Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியப் படையின் வெளியேற்றமும் வடக்குக்-கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 62

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படையின் வெளியேற்றத்தையடுத்து பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைக்கெதிராக ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை தமது போராட்டம் மூலம் விரட்டியடித்துவிட்டதாகக் கூறி ஆர்ப்பரித்தபடி வன்னியில் அடர்ந்த காடுகளுக்குள் தலை மறைவாக ஒளித்திருந்த புலிகள் மீண்டும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு திரும்பியிருந்தனர்

ஆனால் இலங்கையிலிருந்து இந்தியப்படை விலகிக்கொண்டதென்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தியப்படைக்கெதிரான தாக்குதல்களால் மட்டுமே நிகழ்ந்ததென்ற கருத்தானது தவறானதாகும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின் இந்தியாவிலும் இலங்கையிலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் - பாராளுமன்றத் தேர்தல்கள் - இந்தியப்படை இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு காரணங்களாக அமைந்திருந்தன.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் பலாத்காரமாக கடத்திய இளைஞர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த "தமிழ் தேசிய இராணுவம்" மீதும், வடக்குக்-கிழக்கு மாகாண சபையில் ஆதிக்கம் செலுத்திய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் உட்பட ஏனைய இந்திய ஆதரவு குழுக்கள் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த ஏதுமறியா இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தனர். வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையை தடயமில்லாமல் செய்வது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரையும் அவர்களது மாகாண சபை அரசுக்கு பாதுகாப்பளிக்கும் தமிழ்த் தேசிய இராணுவத்தையும் அழித்தொழிப்பது என்பதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முழுக் கவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு வடக்குக் கிழக்கு மாகாண அரசை கலைத்துவிடுவதான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஐக்கிய தேசியக் கட்சி அரசினதும் ஐக்கியப்பட்ட நோக்கங்களான இந்தியப்படை வெளியேற்றம் வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையை செயலற்றதாக்குவது என்பன நிறைவேற்றப்பட்டிருந்தன.

இந்தியப்படையின் வெளியேற்றத்தையடுத்து வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையை செயலற்றதாக்கிய பின் வடக்குக்-கிழக்கில் தமது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்துவதை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற உறுதியான கருத்துடனும் தாமல்லாத அல்லது தமது கருத்துக்கு மாற்று அரசியல் கருத்துக் கொண்டோர் எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற உறுதியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கடந்தகாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாத ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், முற்போக்கு ஜனநாயக கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் அனைவர் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். வடக்குக்-கிழக்கில் இலங்கை அரச படைகளின் ஆதிக்கமற்ற ஒரு சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் மீதான ஆதிக்கம் நிறுவப்பட்டுக்கொண்டிருந்தது.

"தீப்பொறி"க் குழுவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நாம் இப்பொழுது இலங்கை அரசபடைகளையோ அல்லது இந்தியப்படையையோ முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கவில்லை. ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளையே நாம் முகம் கொடுக்க வேண்டியவர்களாய் இருந்தோம். "தீப்பொறி"க் குழுவாக செயற்பட்டுக் கொண்டிருந்த எமதும் எம்போன்று கடந்தகாலங்களில் அரசியலில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவரினதும் நடவடிக்கைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தனர்.

தமது தலைமைக்கும், தமது பிற்போக்கு ஜனநாயக விரோத அரசியலுக்கும் தடையாக இருப்பவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் விசாரணை என்ற பேரில் அழைக்கப்பட்டோ அல்லது கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டோ தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் விசாரணைக்கென அழைக்கப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே "விசாரணை"யின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இலங்கை இராணுவத்தினதும் இந்தியப்படையினதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் எமது அரசியல் செயற்பாடுகளையும், எமது சந்திப்புக்களையும் நிகழ்த்தி வந்த எம்மால் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழும், அவர்களது உளவுப்பிரிவினரது கண்காணிப்புக்கு மத்தியிலும் செயற்படுவது சுலபமானதொன்றாக இருந்திருக்கவில்லை. அரசியல் பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் மேல் மட்டுமல்லாது சமூகத்தின் அனைத்து மக்கள் மீதானதுமாக தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அவர்களது உளவுப்பிரிவினரதும் கண்காணிப்பு நீடித்துச் சென்று கொண்டிருந்தது.

நாம் எமது கொள்கை உருவாக்கம் மற்றும் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவில் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளோ எம்மை அழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் அழிப்பு, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அழிப்பு, பல்கலைக்கழக மாணவர்கள் கடத்தல் மற்றும் படுகொலைகள், கருத்துச் சுதந்திர மறுப்பு, என்பனவற்றையெல்லாம் நாம் கண்டுகொண்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளால் எமக்கும் எமது செயற்பாடுகளுக்கும் ஆபத்து நிகழும் என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எமது அரசியல் செயற்பாடுகளை அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் "தீப்பொறி" செயற்குழு அங்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த ஒரு சரியான பார்வை, சரியான மதிப்பீடு "தீப்பொறி"ச் செயற்குழுவிடம் இருந்திருக்கவில்லை. இதனால் பின்நாட்களில் எமது தோழர்கள் பலரை அநியாயமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் காவு கொடுக்க வேண்டியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் எம்மீது தமது கவனத்தை முழுமையாகத் திருப்பிவிட்டதன் வெளிப்பாடாக எமது நெருங்கிய ஆதரவாளரும், யாழ்ப்பாணம் "சுந்தரம் பிறதேஸ்" மருந்துக்கடை உரிமையாளரின் மகனுமான யோகன் (யோகசுந்தரம்) விசாரணைக்கென தமிழீழ விடுதலைப்புலிகளால் அவர்களது முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நாம் "தீப்பொறி"க் குழுவாக செயற்படத் தொடங்கிய நாட்களிலிருந்து எமது கருத்துக்களுடன் உடன்பாடு கொண்டு எம்முடன் தொடர்பை ஏற்படுத்தி இங்கிலாந்து, சுவிற்சலாந்து, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வந்தவர்கள் எமது தேவைகளுக்கான பணத்தை யோகனின் யாழ்ப்பாண வங்கிக் கணக்குக்கே அனுப்பி வந்திருந்தனர். யோகனுடனான தொடர்புகள் அனைத்தையும் "தீப்பொறி"ச் செயற்குழு உறுப்பினரான தர்மலிங்கம் இரகசியமாக பேணிவந்திருந்தார். யோகனை விசாரணைக்கென தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்ததானது "தீப்பொறி"க் குழுவுடன் யோகனுக்கு இருக்கும் உறவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நாம் எண்ணியிருந்தோம். இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணையை முகம் கொடுப்பதற்கு யோகன் எம்முடன் பேசிய பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமுக்கு சென்றிருந்தார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமுக்கு விசாரணைக்கெனச் சென்ற யோகன் பல நாட்களாக வீடு திரும்பவில்லை. இலங்கை அரசபடைகள் தமது முகாம்களுக்குள் முடங்கிக்கிடந்திருந்த போதும், இந்தியப்படையினர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டிருந்த போதும் கூட சுதந்திரக் காற்றை சுவாசிப்பதிலிருந்து நாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டுக்கொண்டிருந்தோம். விசாரணைக்கென முகாமுக்கு அழைக்கப்பட்ட யோகன் பல நாட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்படாதது நிலைமைகள் மோசமடைந்து வருவதையே எமக்கு எடுத்துக்காட்டியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்மீதான கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் "தீப்பொறி"ச் செயற்குழுவில் எமது அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்துப் பேசிய நாம், தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமுக்கு விசாரணைக்குச் சென்ற யோகன் எம்முடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என இனம்கண்டுகொண்டிருந்த போதும்கூட எமது பாதுகாப்புக் குறித்த எச்சரிக்கை கொண்டிருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமுக்கு விசாரணைக்கெனச் சென்ற யோகன் விடுவிக்கப்படாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. இதனால் எமது தேவையற்ற நடமாட்டங்களையும் சந்திப்புக்களையும் தவிர்த்துக் கொண்டிருந்தோம். விசாரணைக்கென அழைக்கப்பட்ட யோகனின் நிலைகுறித்து அறிய விரும்பி செயற்குழு உறுப்பினர் தேவனின் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பி யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்வீதியால் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்துக்கு முன் எனக்கெதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்த செல்வி (செல்வநிதி தியாகராஜா - சேமமடு, வவுனியா) சைக்கிளிலிருந்து இறங்கியவராக என்னைப் பேசுவதற்கு அழைத்தார். எனது நலத்தை விசாரித்த செல்வி என்னுடன் பேசுவதற்கு தான் இருக்கும் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட யோகன் பல நாட்களாக வீடு திரும்பாத விடயமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் எம்மைக் குறிவைத்துச் செயற்பட ஆரம்பித்து விட்டார்கள் என்ற விடயத்தையோ செல்வி அறிந்திருக்கவில்லை. இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புளொட்டுடன் இணைந்து செயற்பட்டிருந்த செல்வி, நெருக்கடிமிக்க காலங்களில் புளொட்டின் வளர்ச்சியிலும், அதிலும் குறிப்பாக புளொட்டின் மகளிர் அமைப்பின் வளர்ச்சியிலும் தனது கடின உழைப்பைச் செலுத்தி வந்திருந்தார்.

புளொட் உள்முரண்பாடுகளால் பிளவுற்றபோது உமாமகேஸ்வரனின் தலைமையின் பிற்போக்குத்தனங்களை செல்வி இனங்கண்டு புளொட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். புளொட்டில் தோழர் தங்கராஜாவின் அரசியல் பாசறையிலும், வழிநடத்தலிலும் வளர்ந்த செல்வி, முற்போக்குக் கருத்துக்களுடன் தன்னை இனம்காட்டிக் கொண்டிருந்ததுடன் மட்டுமல்லாது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுடனும் தன்னை இனம் காட்டியிருந்தார். புளொட்டிலிருந்து ஒதுங்கியிருந்த செல்வி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்ததுடன் முற்போக்கு நாடகங்களின் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். செல்வியினுடைய முற்போக்கு அரசியல், பெண்விடுதலை குறித்த கருத்துக்களுடன் உடன்பாடு கொண்ட பல தோழர்களும், நண்பர்களும் புளொட்டின் சிதைவின் பின்பும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மிரட்டல்களாலும் வடக்குக்-கிழக்கை விட்டு அல்லது இலங்கையை விட்டு வெளியேறிவிட்டிருந்ததுடன் செல்வியுடைய கருத்துக்களுடன் உடன்பாடு கொண்டிருந்த செல்வியின் நெருங்கிய நண்பர்களான தில்லைநாதன் (தில்லை), விஜயரட்ணம் போன்றோர் ஆசிரியர் தொழிலுக்காக பிற மாவட்டங்களுக்குச் சென்றிருந்தனர். பேசுவதற்கு தனக்கு நெருக்கமானவர்கள் யாருமற்ற நிலையிலேயே செல்வி தனது உள்ளக்கிடக்கையை அல்லது உள்ளக்குமுறலை என்னுடன் பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தார் என எண்ணினேன். செல்வியினுடைய நிலையைப் புரிந்துகொண்டிருந்த நான், ஆபத்து நிறைந்த புறச்சூழலையையும் கூடவே நன்கு புரிந்து கொண்டிருந்தேன். ஏற்கனவே புளொட் அமைப்பில் ஒன்றாகச் செயற்பட்டிருந்த நாம், ஒரே அரசியல் கருத்துக்களையும் சமூகப் பார்வைகளையும் கொண்டிருந்த நாம் வீதிகளில் சந்தித்துப் பேசுவது கூட "சதி"த் திட்டமாகவோ அல்லது "துரோக"த்தனமாகவோ தமிழீழ விடுதலைப் புலிகளால் நோக்கப்படும் என்பதையும் அறிந்திருந்தேன். இதனால் வீதியில் சில நிமிடங்கள் நின்று பேசுவதைக் கூட தவிர்க்க விரும்பினேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செல்வியுடன் ஒன்றாகக் கற்றுக் கொண்டிருந்த எனது சகோதரியும் கூட செல்வியுடன் நட்பாக இருந்ததால் எனது சகோதரியுடன் எனது வீட்டுக்கு வந்து பேசும்படி செல்வியிடம் கூறியிருந்ததையடுத்து செல்வி அதற்குச் சம்மதித்திருந்தார். ஆனால் செல்வியினுடைய பேச்சில் ஒருவித அவசரமும் ஆதங்கமும் கூடவே கலந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சில நிமிடங்களுக்குள்ளாகவே செல்வியுடன் பேச்சை முடித்து விட்டு வீடு சென்றடைந்த நான் எனது சகோதரியிடம் செல்வியை வீட்டுக்கு அழைத்துவருமாறு கூறிவிட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தின் நிலையையையும் அது வந்தடைந்திருக்கும் இடத்தையும் எண்ணிப் பார்த்தேன்.

இலங்கை அரசின் இனப்பாகுபாட்டுக்கெதிராகவும், இன ஒடுக்குமுறைக்கெதிராகவும், ஜனநாயக மறுப்புக்கெதிராகவும் போராடிய நாம், இருந்த குறைந்த பட்ச ஜனநாயகத்தையும் தொலைத்து விட்டவர்களாகக் காணப்பட்டோம். ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே அமைப்பில் இணைந்து செயட்பட்டிருந்தோம், ஒரே அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தோம் என்ற காரணமே செல்வியும் நானும் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் பேசமுடியாது என்ற நிலையை தோற்றுவித்திருந்தது.<

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பேரால் தமிழ்ச் சமுதாயத்தை இருண்ட யுகத்துக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து கொண்டிருந்தனர்

(தொடரும்)

23/06/2012

 

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

 

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

 

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

 

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

 

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

 

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

 

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

 

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

 

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

 

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

 

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51

 

52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52

 

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53

 

54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 54

 

55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 55

 

56.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 56

 

57.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 57

 

58.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 58

 

59.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 59

 

60.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 60

61.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 601