Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 (இறுதிப்பாகம்)

"தீப்பொறி"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.

இலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.

 

கொழும்பில் அமைந்திருந்த சோவியத் கலாச்சார நிலையத்துக்கு சென்றிருந்த நான் நிலைமைகள் மேலும் மோசமடையலாம் என்பதால் நுகேகொட என்னுமிடத்தில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அறைக்குள் இருந்து கொண்டேன். சிறிது நேரத்துக்குள்ளாகவே எனது பெயரை அழைத்தவாறு வீட்டின் உரிமையாளர் அறைக்கதவைத் தட்டினார்.

கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் பதட்ட நிலையை தோற்றுவித்திருந்ததால் என்னை வீட்டிலிருந்து வெளியேறும்படி கூறுவதற்காகவே வீட்டின் உரிமையாளர் கதவைத்தட்டுகின்றார் என எண்ணியவாறு கதவைத் திறந்தேன்.  "பயம்கொள்ள வேண்டாம்" என வீட்டு உரிமையாளர் என்னிடம் தெரிவித்தார். "அரச படையினர் தேடுதலுக்காக வீட்டுக்கு வந்தால் அவர்களுடன் நான் பேசுவேன், பயம்கொள்ள வேண்டாம்" என வீட்டு உரிமையாளர் கூறிச் சென்றார்.

இந்தச் சம்பவம் இலங்கையின் பேரினவாத அரசுகளிலிருந்து சாதாரண சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றனர் என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளால் கொழும்பில் அப்பாவி மக்களை பலிகொள்ளும் தற்கொலைத் தாக்குதல்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப்  புலிகளிலிருந்து தமிழ் மக்களை எப்படி வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தது.

ஆனால் 1990ம் ஆண்டு யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் தமிழீழ விடுதலைப்  புலிகளால் வெளியேற்றப்பட்ட போது வடமாகாணத்திலிருந்த எந்தவொரு தமிழ்ப் பிரஜையும் முஸ்லீம் மக்களுக்கு உதவிசெய்ய முன்வராதவர்களாக, முஸ்லிம் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகக் காணப்பட்டனர் என்பதுதான் உண்மையாகும். யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் "தீப்பொறி"க் குழுவினர் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளாலும் கைதுகளாலும் வடக்கில் எமது செயற்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டது.

கொழும்பில் தங்கியிருந்த "தீப்பொறிக்" குழு உறுப்பினர்களிடத்தில் அவநம்பிக்கையும் எமது பின்னடைவுகள் குறித்து தொடர்ந்த விமர்சனங்களும் எழுந்து கொண்டிருந்ததுடன் செயற்பாடுகளில் மந்தநிலையையும் காண முடிந்தது. "தீப்பொறி"ச் செயற்குழுவின் கடந்தகால செயற்பாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்களை செயற்குழுவில் அங்கம் வகித்திராத உறுப்பினர்கள் மட்டுமன்றி செயற்குழு உறுப்பினரான நானும் கூட தொடர்ந்து முன்வைத்திருந்தேன்.

"செயற்குழு உறுப்பினர்" ரகுமான்ஜானின் முன்மொழிவில் தீப்பொறிச்  செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் (கிறநைட்) தாக்குதல், நவ JVP இயக்கத்தைச் சேர்ந்தவரும் சிங்கள இடதுசாரியுமான சுனிமெல் என்பவர் "தீப்பொறி"க் குழுவினருடன் இணைந்து செயற்பட விரும்பியபோது இடதுசாரியம் பேசியபடி இனவாத நோக்கில் சுனிமெல்லை "தீப்பொறி"க் குழுவுடன் இணைத்துக் கொள்ள மறுத்திருந்தமை, வடக்கில் நெருக்கடியான காலகட்டத்தில் "தீப்பொறி"க் குழுவின் சில செயற்பாடுகளை தென்னிலங்கைக்கோ அல்லது இந்தியாவுக்கோ நகர்த்துவதன் மூலம் "தீப்பொறி"க் குழுவை சரியான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு மாறாக யாழ்ப்பாணத்துக்குள்ளே எமது செயற்பாடுகளை குறுக்கிக் கொண்டதன் மூலம் வடக்கில் "தீப்பொறி"க் குழுவின் செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முழுமையாக முடக்கப்பட்டதுடன் "தீப்பொறி"க் குழுவின் பல உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட நேர்ந்தமை, கடந்த கால எமது போராட்டங்களிலிருந்து கற்றுக் கொள்ளத் தவறிய "தீப்பொறி"ச் செயற்குழு உறுப்பினர்கள் "தேசிய இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு தமிழீழமே" என்பன போன்ற தவறான அரசியல் மற்றும் இராணுவ வழிமுறைகளுக்கூடாக செயலற்ற நிலைக்கு வந்தடைந்திருந்தோம்.

"சரியான அரசியல் மார்க்கமும் இராணுவ மார்க்கமும் போராட்டப் போக்கிலேயே தோன்றுகிறது" எனக்கூறி "தீப்பொறி"ப் பத்திரிகையுடன் முன்வந்த நாம் சரியான அரசியல் மார்க்கத்தையும் இராணுவ மார்க்கத்தையும் போராட்டப் போக்கிலே உருவாக்கத் தவறியிருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் குறுகிய தேசியவாத, இனவாத, பிரிவினைவாதக் கருத்துக்கள் சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொண்டோர் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன.  இதற்கு "தீப்பொறி"ச் செயற்குழு உறுப்பினர்களும் கூட விதிவிலக்காக இருக்கவில்லை. குறுகிய தேசியவாதத்துக்கும், பிரிவினைவாதத்துக்கும், ஏன்? இனவாதத்துக்கும் கூட இடதுசாரியத்தின்  பெயரால் இவர்கள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள் அல்லது முற்போக்காளர்கள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட பலரும் சிங்கள பெருந்தேசியவாதத்துடனும் தமிழ்க் குறுந்தேசியவாததுடனும் சமரசம் செய்து சரணடைந்திருந்தனர்.

சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கும் தமிழ்க் குறுந்தேசியவாதத்திற்கும் எதிராகக் குரல்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், போராடியவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கை கொண்டவர்களாக விளங்கியிருந்ததுடன் சிறு குழுக்களாகவுமே காணப்பட்டனர். சிங்களப் பெருந்தேசியவாதமும் தமிழ்க் குறுந்தேசியவாதமும் இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் மீளமுடியாத ஒரு போருக்குள், மனித பேரழிவுகளை நோக்கிய ஒரு போருக்குள் இழுத்துச் சென்று கொண்டிருந்தன.

இலங்கை வாழ் மக்களின் பேச்சுச்சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டு தாய்நாட்டின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் பாசிசச் சூழல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சமூகத்தின் கீழ்த்தட்டைச் சேர்ந்த வறிய குடும்பங்களின் இளைஞர்களும் யுவதிகளும் "தாய்நாட்டைக் காப்பதற்காக"வும் "மண் மீட்பு"க்காகவும் நடைபெற்ற போரில் களத்தில் பலிகொள்ளப்பட்டுக் கொண்டிருந்ததுடன் ஆயிரக்ககணக்கில் அப்பாவிப் பொதுமக்களையும் பலிகொள்வதை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

1985 ஆரம்பப் பகுதிகளில் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறி புளொட்டின் அராஜகங்களை வெளிக்கொணர்ந்ததோடு மட்டுமல்லாமல் ஈழ விடுதலைப் போராட்டத்துள் தோன்றி வளர்ந்து  கொண்டிருந்த அராஜகத்தையும் ஜனநாயக விரோதப் போக்குகளையும் மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்து மக்களை விழிப்படையுமாறும், போராடுமாறும் வேண்டுகோள் விடுத்த "தீப்பொறி"க் குழு, தவறான அரசியல் மற்றும் இராணுவக் கண்ணோட்டத்துடன் தொடர்ச்சியான தவறுகள், தேக்கங்கள், பின்னடைவுகள் மூலமாக விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைக் கொண்ட குறுகிய வட்டமாக மாற்றம் அடைந்திருந்தது.

எமது கடந்த காலத் தவறுகளிருந்து கற்றுக் கொள்ளத் தவறுதல், அல்லது தவறுகளை சுயவிமர்சனம்  செய்து தவறுகளிருந்து மீண்டு வருதல் என்பது "தீப்பொறி"ச் செயற்குழுவைப்  பொறுத்தவரை நடைமுறையில் இல்லாததொன்றாகவே காணப்பட்டது. இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடி உயிரிழந்த இளைஞர்களும் யுவதிகளும், ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும், அப்பாவிப் பொதுமக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கினால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள், யுவதிகள், புத்திஜீவிகள், அப்பாவிச் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் எனப் பட்டியல் நீண்டுகொண்டிருந்தது.

செல்லத்துரை தர்மலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட எமது ஆதரவாளரும் யாழ்ப்பாணம் "சுந்தரம் பிறதேஸ்" மருந்துக்கடை உரிமையாளரின் மகனுமான யோகன் (யோகசுந்தரம்), தீப்பொறிச் செயற்குழு உறுப்பினர்களான கைதடியைச் சேர்ந்த செல்லத்துரை தர்மலிங்கம், சண்முகநாதன் (சண்முகவடிவேல்), திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த டொமினிக் (சூசைப்பிள்ளை நோபேர்ட்) ஆகியோர்  உட்பட சேமமடுவைச் சேர்ந்த செல்வி (செல்வநிதி தியாகராஜா) , தில்லை (தில்லைநாதன்), மனோகரன் ஆகியோர் கொடூர சித்திரவதைகளின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.  தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிச செயற்பாடுகள் ஒருபுறமும் அரச  பயங்கரவாதம் மறுபுறமுமாக இலங்கை வாழ் மக்கள் "கற்கால" யுகத்தை நோக்கி இழுத்துச்செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.

டொமினிக்

தில்லை (தில்லைநாதன்)

செல்வி (செல்வநிதி தியாகராஜா)

தமிழீழ விடுதலைப் புலிகளால் டொமினிக் கைது செய்யப்பட்டபின் "தீப்பொறி"ச்  செயற்குழுவுக்குள் இருந்து செயற்படுவது மட்டுமல்லாமல் "தீப்பொறி"க் குழுவுக்குள் செயற்படுவதும் கூட எந்தவித பயனுமற்றது என்பதனை உணர்ந்தேன். "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் செயற்குழு உறுப்பினர்களின் தவறான அரசியல் மற்றும் இராணுவ வழிமுறைகளுக்கெதிராக போராடியிருந்த போதும் அதில் எந்தவித முன்னேற்றத்தையும் கண்டிருக்கவில்லை. "தோல்விகள் வெற்றிக்கான முதற்படி" என்பார்கள். ஆனால் "தீப்பொறிச்" செயற்குழுவைப்  பொறுத்தவரை எமது தோல்விகள் வெற்றிக்கான முதற்படியாக அமைந்திருக்கவில்லை. கொழும்பில் எஞ்சியிருந்த "தீப்பொறி"ச் செயற்குழு உறுப்பினர்களான ரகுமான்ஜான், தேவன் ஆகியோருடன் தொடர்ந்து பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ எதுவித விடயமும் இருக்கவில்லை. நாட்கணக்கான  விவாதங்கள், வருடக்கணக்கான செயற்பாடுகள் எதுவுமே செயற்குழு உறுப்பினர்களின் குறுந்தேசியவாத அரசியல் கருத்துக்களிலோ அல்லது நடைமுறை செயற்பாடுகளிலோ, முடிவுகளிலோ எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரத் தவறியிருந்தது. எமது தவறான நடைமுறைச் செயற்பாடுகளின் முடிவுகளின் விளைவு எமது உறுப்பினர்களின் கைதுகளிலும், வதைமுகாம் சித்திரவதைகளிலும், மக்களிலிருந்தும் போராட்டத்திலிருந்தும் நாம் அன்னியப்படுதலிலும் சென்று முடிவுற்றிருந்தது. இந்நிலையில் "தீப்பொறி"ச் செயற்குழுவில் இருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்த நான்  தொடர்ந்தும் "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் செயற்படப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தேன். முதலில் "தீப்பொறி"ச் செயற்குழுவிலிருந்து வெளியேறிய நான் "தீப்பொறி"க் குழுவிலிருந்தும் விலகிக் கொள்வது என முடிவெடுத்து நான் "தீப்பொறி"க் குழுவிலிருந்து விலகுவதற்கான காரணங்களை எழுத்து மூலம் முன்வைத்து "தீப்பொறி"க் குழுவிலிருந்து வெளியேறினேன்.

நான் "தீப்பொறி"க் குழுவிலிருந்து விலகுவதற்கான காரணங்களை எழுத்து மூலம் முன்வைத்ததன் பிரதியொன்றை என்னுடன் நட்புடன் பழகி வந்த PLFTயைச் சேர்ந்த ரஞ்சித்திடம் கையளித்திருந்ததுடன் "சரிநிகர்" பத்திரிகைக் குழுவைச் சேர்ந்த குருவிடம் நான் "தீப்பொறி"க்  குழுவிலிருந்து விலகிவிட்டதைத் தெரியப்படுத்தியிருந்தேன். இலங்கையின் பேரினவாத அரசுகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவந்த இனவாத அரசியல் வடக்குக்-கிழக்கில் முடிவில்லாததொரு யுத்தத்தை தோற்றுவித்திருந்ததோடல்லாமல்   குறுந்தேசிய இனவாதத்தையும்  கூடவே தோற்றுவித்திருந்தது. குறுந்தேசிய இனவாதம் இனவெறிமிக்கதொன்றாகவும் பாசிசப் போக்கு கொண்டதாகவும் தன்னை வெளிப்படுத்திக்  கொண்டிருந்தது. வடக்குக்-கிழக்கில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த கந்தகப் புகையின் நெடி இலங்கைத்தீவு முழுவதும் சூழ்ந்துகொண்டிருந்தது. "ஆசியாவின் முத்து" என மேலைத் தேசத்தவர்களால் வர்ணிக்கப்பட்ட இலங்கைத் தீவு யுத்தபூமியாக மாற்றமடைந்து கொண்டிருந்தது. மக்கள் வேண்டி நிற்கும் அமைதியும் சமாதானமும் இன்னமும் கானல் நீராகவே இருந்தது. இனவாதத்திற்கெதிரான மக்களின் போராட்டம், இன  ஐக்கியத்திற்கான மக்களின் போராட்டம், ஜனநாயகத்துக்கான மக்களின் போராட்ட்டம், அமைதிக்கும் சமாதானத்துக்குமான மக்களின் போராட்டம் இலங்கை மக்கள் அனைவர் முன்னும் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. இத்தகைய போராட்டம் கடந்தகால அரசியல் போராட்டத்தில் தோற்றுப்போன தலைமைகளால் அல்ல, புதிய தலைமுறையால், புதிய தலைமையால் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகவும் இருந்தது.

"தீப்பொறி"க் குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து கொழும்பிலிருந்து மட்டுமல்ல இலங்கையிலிருந்தும் வெளியேறிவிடுவது என்று தீர்மானித்தேன். இலங்கை அரசின் இனஒடுக்குமுறைக்கெதிராகப் போராடப்  புறப்பட்டு ஈழ விடுதலைப் போராட்ட இயக்கத் தலைமைகளின் அராஜகத்தினாலும் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் போராடும் உரிமை மட்டுமல்ல வாழும் உரிமையும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் சென்ற வழியில் நானும் செல்வதற்காய் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தேன், ஆனால் இலங்கையிலிருந்து வெளியேற வசதியற்ற பலர் தமிழீழ விடுதலைப் புலிகளால் "ஒட்டுக்குழு"க்களாகவும் "துரோகி"களாகவும் இனங்காணப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தனர், பாக்கு நீரிணைக்கு விடைபெற்று விமானம் சென்று கொண்டிருந்தது.

இத் தொடர் இத்துடன் முற்றுப்பெறுகிறது