Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை!" -அகிலன்


செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    26-12-2010

"தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை":-----டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் முதலாவது பிரதமர் யாழ் சென்றபோது தமிழில் தான் தேசிய கீதம் பாடப்பட்டது. வரலாறு தெரியாது, கூலிக்கு மாரடிக்கும் டக்ளஸ்!

"ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம் அதில் தவறிருப்பதாக கூறமுடியாது"  என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்~~.

அடிவருடி பாத பூஜை செய்யும் வடக்கின் "வசந்தத்திற்கு" இலங்கையின் அரசியல் வரலாறு தெரியாது. இலங்கையின் முதற் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா முதன் முதலில் யாழ் சென்றபோது தமிழில் தான் தேசிய கீதம் பாடப்பட்டது. இது தெரியாது, "யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்கின்றது".  இந்நோக்கில் தேசியகீத வரலாற்றையும், தொடர்ந்து வந்த  பேரினவாத அரசுகள் அதை இல்லாதாக்கிய வரலாற்றையும், டக்ளஸ் போன்ற கூலிக்கு மாரடிக்கும் பேரினவாதக் கூட்டத்திற்கும் ஆவணத்தினூடே சமர்ப்பிக்கினறோம்,

 

இலங்கையின் தேசியகீத வரலாறு

இலங்கையின் தேசிய கீதமானது ஆனந்த சமரகோன் என்பவரால் இயற்றப்பட்டு 1951ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றது.

இதனை முதன் முதலில் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் முத்தமிழ்ப் புலவர் நல்லதம்பி அவர்கள். 1950களின் ஆரம்பத்தில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி . எஸ். சேனநாயக்காவின் முதலாவது யாழ் விஜயத்தின் போது தமிழில் இது பாடப்பட்டது.

1955 பெப்ரவரி 4ம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இக் கீதத்தை தமிழில் மீனா, சங்கரி ஆகியோர் பாடியிருந்தனர்.

1970ம் ஆண்டு பதவியேற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் விசாரணையின் பின் தமிழ் மொழியில் தேசிய கீதம் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது. அது மட்டுமன்றி 1985ஆம் ஆண்டில் இருந்து (ஐ.தே.கட்சியின் போதும்) வெளியிடப் பட்ட தமிழ் பாடசாலை புத்தகங்களில் கூட தேசிய கீதம் தமிழிலேயே அச்சிடப்பட்டது. இலங்கையின் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் தமிழ் பதிப்பில் கூட தேசிய கீதம் ' ஸ்ரீலங்கா தாயே' என்றிருக்கிறது. இருப்பினும் அத் தேசிய கீதத்தின் இடையில் நமோநமோ தாயே என்றும் தொடர்கிறது.

நமோ என்பது தமிழ் சொல்லே அல்ல என்றும் அதனை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த காலங்களில் தமிழர் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. அது சிங்களப் பேரினவாதத்திற்கு செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இல்லாதாக்கம்.

பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த வீ.ஜெ.மு. லொகுபண்டாரவின் ஆணையின் பேரில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட்டு, அதன் இசை மாத்திரம் ஒலிபரப்பப்பட்டது.

1994 ஒகஸ்டில் ஆட்சிக்கு வந்த  சந்திரிக்கா அரசாங்கம் அதையும் மாற்றி தமிழ் சேவை ஒலிபரப்பு முடிந்ததன் பின் சிங்களத்திலேயே தேசிய கீதத்தை ஒலிபரப்பும் வேலையை செய்தது.

பல மொழிகள் பேசும் மக்களையுடைய இந்தியாவில் இந்தி மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுவதாக பேரினவாத தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதுவல்ல உண்மை. இந்தியாவில் பாடப்படும் தேசிய கீதமான 'ஜனகணமண' கீதம் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலமோ அல்ல. அது ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட பெங்காலி மொழிப்பாடல் என்பதுதான் உண்மை. அது சரி... இலங்கையின் தேசிய கீதம் இலங்கை எனும் தேசத்துக்கு சொந்தமானதா? அல்லது சிங்களத்திற்கு சொந்தமானதா?::::::

இலங்கை பௌத்த மதத்திற்கு 'முதன்மை அளிக்கும்' என்ற ஏற்பாடு (1970 இல் பதவிக்கு அமர்ந்த ) ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 1972 ல் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பிலேயே முதற் தடவையாக கொண்டுவரப்பட்டிருந்தது

அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கிற அரசியலமைப்பில் தேசியக்கொடி, தேசிய கீதம், தேசியப் பூ, தேசிய பறவை போன்ற தேசிய சின்னங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக சில மாதங்களுக்கு முன்னர் பேசப்பட்டது. தேசியக் கொடியில் நிற ரீதியில் வேறுபடுத்தி இனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய போதும் மேலதிகமாக சில வலியுறுத்தல்களும் இடம் பெறுகிறது. அவை தேசியக் கொடியில் நான்கு மூலைகளிலும் உள்ள அரசியலை பௌத்தத்தை குறிப்பதாகவும் சிங்களம் சிங்கள இனத்தை குறிப்பதாகவும் இருக்கிறது.தேசிய கீதத்திலும் கூட இச்சர்ச்சை இருந்தது. உதாரணத்துக்கு நமோ நமோ தாயே என்பதில் தமிழல்லாத ' நமோ ' எனும் பதம் பயன்படுத்தப்படுவது பற்றியும் ஆரம்பத்தில் கேள்வி எழுப்பப்பட்டன. இலங்கை என்று தமிழில் சொல்லாடப்பட்டது இல்லாமல் போய் 'ஸ்ரீலங்கா' என்ற சிங்களச் சொல்லையே தமிழில் புகுத்தியதிலும், இந்த தேசிய கீதத்திற்கு பங்குண்டு என்பதும் முக்கியமானது.

தேசிய சின்னங்கள் உட்பட தேசிய கீதம் எல்லாம் மாற்றப்படப் போகிறது என்ற கதை பேசப்பட்ட போது சிறுபான்மை சமூகங்களது நலன்களும் அதில் பேணப்படும் என்ற எதிர்பார்ப்புடன் சிறுபான்மை சமூகங்கள் காத்திருந்த வேளையில், தேசிய கீதம் பாடப்பட்டது பற்றிய சர்ச்சையில் அரசாங்கம் நடந்து கொண்ட முறை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மீதான சந்தேகங்கள் வலுப்பட காரணமாகியுள்ளது. சர்ச்சையின் தொடக்கம்  'கடந்த செப்டம்பர் 2ம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச் சியின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்' இவ்வாறு பாராளுமன்றத்தில் சந்திரிகா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் தொடர்பு சாதன உல்லாச விமானப் போக்குவரத்து அமைச்சருமான தர்மசிறி சேனநாயக்கா தெரிவித்திருந்தார்.  (லங்கா தீப 7.9.95).

நடந்தது இதுதான்:

பண்டாரநாயக்கா சர்வதேச கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்பட்ட தமிழ் ஜப்பானிய மொழிப் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமே செப்டம்பர் 2ம் திகதியன்று நடந்திருந்தது. கற்கை நெறியில் தமிழ் மொழி கற்ற சிங்கள மாணவர்களைக் கொண்டு தமிழில் தேசிய கீதம் பாடச் செய்யப்பட்டிருந்தது. (இந்த வைபவத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிரதமர் ஸ்ரீமாவோ அழைக்கப்பட்டிருந்தார். என்ற போதும் அன்று அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.) இப்பாடலை ஒன்பது மாணவிகளும் பதினொரு மாணவர்களும் பாடினர். அப்போது தான் கிளம்பியது சர்ச்சை. அந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்த ஒருசாரார் இப் பிரச்சினையை கிளப்பினர். ' இனவாத நோக்கமற்ற ரீதியில் சகல தேசத்தவர்களும் கௌரவிக்க வேண்டிய தேசிய கீதத்தை இப்படி மொழி பெயர்த்து எங்கள் இளைஞர் யுவதிகளாளேயே பாடச் செய்தது மிகப் பெரிய குற்றம். இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு பொறுப்பானவர்கள் இதனை அவ்விளைஞர்களுக்கு அறிவுறுத்தாமை, இன்னும் ஒரு குற்றம் என்று கூறினார். 'பல இனங்கள் வாழுகின்ற இந்தியாவில் இந்தி மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகின்றது. நாங்கள் கூட அதற்கு எந்த அளவு மதிப்பு கொடுக்கிறோம். எமது தேசிய கீதத்தை சிங்களத்தில் இருந்து மொழிபெயர்த்துப் படிக்கும் அளவிற்கு எமது நாடு இன்னமும் இழிநிலைக்கு உள்ளாகவில்லை' இது இன்னொருவர்.(திவயின 4-9-95

இந்த வைபவத்தின் போது, சில பழைய சிங்களப் பாடல்களும் அதே மெட்டில் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட்டு பாடப்பட்டிருந்தன. இதனை சகிக்காத சில இனவாத தரப்பினர் இவற்றைப் பெரிது படுத்தி பூதாகரமாக்கினர். இது தொடர்பாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் (ஐ.தே.க) பிரதீப் ஹப்பங்கம பாராளுமன்றத்தில் கீழ்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தார்.'

பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில் நடந்தது?

பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் நடந்த வைபவத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதாக பத்திரிகையில் செய்திகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் பல மொழிகளில் தேசிய கீதம் அமைந்திருக்க முடியாதென்பதை உங்களுக்குப் புதிதாகச் சொல்லித்தரத் தேவையில்லை. அப்படியிருக்கும் போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தாலோ அல்லது வேறு நபர்களினாலே அல்லது வேறு நிறுவனங்களினாலோ இலங்கை தேசிய கீதம் வேற்று மொழிகளில் ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த நடவடிக்கையைப் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தமிழ் மொழியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட கீதத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? 'இந்த கேள்விக்கு பதிலளிக்கு முகமாகவே பாராளுமன்றத்தில் வைத்து ' தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்' என பதில்  கூறியிருந்தார் அமைச்சர் தர்மசிறி சேனநாயக்க இந்த வேடிக்கையான பதிலை கூறியதன் மூலம் அமைச்சர் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக தம்மால் பொறுப்பான ஒரு பதிலைக் கூற முடியாதென நிரூபித்திருக்கிறார்.

இனவாதம் வளரக் கூடிய சகல சாத்தியமான சூழலையும் திறந்து விட்ட அரசு தங்கள் கையையும் மீறி பேரினவாதம் வன்முறை வடிவத்தை பெறுகின்ற போது வளர்த்து விட்ட அரசினால் கூட அதனை தடுத்து நிறுத்த முடியாமல் போகும் என்பது கண்கூடு. இந்தச் சம்பவம் இத்துடன் முடியவில்லை. நாடுமுழுவதும் இனவாதம் கேள்வியெழுப்பியது ' தமிழில் தேசிய கீதம்ஏன்? ' என்பதே எங்கும் எழுப்பப்பட்ட கேள்வி.இனவெறி பிடித்த அம்மணங்கள் ஹிக்கடுவ பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தி­லும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில் பிரதேச சபை உறுப்பினர் நிவ்டன் ஹெட்டிஆரச்சி (ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி-ஒஸி அணி) தனது மேற்சட்டையை கழற்றிவிட்டு வந்தார். அவருக்கு எதிர்ப்பு தொரிவிப்பதற்காக பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் சந்திர டி சில்வா ( ஸ்ரீலங்கா மக்கள் கட்சி -வை .பி.டி. பரிவு) தனது ஜட்டியைத் தவிர அணிந்திருந்த ஆடை எல்லாவற்றையும் களைந்தெறிந்தார். இவர் அப்படிச் செய்தது நிவ்டன் ஹெட்டி ஆராய்ச்சி எழுப்பிய பிரச்சினைக்கு பதிலளிப்பதற்காக அல்ல மாறாக  அவர்களிருவரதும் தனிப்பட்ட அரசியலே இச் செய்கையில் செல்வாக்கு செலுத்தியிருந்தது. (லங்கா தீப 13-09-95) இனவாதத்துக்கு பதில் கொடுக்கக் கூடிய எவரும் அங்கும் இருக்கவில்லை.

இதற்கிடையில் ஜனாதிபதிக்கு ஒரு முறைப்பாடு சென்றடைந்தது. அதில் ' தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதானது, இலங்கையின் அரசியலமைப்பை மீறுகின்ற செய்கையாகும். இலங்கை அரசியலமைப்பின் படி தேசிய கீதமானது ' நமோ நமோ மாதா' என்றே தொங்க வேண்டும். வட-கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசாங்க யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கிற இந்த நேரத்தில் இப்படியான விடயங்கள் அதனை பாரதூரமாக்கும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரச கூட்டுத்தாபனங்களின் தொழிற்சங்கத் தலைவர் ஏ.பீ.சீ. சில்வா என்பவரே அந்த கோரிக்கை விடுத்தவர். (தினமின- 06-09-95)

இல்லாதாக்கும் தொடர் நடவடிக்கைகள்

இது இப்படியிருக்க செப்டம்பர் மாதம் 7ம்திததி மேல்மாகாண சபைக் கூட்டத்தில் உரையாற்றிய மேல் மாகாண சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் அபே குணவர்தன இது பற்றி இப்படி கேள்வியெழுப்பியிருந்தார்.' இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதாக ' திவயின '  பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இச் சம்பவம் மேல் மாகாணத்தில் நடந்த படியால், நாம் இவ்விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும். இது மோசடிமிக்கதொரு செயல். இச் செயலை புரிந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் அவசியமானது. இது தொடர்பாக தேவையான ஆணையை இடுமாறு முதலமைச்சரைக்  கேட்டுக் கொள்கிறேன்' (திவயின- 08-09-95)

பாராளுமன்றத்தில் மாகாணசபையில் பிரதேச சபையில்: ஏன் அதற்கு வெளியிலும் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டதை இனவாத நோக்கில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போது இனவாத அமைப்புக்களில் ஒன்றான ' தேசபிரேமி பிக்கு பெரமுன' அமைப்பின் செயலாளரான பொங்கமுவே நாலக்க தேரோ எனும் பௌத்த பிக்கு வெளியிட்ட அறிக்கையில் ' தமிழில் ஸ்ரீ லங்காவின் தேசியகீதம் பாடப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான தேசத்துரோக இனத்துரோக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நாடுகடத்த வேண்டும் என்றும், கேட்டுக் கொள்கிறோம். இது சிறிய இலங்கையை உடைத்து பிளவுபடுத்தி தமிழ் தேசம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிடும் ' தமிழ் ஈழ ' வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். (திவயின-05-09-95)'

திரிசிங்களே' எனும் சிங்கள இனவாத (வாரப்) பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது சரியென சிலபேர் வாதிடுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனமான வாதம். இந்த நாட்டில் பெரும்பான்மையாகப்  பேசப்படும் மொழி சிங்களம். அதைப் புரிந்து கொள்ளாமல் பன்மொழி பல்லின பல்மத நாடு என அர்த்தப்படுத்துவது முட்டாள்தனம். நாட்டில் பெரும்பான்மை மக்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் சிறுபான்மை மக்கள் வாழ வேண்டும். (திரிசிங்களே-03-09-95)

இப்படியாக இந்தப்பிரச்சினை உயர்த்திப் பிடிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளாகியிருக்கிற நேரத்தில் அரசுத்தரப்பில் இருந்தாவது இதற்கு சரியான பதில் கொடுக்கப்படுமா என எதிர்ப்பார்க்கப்பட்ட போதும், இறுதி வரை இனவாதத்திற்கு பதிலடி கொடுக்க அரசு முன்வரவில்லை. மாறாக தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்று தமிழ் மக்களின் முகத்தில் அறைந்தாற் போல் ஏமாற்றமான பதிலைத்தந்தது மட்டுமல்லாது, அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழில் பாடப்பட்டதைக் கண்டித்தும் இருப்பத சந்திரிகா அரசாங்கத்தின் இனவாத ஒழிப்பினதும் தமிழ் மக்கள் மீதான பச்சாதாபத்தினதும் போலித்தனத்தை தோலுரித்துக்காட்டுகிறது.

இவையெல்லாவற்றையும் விட சந்திரிகா அரசாங்கம் ' புதிய அரசியலமைப்பு ' என்றும் 'இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்' என்றும் செயற்படுவதாக வெளியுலகிற்கு காட்டிக்கொண்டிருக்கிற நிலையில் தேசிய கீதம் தமிழில் பாடுவது தொடர்பாககூட தெளிவான நிலைப்பாடு இல்லையென்றால் அரசியலமைப்புத்திட்டம் தீர்வுத்திட்டம் என்பனவெல்லாம் வெறும் கதையலப்புக்கள்தான் எனச் சொன்னால் அதில் தவறேதும் உண்டோ? இதிலுள்ள கவலைக்கிடமான இன்னுமொரு விடயம் என்னவென்றால் இச் செய்கையை கண்டித்து எந்த சமாதான இயக்கங்களும் கருத்து தெரிவித்திருக்கவில்லை. அதை விட கவலைக்கிடமானது என்னவென்றால் பாராளுமன்றத்தில் அமைச்சர் தர்மசிறியின் உரையின் போது சமூகமளித்திருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு தக்க பதில் கொடுத்து கண்டிக்காதது.வேரூன்றியிருக்கிற பேரினவாத கருத்தியல் கட்டமைப்பில் ஆட்சி புரிகின்ற எந்த சிங்கள அரசாங்கமும் இவ்விடத்தில் விதிவிலக்கல்ல என்ற கூற்று மேலும் மேலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுக் கொண்டே செல்கிறது என்பது தான் மறைக்க முடியாத உண்மை போலும்.

என்.எஸ்குமரன்

(சரிநிகர்- இதழ்-88 11-12-95)