Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பெருந்தோட்ட பாடசாலைக்கான ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள்

பெருந்தோட்ட பாடசாலைக்கு வழங்கப்பட இருந்த 3026 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களில் 1688 நியமனங்கள் மாத்திரமே 08.05.2015ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள நியமனங்கள் வழங்கப்படுமா, அப்படி வழங்கப்படுமாயின் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சோ கல்வி இராஜாங்க அமைச்சோ உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

 அத்தோடு போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் பரீட்சையில் பெற்ற புள்ளிகள் இதுவரை வெளியிடப்படாமை நியமனங்களின் வெளிப்படைத் தன்மை பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் புள்ளிகள் வழங்கப்படும் என்று கூறியிருந்த போதும் அதுவும் இடம்பெறவில்லை. ஆசிரிய உதவியாளர்கள் என்ற பேரில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு வெறும் ரூபா. 6000  மாத்திரமே மொத்த மாத கொடுப்பனவாக வழங்குகின்றமை எவ்வகையிலும் ஏற்று கொள்ளப்பட முடியாது.

ஆசிரியர் உதவியாளர்கள் என்ற இந்த நியமனமானது ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பின்படி ஆசிரியர் சேவையின் தரம் 3-ii ற்கு தேவையான தகைமைகள் கொண்டவர்களுக்கு ஆட்சேர்ப்பிற்கு விதிக்கப்பட்ட முறைகளை பின்பற்றியே வழங்கப்படுகிறது பொதுவாக ஆசிரியர்கள் செய்யும் அதே பணிகளையும் கடமைகளையுமே இவர்களும் செய்ய போகின்றனர். எனினும் அவர்களுக்கான தொழில் கௌரவம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே நியமனம் பெறுபவர்கள் ஆசிரியர் சேவை தரம் 3ii ற்கு உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறாவிடின் அது சட்ட விரோதமானதும் பாரபட்சமானதுமாகும். எனவே இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க நியமனம் பெற்றவர்களும் நியமனம் பெற இருப்பவர்களும் ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்று மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கல்வியில் பின்தங்கியுள்ள சமூகம் என்ற வகையில் விசேட எற்பாடுகளின் அடிப்படையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்கள் மலையக அரசியல் தலைவர்கள் என்போரால் தாம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டு வருகின்றது. எனினும் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீண்டகால நோக்கில் தீர்க்கும் விதமாமான ஏற்பாடுகளுடன் ஆட்சேர்ப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாத நிலையிலேயே அரசியல் தலைமைகளின் வழிகாட்டலும் அதிகாரிகளின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. பெருந்தோட்ட பாடசாலைகளுக்க நியமனம் பெறுவதில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் அதேநேரம் பெருந்தோட்டங்களில் உள்ள தகுதியுடையோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான விளக்கமும் அறிவும் அற்றவர்களாகவே இந்த நியமனம் எங்கள் ஆட்சி காலத்தில் வந்தது என மார்தட்டிக் கொள்ளும் மலையக தலைமைகள் அன்று இருந்தனர். அத்தோடு ஆசிரியர்களுக்கான உரிய கௌரவத்தை வழங்கும் வகையில் சம்பள உரிமைகளை உறுதி செய்யவும் அவர்கள் செயற்படவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் மலையக அரசியல் தலைமைகளும் இதில் அசமந்தமாகவே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதி ஆசிரியர் நியமனங்களை எவருக்கும் பாரபட்சம் இன்றியும் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நீண்ட கால அடிப்படையில் நிவர்த்திக்கும் வகையில் வழங்க உரிய நடவடிக்கையை கல்வி மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சு எடுக்க வேண்டும். ஆசிரிய உதவியாளர்கள் என்றிலாமல் நியமனம் வழங்கப்பட்டுள்ள, வழங்கப்படவுள்ள அனைவரையும், 2007ஆம் ஆண்டு நியமனம் போன்று ஆசிரியர் சேவை தரம் 3-ii ற்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

-(மக்கள் ஆசிரியர் சங்கம்)