Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய" சாலினி

 

தமிழகத்தின் இனவாதியான சீமான், பகுத்தறிவுக்கு புறம்பாக பாசிசத்தை உணர்ச்சிகரமாக  பிரச்சாரம் செய்யும் ஒரு சந்தர்ப்பவாதி. தேர்தல் அரசியலில் நக்கிப் பிழைக்கும், ஒரு பிழைப்புவாதி. ஈழத்து ("ஆமைக்") கதைகளைச் சொல்லி காசாக்கும் வியாபாரி. தேர்தல் அரசியலை நிராகரித்த, ஆயுதங்கள் மூலம் பாசிசத்தை நடைமுறைப்படுத்திய பிரபாகரன் போல், எதார்த்தவாதியுமல்ல, நடைமுறைவாதியுமல்ல.

இலங்கையில் சிங்கள -  தமிழ் இனவாதிகள் நடத்திய யுத்தத்தின் அவலங்களை காசாக்கும் கூட்டத்தில், சீமான் முதன்மையான வியாபாரி. ஆமைக்கறி கதைகள்  மூலம் தன்னைப் பற்றிய கற்பனைக் கதைகளை சொல்லிப் பிழைக்கும் அளவுக்கு, மனிதவிரோதி. ஈழத்தைப் பற்றிய தமிழகத்தின் கற்பனைகளை உண்மையானதென்று ஊதிப்பெருக்கியும் காசாக்கியும் கொள்ளும் சீமான், பார்ப்பனிய சிந்தனையிலான இனவாதத்தைக் கொண்டு தேர்தல் அரசியல் செய்கின்ற பச்சோந்தி.

இந்த எமப் பயல் சீமான் பெரும் எண்ணிக்கையில் பெண் வேட்பாளரை நிறுத்தி இருப்பது குறித்து, பெரியாரிஸ்ட்டும் பெண்ணியவாதியுமான சாலினி, "இவ்வளோ பொம்புளை புள்ளைங்களை ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான் யா. எமப் பய" என்று, மிகச் சரியாகவே கூறி இருந்தார். உடனே பகுத்தறிவற்று உணர்ச்சிக்கு பின் எடுபிடிகளாக இருப்பதைத் தங்கள் தகுதியாக கொண்ட உலகெங்குமான இனவாத தமிழ் பாசிட்டுகள், சாலினியை ஆணாதிக்க இனவாத மொழியில் திட்டி வருகின்றனர். தாம் அல்லாதவர்களை பாசிச பா.ஜ.க வின் பார்ப்பனிய வாரிசுகள் எந்த காவி மொழியில் வன்முறைக்கு உள்ளாக்குகின்றனரோ, அதே ஆணாதிக்க பார்ப்பனிய மொழியில் தமிழ் இனவாத பாசிச மொழியைக் கொண்டு திட்டித் தீர்க்கின்றனர்.இப்படி சாலினிக்கு எதிராக சீமானின் உணர்ச்சிக்கு ஊளையிடும் வாரிசுகள், தங்கள்  ஆணாதிக்க வசைகளாலும், ஆணாதிக்கத் தூசணங்களாலும் வாயை மூடு என்கின்றனர். ஈழத்தில் வெள்ளாளியச் சிநதனையிலான இனவாதத்தை முன்வைத்து உருவான புலிப் பாசிட்டுக்களின் வாரிசுகளும், சாலினிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சாலினியின் தொலைபேசியைக் கூட,  புலிப்பாசிட்டுகளின் வாரிசுகள் விட்டு வைக்கவில்லை. சாலினி அது குறித்து கூறும் போது "தேர்தல் நடப்பதென்னவோ தமிழ்நாட்டில் தான். ஆனால் ஸ்விட்சர்லாண்ட், ஸ்வீடன், யூ.எஸ்.ஏ, கனடா மாதிரியான நாடுகளிலிருந்து எல்லாம் எனக்கு போன் செய்கிறார்கள். பிகு: எனக்கு தமிழில் எல்லா கெட்ட வார்த்தைகளும் ஏற்கனவே தெரியும்! ஓஸி டியூசன் (இலவச வகுப்பு) தேவையில்லை" என்று, புலிப் பாசிசத்தை முன்னிறுத்தும், சீமானின் ஈழத்து எடுபிடிகளுக்கு பதிலளித்திருக்கின்றார்.

இனவாதத்தையும், ஆணாதிக்க வசவு - தூசண மொழியையும் கொண்டு முன்வைக்கும் தர்க்கங்களின், ஐம்பதுக்கு ஐம்பது பெண்களை வேட்பாளராக சீமான் நிறுத்தி இருப்பதை "பெண்ணியம்" என்கின்றனர். இப்படித்தான் ஆணாதிக்க சீமானின் வாரிசுகளின் பெண்ணியம் இருக்கின்றது.

சொந்த இனத்தின் அகவொடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட மறுக்கும் இனவாதம் என்பது, அடிப்படையிலேயே ஆணாதிக்கம் தான். இனவாதம் என்பது அடிப்படையில் ஆணாதிக்கமாக இருக்கின்றது. பார்ப்பனியமாக (இலங்கையில் வெள்ளாளியமாக) இருக்கின்றது. சுரண்டும் வர்க்கத்தின் அதிகாரத்தின் குரலாக இருக்கின்றது. இங்கு தேர்தல் அரசியல் என்பது முதலாளித்துவ சுரண்டலாகவும், இன்றைய உலகமயமாதலில் நவதாராளவாதத்தை முன்னெடுக்கும் ஏகாதிபத்தியத்தைக் கடந்து, தேர்தல் அரசியல் மூலம் இனவாதத் தமிழனின் சுய அதிகாரம் என்ற ஒன்று கிடையாது. தனியுடமை பொருளாதார அமைப்பில் "சுய பொருளாதாரம்" கற்பனையானது.

முதலாளித்துவ தேர்தல் அரசியல் முறை கூட, பொருளாதாரத்தில் ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பினை பாதுகாக்கும் வர்க்க எடுபிடிகளை உருவாக்குவது தான். இதுதான் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட தேர்தல் அமைப்பில் "தூய தமிழனின்" ஆட்சி என்பது, சாதித் தூய்மைக் கோட்பாடு தான். அங்கு தமிழ் மொழியை பேசும் தமிழன் அல்ல, தூய இன இரத்தத்தால் பிறந்த தமிழன் என்பதையே, சீமானின் பாசிசக் கோட்பாடு முன்வைக்கின்றது. இதுதான் கிட்லரின் ஆரியக் கோட்பாடு. இது தான் பார்ப்பனியத்தின் சாதியக் கோட்பாடு. புலிப் பாசிட்டான பிரபாகரன் கூட, இப்படி இனத் தூய்மை முன்வைத்ததுமில்லை, பேசியதுமில்லை.

"இனத் தூய்மை" என்பது மக்களை ஏமாற்றிப் பிழைப்பது. சுரண்டும் வர்க்கங்களை பாதுகாக்க, அதிகாரத்துக்கு வருவதற்கான பாசிச சிந்தனை முறையாகும். இவர்கள் யாரும் ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான, மக்களின் அதிகாரத்தைக் கோருவதில்லை. சீமானின் சர்வாதிகாரத்தையே ஆதரிக்கின்றனர், முன்வைக்கின்றனர். பெண்களை வேட்பாளராக்கியது கூட, சீமானின் ஆணாதிக்க அதிகாரம் தான்;. ஆணாதிக்க  அதிகாரம் மூலம் பெண்கள் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டனரே ஒழிய, அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்கள் மூலம் முன்னுக்கு வந்த பெண்கள் அல்ல. இதை புலியில் இருந்த பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். 

இலங்கையில் புலிப்பாசிட்டுகள் 1986 களில் இயக்கங்களை அழித்து, இடதுசாரிகளையும் ஜனநாயகவாதிகளையும் படுகொலை செய்து, பாசிசத்தை நிலைநாட்டிய காலத்தின் பின் தான் பெண்களை இயக்கத்தில் இணைத்தனர். அன்று பகுத்தறிவுள்ள தலைமுறை, போராட்டத்தில் இருந்து ஒதுங்கியது. இந்த நிலையில் புலிகளின் இனவாத யுத்தத்திற்கு ஆள் தேவைப்பட்டது. பெண்களை கேவலமாகக் கருதிய புலிகள், போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவதை மறுத்து வந்தனர். தங்கள் ஆணாதிக்க யுத்தத்துக்கு தேவைப்பட்ட ஆட்களாக, பெண்கள் இருப்பதை கண்டதன் பின்னர் தான், பெண்களை இயக்கத்தில் இணைத்தனர். அதாவது தங்கள் ஆணாதிக்க யுத்தத்தில், பெண்களை யுத்தப் பலிகடாக்களாகவே புலிகள் இணைத்தனர். பெண் விடுதலையின் அடிப்படையில் அல்ல. அன்று யாழ் வெள்ளாளியச் சமூகத்தில் பெண்கள் ஆணாதிக்க அமைப்பில் அடிமைகளாக, ஆணாதிக்க எடுபிடிகளாக இருந்த சூழலில், இலகுவாகவே பெண்களை புலிகள் தங்கள் ஆணாதிக்க யுத்தத்திற்கு கருவிகளாக்கினர். சமூகம் மீதான புலிகளின் பாசிச ஒடுக்குமுறையிலான அதிகாரங்கள் மூலம், பெண்களின் சுதந்திர உணர்வை தமது யுத்தத்திற்கு பயன்படுத்தினர்.

ஆணாதிக்க சமூக அமைப்புக்கு எதிரான பெண்ணிய அடிப்படையில் அல்ல. ஆணாதிக்க வெள்ளாளிய சமூக அமைப்பு முறை அப்படியே இருக்க, அதனை ஆளும் சுய அதிகாரத்திற்கான யுத்தத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 2009 பின் பின் அந்தப் பெண்கள், ஆணாதிக்க அமைப்பிற்;கேயுரிய எல்லா சமூகத் தகுதிகளையும் இழந்தவர்களாக, ஆணாதிக்க அமைப்பால் இழிவாக்கப்பட்ட பெண்களாக வாழ்கின்றனர். இந்த ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக  சுட்டுவிரலைக் கூட நீட்டமுடியாதளவும், புலிப் பாசிசம் பெண்ணின் சுதந்திர உணர்வை மடை மாற்றிய பின் தான் யுத்தத்தில் பெண்களைப் பலியிட்டது. பெண்ணியம் குறித்து எந்த அறிவுமற்றவராக, புலிகளில் இருந்த பெண்களை நடைப்பிணமாக்கினர். இன்று புலியில் இருந்த பெண்களை ஒடுக்குவோரில் முதன்மையானவர்கள், சீமானின் பின்னால் அணிதிரண்டுள்ள "தூய்மைவாத - இனவாதம்" பேசும் ஆணாதிக்க புலி வாரிசுகள் தான்.

இன்று பாசிட் சீமானின் பின்னுள்ள பெண்களின் கதியும் இதுதான். இனத் தூய்மை பேசிய, பேசுகின்ற எல்லா பாசிட்டுகளும் உருவாக்கிய, உருவாக்குகின்ற பாசிசத்தின் வரலாறு இதுதான்.