Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 4 & 5 )

4.மக்களை ஒடுக்கும் தேசியம்,  பாசிசத்தை விதைக்கின்றது

“கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றதுஇ ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.” மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசிச சட்டங்களைஇ மார்க்ஸ் மிக அழகாகவே இங்கு எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் எந்த விதிவிலக்குமின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான் நிறுவினர். இதன் மூலம் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டினர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை தங்களுக்கு ஏற்ற ஒரு செங்கம்பளமாக்கி, அதன் மேல் தான் வீரநடை போட்டனர். இதுதான் பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் வரலாறுமாகும்.

 

இலங்கையில் பாசிசப் புலிகள் தேசிய வீரர்களாக வீரநடை போட்ட கதையும் இப்படித்தான். ஈவிரக்கமற்ற, கோழைத்தனமான படுகொலைகள், சித்திரவதைகள் மூலம் பல ஆயிரம் சமூகப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர். தங்கள் சொந்த பாசிச கட்டமைப்புக்கு அவர்களைப் பலியிட்டனர்.  நாள் தோறும் படுகொலைகள், சித்திரவதைகள் மூலமே தமது மக்கள் விரோத பாசிசத்தை தமிழ்மக்கள் மேல் திணித்தனர்.

மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கி எழுந்த தேசியத்தை, துப்பாக்கி முனையில் அடக்கியொடுக்கினர். இதன் மூலம் மக்களின் தேசிய அடிப்படைகளையே திரித்தனர். இதன் மூலம் தம்மை மட்டும், போராடும் சக்தியாக காட்டி அதை நிலைநிறுத்த முனைந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கிய கோரிக்கைளை முன்வைப்பதன் மூலம், இந்தப் போராட்டத்தில் தாங்கள் ஊன்றி நிற்பதாக காட்ட முனைந்தனர். இதற்கமைய மனித அறிவியலை நலமடித்தனர். தங்கள் பாசிச நடத்தைகளையே அறிவியலாக பூச்சூட்டினர்.

தம்மைக் கண்டு மக்கள் நடுங்கும் வண்ணம் அச்சத்தை விதைத்தனர். இதன் மூலம் உருவான சூனியத்தை, சமூகமயமாக்கினர். இதன் மூலம் தம்மை சமூகத்தின் அனைத்துமாக நிலைநாட்டினர். இதன் மூலம் மக்களின் இரத்தத்தையும், அவர்களின் உடல் உழைப்பையும் உறிஞ்சி வாழ்ந்தனர். இதற்கமைய புலிகள் திணித்தது, அர்த்தமற்ற தியாகங்களைத் தான். தமது கேடுகெட்ட இழிவான கோழைத்தனமான மக்கள் விரோத சுயநல அரசியலுக்காக இந்தப் பலியீட்டை நடத்தினர், நடத்தி முடித்தனர்.

மாபியா குழுக்களுக்குரிய லும்பன் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தது, புலிகளின் வாழ்க்கை முறை. இதற்கு ஏற்ப புலிகள் பாசிசத்தை, தமது அரசியலாக்கி, அதையே அரசியல் ஆணையாக்கினர். இதற்காக எமது மண்ணில் பல ஆயிரம் உயிர்களை ஈவிரக்கமற்ற வழிகளில் கொன்றனர். அந்த இரத்தத்தை தமது கால் பாதங்களில் தெளித்தே, தம்மைத் தாம் புனிதப்படுத்திக் காட்டினர். தங்கள் இந்த புனிதமான பாசிச இருப்பை மூடிமறைக்க, பினாமிய பிழைப்புவாதங்களை வக்கிரப்படுத்தினர். மாற்றுக் கருத்துகளை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிய பின் தான், தேசிய பாசிட்டுகளால் அனைத்தையும் மிக வக்கிரமாக நியாயப்படுத்த முடிந்தது. இப்படி நியாயப்படுத்திய புனிதத்தைப் பற்றி, கோழைகள் வீர வசனங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதன்போது தான் மரணத்தை வாழ்வாகத் தந்து கொண்டிருந்த, அவர்களின் இரகசியமான வதைமுகாமின் சிறைக்கதவுகளைக் நான் உடைத்தேன். அங்கிருந்து உயிருடன் உலகமறிய நான் தப்பியிருந்தேன். ஒரு உண்மைச் சம்பவத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட, அதையொட்டிய சுய வரலாற்றை ஆதாரபூர்வமாக நினைவுக் குறிப்பில் இருந்து தொகுத்தளிக்கின்றேன்.

புலிகள் என்னை மிக இரகசியமாக, உரிமை கோராது, கோழைத்தனமாக கடத்திச் சென்றனர். எப்போதும் மக்களைக் கண்டு அஞ்சிய புலிகள், இதை பகிரங்கமாகச் செய்ய முடியவில்லை. இரகசியமாக கடத்தியது முதல் தொடர் சித்திரவதைகளைச் செய்ததுடன், படுகொலை செய்ய முயன்றனர். இந்த நிலையில் அந்த இரகசிய வதைமுகாம் சிறையை உடைத்து, அங்கிருந்து உயிருடன் தப்பியிருந்தேன். இக்கால நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வகையில், “புலிகளின் வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை” என்ற தலையங்கத்தில்இ இதை உங்கள் முன் கொண்டு வருகின்றேன். ஆனால் சிறைக்கு பிந்திய முந்தைய நிகழ்ச்சிகள் சிலவற்றையும், இக்குறிப்பு உள்ளடங்கியுள்ளது.

 

 

5.புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள்  

 

இந்த புலி வதைக்கு முந்திய பிந்தைய காலகட்டத்தில் நேரடியாக நான் அறிந்த, என் மீதான படுகொலை முயற்சி பற்றிய விரிவான குறிப்புக்கு பதில், சிறு குறிப்புகளை இதில் தர முனைகின்றேன்.

1. 1984 ஆண்டின் இறுதியில் இந்தியக் கூலிகளாக பயிற்சிபெற்ற ரெலோ அமைப்பினர்இ என்னை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டனர். பல இடத்தில் இதற்கான நேரடி முயற்சியை முறியடித்து, அதில் இருந்து தப்பிச் சென்றதன் மூலம் நான் தலைமறைவாகினேன். அதேநேரம் இதில் தோல்வி பெற்ற ரெலோவினர், எனது வீடு மீது சுற்றி நின்று சரமாரியாக துப்பாக்கி வேட்டுகளால் சுட்டதன் மூலம், ஊர் உலகத்தையே அதிரவைத்தனர். அதேநேரம் எனது அமைப்பைச் சேர்ந்த வேறு சில உறுப்பினரை, ரெலோவினர் கடத்திச் சென்றனர். (இதைப்பற்றிய சில குறிப்புகள் என்.எல்.எவ்.ரி பத்திரிகையான “இலக்கில்” உள்ளது) இந்த வெறியாட்டத்தை எதிர்த்தும், அவர்களின் மக்கள் விரோத வன்முறையை எதிர்த்தும், தமிழ்மண்ணில் இயக்கத்துக்கு எதிரான முதல் ஜனநாயகப் போராட்டத்தை நாம் நடத்தினோம். மக்கள் தமது முதலாவது சாலை (வீதி) மறியல் போராட்டத்தைஇ இயக்கத்துக்கு எதிராக, இதன்போது தான் நடத்தினர். இந்தியக் கைக்கூலியாக பயிற்சி பெற்ற ரெலோவினர், இந்தியா கொடுத்த ஆயுதங்கள் மூலம் அந்த மக்கள் மேல் வேட்டுகளை பொழிந்து தள்ளினர். மக்கள் இதற்கு எதிராக உறுதியாக நின்று போராடினர். மக்கள் அசைந்து கொடுக்காமையால், கைது செய்தவர்களை ரெலோவினர் கொண்டு வந்து மக்கள் முன் விடுவித்த நிகழ்வு, இந்த தமிழ் மண்ணில் தான் நடந்தது. எனது சொந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக பங்கு பற்றிய போராட்டம் இது. இந்த போராட்டத்தை எனது சொந்த ஊரைச் சேர்ந்த உயர் சாதியைச் சேர்ந்த முன்னணியாளர்கள் (ஆண்-பெண்) பங்குபற்ற, அயல் ஊரான தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்களும் கூடி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

2. 1985 இல் புளாட் என்றால்  “சதி” எனக் கருத்துப்படும் ஆனால் சதி வழிமுறையையே இயல்பாகவும் கொண்ட இயக்கமான புளாட்டின் மனித விரோதத்தை எதிர்த்து, அவர்களின் சொந்த கோட்டையாக இருந்த தெல்லிப்பழையிலும், உமாமகேஸ்வரனின் சொந்த ஊரான (அது எனது ஊரும் கூட) வறுத்தலைவிளானிலும் தொடர்ச்சியாக பல போராட்டத்தை முன்னெடுத்தோம். சொந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்சாதியின் முன்னணியாளர்கள் ஒன்றிணைந்து, தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டி வந்தோம். இதன் மூலம் அரசியல் போராட்டங்களையும் நடத்தினோம். புளாட்டின் மனித விரோத செயல்கள் பலவற்றையும், ஊர் கோயிலில் புளாட்டின் ஆதரவுடன் பின்பற்றிய சாதிய வழிமுறைகளையும் எதிர்த்துப் போராடினோம். புளாட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் சொந்த ஊரே, அவருக்கு எதிராக நின்றது.

இதனால் ஆத்திரமுற்ற புளாட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் நேரடியான உத்தரவுக்கு இணங்க, என்னைப் படுகொலை செய்ய கொலைகாரனான வாமதேவனை அனுப்பினார். அவன் என்னை படுகொலை செய்யும், கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தான். புளாட்டில் அதிருப்தியுற்று இருந்த, எமது தொடர்புடைய சக்திகள் மூலம் இதை நான் அறிந்து கொண்டேன். இதை அவன் முன், அம்பலப்படுத்தும் ஒரு திடீர் வழிமுறையைக் கையாண்டேன். தெல்லிப்பழை சந்தியில் மக்கள் கூடியிருந்த போது, அவன் நின்றிருந்த நேரம் பார்த்து, திடீரென கொலை செய்ய வந்திருப்பதை அம்பலப்படுத்தியதன் மூலம், அவன் தன் படுகொலை முயற்சியை கைவிட்டு ஒடச் செய்தேன்.

3. விமேலேஸ்வரனை 18.7.1988 அன்று இரண்டு மணியளவில், நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகில் வைத்து புலிகள் படுகொலை செய்தனர். இதற்கு அடுத்த நாள் என்னை படுகொலை செய்ய நேரடியாக முயன்ற இரு புலிகளை நான் அடையாளம் கண்டு கொண்டதன் மூலம், அந்தக் கொலை முயற்சியை முறியடித்தேன். இதன் பின்பு எனது வீடு உட்பட நான் தங்கிச் செல்லும் சில இடத்திலும், புலிகள் என்னை வலைபோட்டு தேடினர். இவை அனைத்தும் நான் தெரிந்து கொண்ட வகையிலான என் மீதான நேரடியான படுகொலை முயற்சியாகும்.

இது தவிர்ந்த எனக்கு தெரியாத பல படுகொலை முயற்சிகள் இருந்திருக்கும் என்பதில், எந்தவிதமான சந்தேகமும் நான் கொண்டிருக்கவில்லை. “புலிகளின் வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை” என்ற இந்தக் குறிப்பில், புலிகளால் உரிமை கோராத கடத்திச் சென்று சித்திரவதையுடன் கூடிய படுகொலைக்கான முயற்சி மற்றும் அதை முறியடித்து தப்பிய நாட்களின் பின்னான சில சம்பவங்களையே இதில் தொகுத்து அளிக்கின்றேன்.

(தொடரும்)

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1 

பாகம்- 2 & 3