Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – (தொடர் : 01)

அது இரு போர்களை இணைக்கும்
ஒரு அமைதியென்ற காலம்..!

அந்த அமைதி நிலவும் மண்ணிலிருந்து
என்னுடைய அடிவேர் பிடுங்கி
ஊரையும் உறவுகளையும் மறுதலித்து
என்னை நான்

 

எந்தனின் ஊர்மண்ணுக்கும்
எனக்கும் இடையேயான வெளியை
இந்த நீண்டகாலம் தான்
அனைத்தையும் மீறி – அது
தனக்குள் அடக்கிக் கொண்டது.

ஆயினும்..!
எந்தனின் மண்ணில்
என்னில் தடைகளிட – இன்று
எந்தத் தடையுமில்லை – என்ற
இறுமாப்பு என்னிலே கிடந்தது.

அதனாலோ என்னவோ
இன்று நான்
எந்தனின் பாதப் பதிவுகளை
மீண்டும் புதிதாக
மண்ணதனில் பதிக்கப் போகின்றேன்.

என்றோ பண்பட்ட – அந்த
மண்பார்த்த மனம் எனதில்
இன்றும் புண்பட்டு – அதில்
காரைமுள்ளாய்க் குத்தி வலிக்கின்றது.

இருந்தும்..!
இருந்துமிருந்தும்..!!
காலிரண்டும் என் தெருவில்
தானே நடைபயில..,
குடையில்லா மழைபோல – என்
விழியிரண்டும் கண்ணீரால் மூழ்கியது.

அந்நீரை – என்
கரமிரண்டும் – சிறு
பாய்மரத்தின் துடுப்புகள்போல
வலிந்துவந்து துடைத்துச் செல்கிறது.

அந்தத் தெரு முழுதும்…
எனைப் பார்க்கும் – அந்த
அக்கம் பக்க நிலபுலங்களும்…

பேய்க்குப் பேன்பார்க்கும் – ஒரு
சூனியப் பிரதேசம்போல்..!
கிளறிக் கிண்டிய இடுகாடுபோல்..!!
உழவனின் ஏர் ஏறாத மண்ணாகி
போர் ஊர்திகள் குண்டடெறிந்து
உழுது குழிபறித்த – இந்த
மண்ணில் முன்பு..!?

(தொடரும்)

மாணிக்கம்