Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"பற நாயே" கூறுபவர்களும் - அதைக் கண்டிப்பவர்களும்

யாழ். பல்கலைக்கழகக்தில் இந்துத்துவம் ஆட்டம் போடுகின்றது என்று கருத்து ரீதியாக கூறியதை எதிர்த்து, போட்டுத் தள்ளும் புலிகள் பாணியில் இரா.துரைரட்டனம் "பற நாயே" என்று கூறினார். தமிழ் தேசியம், ஊடகவியல் இரு தூண்களில் புளுத்ததால் வாழ்நாள் விருதுக்குரிய மாமனிதனாக காட்சி அளித்தவர். இதனால் அவர் கூறியது சரி, பிழை இரண்டு அணியாக பிரிந்து மோதுகின்றனர். இந்த பின்னணியில் தமிழ்(புலித்) தேசியத்தின் முரண்பட்ட அணிகள் ஒருபுறம் இதற்குள் முட்டி மோதுவதும், மறுபக்கத்தில் போட்டியிடும் ஊடகவியலில் பிரமுகர்களும் தங்கள் இருப்புக்காக முட்டி மோதுவதும் நடக்கின்றது.

தமிழ்தேசியத்தை பாதுகாக்கும் சாதிய பின்னணியில் - "மன்னிப்புக் கேட்பதன்" மூலம் இதற்கு பரிகாரம் காணலாம் என்று தங்களை அறிவுஜீவிகளாக கருதுகின்றவர்கள் "அறிவுபூர்வமாக" கூறுவதும், வேறு சிலர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை அவர்கள் தங்களுக்கு இடையில் பேசி இதற்கு தீர்வு கணலாம் என்றும் கூறுகின்றனர்.

மறுபக்கம் தங்களை மாற்றுக் கருத்தாளராக கூறிக்கொள்கின்றவர்கள், இதைக் கண்டிப்பதன் மூலம் இதற்கு தீர்வு காண முனைகின்றனர்.

இப்படி தங்கள் இந்த செயல்கள் மூலம் ஒட்டுமொத்தத்தில் சாதிய சமூகத்தின் இருப்பை பாதுகாக்க முனைகின்றனர். சாதியை நடைமுறையில் ஒழிக்க போராடாதவர்கள், வெறும் கண்டணங்கள் மூலம் சாதியை பாதுகாக்கின்றனர் என்பதே உண்மை.

தமிழ் தேசியம் முதல் மாற்றுக்கருத்து கொண்டோர்கள் வரை, சாதியை நடைமுறையில் ஓழிக்க போராடாத வரை, எவரும் "பற நாயே" என்று சொன்னதைக் கண்டிக்கத் தகுதியற்றவர்கள்.

சாதி எதார்த்தமானது. அது பிறக்கும் போதே சாதி அடையாளத்தையும், சாதிய வாழ்க்கை முறையையும் கொண்ட வாழ்க்கையில் வாழ்ந்தபடி, சாதியை ஒழிக்கப் போராடாது கண்டித்தல், நான் சாதிக்கு எதிரானவன், நான் சாதி பார்ப்பதில்லை என்பதெல்லாம் போலித்தனமானது.

உண்மையில் இவர்கள் தங்கள் சாதிய சிந்தனையையும், சாதிய வாழ்வையும் வெளிப்படையாக வெளிப்படுத்தியதைத்தான் தான் கண்டிக்கின்றனர். சாதியை தங்கள் "தமிழ்" சமூகத்தில் வைத்திருக்கும், தங்கள் சாதிய சமூக இருப்பை கண்டித்து அதை ஒழிக்க களத்தில் போராடுவதில்லை.

இரா துரைரட்டனம் "பற நாயே" என வெளிப்படையாகச் சொன்னார் என்பது, தற்செயலான அடையாளம் மட்டும் தான். உள்ளே சாதி இருப்பது இதைக் கண்டிப்பவர்களுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை.

திருகோணமலை நகரசுத்தி தொழிலாளர்கள் தங்கள் உரிமையைக் கோரிய போது சாதியின் பெயரால் கூட்டமைப்பு திட்டியது முதல் எத்தனையோ சாதிய ஆணாதிக்க வசைச் சொற்கள் மூலம் "தமிழ் இனவாத" அரசியல் அதிகாரத்தை கொண்டதே இந்த சாதிய தமிழ் சமூகம்.

இந்து வெள்ளாள யாழ் மேலாதிக்க இனவாத தமிழ் சமூகம் தன் நடத்தையை கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது, "பற நாயே" என்று கூறிவிடுகின்றது. இதற்கு வெளியில் இதற்கு விளக்குப் பிடிக்க முடியாது.

இந்த சாதிய தமிழ் வக்கிரத்தை வெளிப்படுத்தியதை நியாயப்படுத்த போராட்டத்தை இந்தியர்கள் காட்டிக் கொடுத்ததாக கூறுகின்ற தமிழ் தேசியப் பன்னாடைத்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். காட்டிக் கொடுத்ததாகக் இவர்கள் கூறும் போராட்டமானது, அமெரிக்கா வரை பாய் விரித்து படுக்க அழைத்ததன் மூலம் தன்னைத்தான் காட்டிக் கொடுத்து அழித்துக் கொண்டதே உண்மை.

தமிழனின் பெயரில் சாதியை பாதுகாக்கும் யாழ் மேலாதிக்க குறுந்தேசிய போராட்டத்தினை வழி நடத்தியதில், இரா துரைரட்டனம் போன்றவர்கள் தூண்கள். இவர்கள் தமிழர்களுக்குள் தமிழனை ஒடுக்கும் சாதியத்தை கொண்டு, போராட்டத்தையே அமெரிக்க கைக்கூலிப் போராட்டமாக நடத்தி தோற்கடித்தவர்கள்.

இன்று இந்து சாதிய ஆணாதிக்க உடைகளை பல்கலைக்கழகத்தில் திணிக்க முற்பட்டதும் அதை எதிர்த்த கருத்துக்களை சாதியின் பெயரால் வெளிப்படையாக வசைபாடுவதன் மூலம் தமிழ் தேசிய சாதியம் அம்பலமாவது கண்டு அதை மூடிமறைக்க முனைவதே சாதியை ஒழிக்க முனையாத கண்டனங்களின் மூலம் நடந்தேறுகின்றது.