Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்! - புஜமாலெ கட்சி

பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வுமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படாதவரை அனைத்து பீடமாணவர்களும் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என மாணவர்கள் எடுத்துள்ள முடிவு முற்றிலும் நியாயமானதாகும். அம்முடிவுக்கு பலபல்கலைக்கழக சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் பலவகைப்பாதிப்புகளை பெற்றுநிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முடிவை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி வரவேற்கிறது.

வடக்குக்கிழக்கில் பதற்றசூழலை ஏற்படுத்தி அதனை நீடிக்கச் செய்யும் நோக்கத்துடனும் ஜனநாயகம் இயல்புவாழ்பு என்பனவற்றை ஏற்படவிடாது தடுத்து வைத்திருப்பதும் அரசின் உள்நோக்கமாகும் அத்துடன் தெற்கில் எழுந்துள்ள அரசிற்கெதிரான எதிர்ப்புகளையும் அதிருப்திகளையும் கண்டனங்களையும் திசைதிருப்புவதற்கு புதிய புலிக்கதை அவர்களுக்குத் தேவைப்படுகிறது அதனை முன்னெடுக்கவே கடந்த 27ம்,28ம் திகதிகளான யாழ்பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்த மாணவர்கள் கைதாக்கப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது சட்டத்திற்கும் நீதி நியாயத்திற்கும் அப்பால் மாணவர்களைத் தடுத்து வைத்துக்கொண்டு ஏனைய மாணவர்களை கற்றல் செயற்பாடுகளுக்கு வருமாறு நிர்ப்பந்திப்பது அடக்குமுறைக்கு அடிபணிந்து அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்பதாகவே இருக்க முடியும். வடக்கு கிழக்கில் மட்டுமன்றித் தெற்கின் மாணவர்களும் இடதுசாரி இயக்கங்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகிறார்கள். எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை நிபந்தனையின்றி உடன் விடுவிப்பதே யாழ் பல்கலைக்கழகத்தை சுமுகநிலைக்குத் திரும்பசெய்யக் கூடிய ஒரே வழிமுறையாகும் என்பதே எமது கட்சியின் கருத்தாகும்.