Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எழுந்து வாருங்கள், அனைவரும் இணைந்து வாருங்கள்.

காடுகள் மேடுகள் திருத்தி

மக்கள் உழுதுண்டு வாழ்ந்திடும் போது

கொடிய மிருகத்தின் இரையென மனிதரை

முறைவைத்துக் கொன்று கொழுக்கிற கூட்டத்தை (வர்க்கத்தை)

அடியொடு அழித்து மனித விடுதலை காண

எழுந்து வாருங்கள்

அனைவரும் இணைந்து வாருங்கள்.

 

என்ன கொடூரம்..!

என்னென்ன வன்செயல்..!!

எண் சொல்லுமோ அழிப்புகள்..!!!

 

அடங்கி முடங்கின புனங்கள்

முடங்கி ஒடுங்கின மலைகள்

ஒடுங்கி எரிந்தின வனங்கள்

எரிந்து எழுந்தன அலைகள்

எழுந்து மலைத்தன மனங்கள்..,

 

இதைப் பார்த்த உலகை

தம் பக்கம் இழுக்க முயன்று

தோர்த்து மடிந்தது தனித் தமிழத் தேசம்..,

 

இப்படித் தனித்துத் தனித்து

தனித் தனி, தனித்த தடிகளாய்

முறிந்து தவிக்கும் ஒவ்வொரு காலத்தைப் பற்றி

மூச்சுத் திணறிய காற்றே சாட்சி சொல்லும்..,

 

தனித் தனி மக்கள் தவியாய்த் தவித்ததை..!

அருவியாய் பாய்ந்த ரத்தத்தின் வாடையை..!!

மனிதர் சுயமாய் வாழ்ந்திட மறுத்ததை..!

அவர் வாழ்வை சடுதியாய் பூமியுள் புதைத்ததை என..!!

 

நிலத்தடி உயிர்கள் உண்டு மகிழ்ந்திடும்

மனிதரைக் கொன்று மதங்கள் சிரித்திடும்

மனித முகமாய் சிரிக்கின்ற பேய்களின்

கொட்டங்கள் திட்டங்கள் அனைத்தும் அடக்கி

அத்தனை திமிரையும் அடியொடு பொசுக்கி

மக்களின் வாழ்வில் நிம்மதி காண

எழுந்து வாருங்கள்

அனைவரும் இணைந்து வாருங்கள்.

 

மாணிக்கம்.

17.06.2014