Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மேதினம் அதிகார வர்க்கத்தின் கொண்டாட்டம் அல்ல!

மே தினம் இன்றைய உலகின் அடக்கி ஒடுக்கும் ஆதிக்க –அதிகார சக்திகளால் ஓர் கேளிக்கை களியாட்டத் தினமாக ஆக்கப்பட்டுள்ளது. எட்டு மணிநேர வேலைக்காக இரத்தம் சிந்திப் போராடிய சிக்காக்கோ தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட எழுச்சிகள்இ அத்தியாகிகளின் தியாக வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. மழுங்கடிக்கப்படுகின்றன.

இலங்கையில் சர்வாதிகார மன்னன் மகிந்தாவின் குடும்ப நிறுவன ஆட்சியினரும், ரணிலும் அவர்களின்  தேசிய-சர்வதேசிய கூட்டாளிகளும் குதூகலமாகக் கொணடாடுகின்றனர். சாத்தான் வேதம் ஓதுவது போல் ஏகாதிபத்திய-முதலாளித்துவ-பாசிச சக்திகள் பலவற்றைப்  பகிர்கின்றனர்.

எமது நாட்டில் மகிந்த குடும்ப ஆட்சியின், பாசிஸ-சர்வாதிகாரம் தலை விரித்தாடுகின்றது. நாட்டில் இனங்களுக்கிடையிலான பிளவின் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படுகின்றன. தீவிர பேரினவாத சக்திகளும், மதவாத  சக்திகளும் இவற்றில் முன் நிற்கின்றன. பௌத்தமதமல்லாத ஏனைய மதங்களின் அடையாளங்கள், அடையாளச் சின்னங்கள் மதவெறியர்களால் இல்லாதாக்ப்படுகின்றன. இது இனப்பிளவுகளுக்கும் இன மோதல்களுக்கும் வழி வகுக்கின்றன.

மறுபுறத்தில் நாணயத்தின் மோசமான பெறுமதி இறக்கத்தினாலும், தொடர் விலை ஏற்றங்களாலும், வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பாலும், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மகிந்த அரசு சிக்கித் திணறுகின்றது. மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து சிங்கள மக்களைத் திசை திருப்ப பேரினவாத வெறி கொண்டு தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ்த் தேசிய இனங்கள் மீதான, குறிப்பாக வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளை  கட்டவிழ்த்து விடுகிறது மகிந்த அரசு.

ஆகவே இந்நிலையின் உண்மைத்தன்மையை, எம்நாட்டின் அடக்கி-ஒடுக்கப்படும் சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.  இன, மொழி, மத பேதங்களுக்கு அப்பால் அனைத்து உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும்!


இவ் ஐக்கியத்திற்கு தடையாக உள்ள சகலதையும் தகர்க்க வேண்டும். தகர்ப்பிற்கூடாக அடக்கி ஒடுக்கப்படும் மக்களை போராட வைக்கவேண்டும். இக்கடமையை எம்நாட்டில் போராடும் சக்திகளோடு சேர்ந்து முன்னெடுப்போம்! மேதினத்தின் சபதமாக எடுப்போம்! .

அத்தோடு நாம் மேதினத்தின் உண்மைத் தன்மையை,  போராட்ட வரலாற்றை, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக போராடும், போரிட சபதம் எடுக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்போம்.

அமெரிக்காவில் 1832 இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல்  1835இல் பிலடெல்பியாவிலும் பென்சில்வேனியாவிலும் இதே  கோரிக்கையை முன்  வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும்  இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி  1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு”  என்ற இயக்கம்
உருவாக்கப்பட்டது.  இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.  அத்தோடு மே 1,  1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.  இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான  நியூயார்க், சிகாகோ,  பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி,  பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும்  3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சி மிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.  இரயில் போக்குவரத்து  நடைபெறவில்லை.  வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி


மே  3,  1886 அன்று  “மெக்கார்மிக் ஹார்  வஸ்டிங் மெஷின்  நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர்.  இங்கு இடம் பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில்  மே  4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள்.  2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.  இந் நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ் வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடி குண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர்.  அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21,  1886 அன்று துவங்கியது. 7  பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்


நவம்பர் 11,  1887  அன்று  தொழிலாளர்  தலைவர்கள் ஆகஸ்ட்  ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர்,  ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.  நவம்பர் 13,  1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது.  நாடு முழுவதும்  5 லட்சம் பேர் இவர்களது  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு,  அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.


அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும் தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.


அனைத்து நாடுகளிலும் மே தினம்


1889  ஜூலை 14  அன்று  பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின்  ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.  18  நாடுகளில் இருந்து  400 பிரதிநிதிகள்  இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.  பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட  இக் கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும்,  சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு,  1890 மே  1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட  வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறை கூவலே மே முதல் நாளை,  சர்வதேச தொழிலாளர் தினமாக,  மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.


“நாம் எம் எதிரிகளால் தூக்கில் இடப்படுகின்றோம். மரணத்தின் பின்னான எம் கல்லறைகளின் மௌனம்  பல கதைகள் சொல்லும்” இது மேதினத் தியாகிகளின் இறுதி வார்த்தைகள்.


ஆம் உங்களின் கல்லறைகளின் மௌனம் கடந்த 125-வருடங்களாக, அனைத்துலகப் பாட்டாளி வாக்கத்திற்கும்,  விடுதலைக்காகவும்,  இழந்த உரிமைகளுக்காகவும் போராடும்  மக்களுக்கும் பல கதைகளைச் சொல்லியுள்ளன.
உங்கள் கல்லறைகளின் கதைகளையே   மாவோ “தேசங்கள் சுதந்திரத்தை விரும்புகின்றன, நாடுகள் விடுதலையை விரும்புகின்றன, மக்கள் புரட்சியை விரும்புகின்றார்கள்”என்றார். இவைகளே இன்றைய உலகின் பிரதான ஓட்டக்கதைகளுமாகும்.  இவைகளுக் கூடாக உலக மக்கள் உங்களை என்றும் நினைவு கூர்வார்கள்.


-அகிலன்- 30/04/2012