Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தப்பிலாத்துக்களும் மக்கள் உயிர்ப்பும்

எங்கள் தேசத்தில்
முட்கிரீடத்துடன் சிலுவை சுமந்தபடி
எந்த யேசுவும்
தெருவில் இழுத்துச்செல்லப்படுவதில்லை
பிலாத்துக்களும்
சவுக்கால் ஓங்கி அடிப்பவர்களும்
எவரையும்
ஆணி அறையப்பட்டு கல்வாரி மலையில்
தொங்கவிடுவதுமில்லை
கல்லறைகளில் புதைக்கப்படுவதுமில்லை
ஆனால் தினமும்
பெரியவெள்ளிகளாகவே
மக்கள் சோகத்தில் வீழ்த்தப்படுகிறார்கள்

வீட்டின் கதவுகள்
உடைக்கப்பட்டுக்கிடப்பதும்
வீதியில் பயணிக்கும்போது மறைந்துபோவதும்
தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
தங்கள் கறைபடிந்த கைகளை
மீளவும் குருதியில் கழுவியபடியேதான்
மகிந்தப்பிலாத்துக்கள் கைவிரிக்கிறார்கள்

எனினும்
அடக்குறைக்கெதிராய்
புதைகுளிகள் திறக்கப்படுவதும்
எழுச்சிகொள்வதும்
உயிர்ப்பு பெற்றுக்கொண்டேயிருக்கிறது

- 08/04/2012