தீப்பொறி" உறுப்பினர்கள் தலைமறைவாகவேண்டிய நிலைக்கும் வழிசமைத்திருந்தன.

பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளின் உச்சக்கட்டம் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியதில் ஆரம்பமாகியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் "இரண்டாவது ஈழப் போர்" எனப் பெயரிட்டு தமது தாக்குதலை இலங்கை அரசபடைகள் மீது தொடுத்திருந்தனர். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கையை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்திருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களைச் சுற்றி வளைத்த தமிழீழ விடுதலைப் புலிகள். தம்மிடம் சரணடைந்தால் பொலிசார் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற அறிவித்திருந்திருந்ததால் 600க்கும் மேற்பட்ட பொலிசார் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தனர். ஆனால் போர்க்கைதிகளாகச் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட பொலிசாரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்திருந்தனர்.

வடக்கில் அரச படையினரின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் அரசின் கவனத்தைத் திசை திருப்பவும் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தில் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் படுகொலை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிங்கள மக்கள் மீதானதும் முஸ்லீம் மக்கள் மீதானதுமான தாக்குதல்களால் அரசால் பயிற்றுவிக்கப்பட்ட ஊர்காவல்  படையினரும் அரச படைகளும் தமிழ்க் கிராமங்கள் மீதும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் பழிவாங்கல்களைத் தொடங்கினர். பல அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதுடன் பலர் காணாமலும் போயினர்.

இலங்கையின் இனவாத அரசுக்கு மட்டும் எதிரானது எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டம், அக்கூற்றிலிருந்து என்றோ திசைவிலகிச் சென்றுவிட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் "இரண்டாவது ஈழப் போர்" எனப் பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான தீவிர வெறுப்புடன் கூடிய தாக்குதல்ககளாக   மூர்க்கத்தனத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழ் மக்கள் அரச படைகளாலும் ஆயுதம் தரித்த ஊர்காவல் படையினராலும் பலி கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டிருந்தது. ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களும், பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இலங்கை அரசபடைகளால் அப்பாவித் தமிழ் மக்களும்  நூற்றுக்கணக்கில் பலியாகிக் கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் "இரண்டாவது ஈழப் போர்" வடக்குக்-கிழக்கில் இலங்கை அரச படைகளுடனான மோதல்களுடனோ, அப்பாவிச் சிங்கள, முஸ்லீம் மக்கள் மீதான மூர்க்கத்தனமான தாகுதல்களுடனோ மட்டும் ஆரம்பிக்கப்பட்டதொன்றல்ல.  ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவத்துக்கு சவாலாக அல்லது தடையாக இருக்கக்கூடிய அனைவரையும் அழித்தொழிப்பதையும் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டதொன்றாகும்.

இம்முறை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரும் அதன் தலைவர் கந்தசாமி பத்மநாபாவும் (ரஞ்சன்) தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான இலக்காக அமைந்திருந்தனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவும் அவருடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த 15 முன்னணி உறுப்பினர்களும் சென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள்  ஆரம்பித்த காலம் தொட்டு தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் பின்பற்றிவந்த தனிநபர் பயங்கரவாதம் அதன் முத்திரையை பத்மநாபாவின் படுகொலையிலும் பதித்துக் கொண்டது. EROS அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும், ஈழமாணவர் பொது மன்றம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஸ்தாபகர்களில் ஒருவருமான பத்மநாபா தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்திய மண்ணில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் தமது ஏகத் தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவரையும் வடக்குக்-கிழக்கில் மட்டுமல்ல அந்நிய மண்ணில் வைத்தும் அழித்தொழிப்பதற்கு ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்பதையே எமக்கு எடுத்துக் காட்டியிருந்தது.