Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் அனைவரும் கையெழுத்திடவும்

2015 - 02 -01

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு - 01

கௌரவ பிரதமர் அவர்கள், பிரதமர் அலுவலகம் கொழும்பு - 07

ஜனாதிபதி அவர்களே, பிரதமர் அவர்களே,

குமார் குணரத்தினத்திற்கு இலங்கைக்குள் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை குறித்து

கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நாட்டின் ஜனநாயகம் பாரதூரமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தது என்பதில் விவாதமில்லை. பல்வேறு ஜனநாயக விரோத செயல்கள் ஊடாக அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் நாங்கள் அதனை நன்றாகவே அனுபவித்துள்ளோம்.

முந்தைய ராஜபக்ஷ ஆட்சியில் கடத்தல், காணாமலாக்கல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக்காவலின் போது கொல்லப்படுதல், வெள்ளைவேன் குழுக்களின் ஊடாக கடத்துதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலை நிறுத்தங்களை அடக்குவதற்கு உத்தரவு பெறுதல், நாட்டின் சிவில் பிரச்சினைக்கு இராணுவத் தலையீடு செய்தல், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்காக வைத்து நடத்திய அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற பல்வேறு ஜனநாயக விரோத சம்பவங்கள் பரவலாக இருந்தன. இது குறித்து தோன்றிய சமூக எதிர்ப்பின் வெளிப்பாடுகள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிகின்றன. மேற்குறித்த நடவடிக்கைகளை சமூக நீதியையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் ஒரு சமூகம் ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டாது. முந்தைய ஜனநாயக விரோத ஆட்சியை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்தின் பொறுப்பானது மேற்படி செயற்பாடுகளை சமூக தேகத்திலிருந்து அகற்றுவதும், அந்த ஜனநாயக விரோத ஆட்சியில்அநீதிக்கும் பாரபட்சத்திற்கும் ஆளானவர்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுக் கொடுப்பதும்தான். அப்படியானதோர் எதிர்பார்புடன்தான் பொதுமக்களில் பெரும்பாலானோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்டார்கள்.

கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டு பின்னர் காணமலாக்கப்பட்டு இறுதியாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் முகம் கொடுத்த பிரச்சினையை, ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்டதும் கவனத்தில் எடுக்க வேண்டியதுமான பிரச்சினையாக நாம் காண்கிறோம்.

2012 ஏப்ரல் மாதம் 07ம் திகதி குமார் குணரத்தினம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமையும், அதற்கு நான்கு மாதத்திற்கு முன்பு அதாவது 2011 டிசம்பர் 09ம் திகதி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டமையும் முன்னிலை சோஷலிஸக் கட்சி ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட பாரதூரமான அடக்குமுறை அனுபவங்களாகும். லலித் மற்றும் குகன் சம்பந்தமாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை என்பதுடன், குமார் குணரத்தினமும் மேற்குறித்த கடத்தலுக்கு பின்னர் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டார்.

முந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் ஜனநாயகத்திற்கு முரணானதும் அரச பயங்கரவாத செயற்பாட்டின் காரணமாக உயிருக்கு உத்தரவாதம் மறுக்கப்பட்ட நிலையில நாட்டுக்கு வெளியிலிருந்து அரசியலில் ஈடுபட நேரிட்டது. அவர் கடத்தப்பட்டதன் மூலம் இது மேலும் உறுதியாகியது. குமார் குணரத்தினத்தை தவிர இவ்வாறான அனுபவங்களுக்கு முகம் கொடுத்த அநேகமானோருக்கு விருப்பமின்றியேனும் வெளிநாடு செல்ல வேண்டிய் நிலை ஏற்பட்டது. அவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட அநேகமானோர் நாட்டுக்குள் வர எதிர்ப்பார்த்துள்ளனர்.

தற்போதைய அரச பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்களில் அவ்வாறான நபர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவேற்றதோடு, அந்த வரவேற்பின் மூலம் மேற் குறித்த ஜனநாயகத்திற்கு சார்ப்பான மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஓரளவு பயன் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் தமது உயிராபத்தின் காரணமாக ஏதோ ஒரு வழியில் நாட்டிலிருந்து தப்பிச் சென்றவர்களாகும். அவர்கள் நாட்டுக்குள் வருவதற்கும், அரசியலில் ஈடுபடவும் உள்ள உரிமையை உறுதி செய்வது இன்றை ஆட்சியின் மீதுள்ள பொறுப்பாகுமென்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

அந்த அடிப்படையில் குமார் குணரத்தினமும் நாட்டில் தங்கியிருக்கவும் தனது அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் மற்றும் தான் விரும்பிய ஜனநாயக அரசியலில் ஈடுபடவும் உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென நாம் உறுதியாக நம்புகிறோம். அவர் கூறுவதைப் போன்று அவருடைய தேவையாக இருப்பது நாட்டில் தங்கியிருந்து அரசியலில ஈடுபடுவதேயாகும். அவர் எப்படியான அரசியல் கருத்தை கொண்டிருந்தாலும், எப்படியான அரசியல கட்சியில் இணைந்திருந்தாலும் அரசியலில் ஈடுபடும் அவரது ஜனநாயக உரிமைக்கு அதனால் தடை ஏற்படக கூடாது.

தற்சமயம் அவரை இலக்காக வைத்து செயற்படும் சட்டரீதியான செயற்பாடுகளினால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கு அல்லது நாட்டிலிருந்து மீண்டும் வெளியேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமேயானால் மேற்குறித்த ஜனநாயகம் சம்பந்தமான நம்பிக்கைகள் சிதையக் கூடும். இது குறித்து உங்களது கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென்பதே எமது எதிர்பபார்பாகும். அதன் மூலம் அவர் மற்றும் அவரைப் போன்று அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதி செய்யபடுமானால் இச்சந்தர்ப்பத்தில் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு இந்த அரசாங்கம் தனது கடமையை செய்வதாக இருக்குமென நாம் கருதுவோம்.

இப்படிக்கு

 

எமது தோழர்கள் இந்த மனுக்கடிததத்துடன் உங்களை சந்திக்க இருக்கின்றார்கள். இதில் ஒப்பமிட்டு இலங்கையில் ஜனநாயக்தை உறுதி செய்ய வேண்டிய போராட்டத்தில் இணைந்து கொள்வது ஜனநாயகத்தை நேசிக்கின்ற அனைவரதும் கடமையாகும்.