Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பொது பல சேனவிற்கு கோட்டா பாதுகாப்பு வழங்குகிறார் - விக்டர் ஐவன்

கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு 'அரசியல் விலங்கு' அல்ல. இவர் ஒரு 'இராணுவ விலங்கு' ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணுவக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார்.

இவ்வாறு SriLanka Guardian இணையத்தளத்தில் அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான Victor Ivan எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகிய பின்னரே கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைய முடிந்தது. கோத்தபாய இராணுவத்திலிருந்து விலகிய பின்னர், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளாக, அமெரிக்காவில் வசித்தார். இவரது சகோதரர் சிறிலங்கா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னரே கோத்தபாய ராஜபக்ச பிரபலமான, அதிகாரம் மிக்க ஒருவராக மாறினார். கோத்தபாய அரசியலுக்குள் நுழைந்த பின்னர் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார்.

இவர் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போரில் பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைப்பாளாராகக் கடமையாற்றினார். சிறிலங்கா இராணுவ வெற்றிக்கு முக்கிய தளபதியாகக் காணப்பட்ட ஜெனரல் பொன்சேகா ஓய்வு பெறாது சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபர் ஒப்புதல் அளிப்பதற்கு உந்துதல் வழங்கியவர்களில் கோத்தபாயவும் ஒருவராவார். பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிப்பதில் ஏதோவொரு காரணத்திற்காக சிறிலங்கா அதிபர் விரும்பவில்லை. ஆனால் சிறிலங்கா அதிபரை நம்பிக்கை கொள்ள வைத்து அவரைச் சமாதானப்படுத்தி சரத் பொன்சேகாவை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்க வைத்ததில் கோத்தபாயாவின் பங்களிப்புப் பிரதானமாகும்.

இதற்கும் மேலாக, தனக்கு ஆபத்து வரும் எனத் தெரிந்திருந்தும், சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தர்க்க ரீதியான முடிவை எட்டும் விதமாக போரை வழிநடத்தியதில் மிக முக்கிய பங்களிப்பை கோத்தபாய வழங்கியிருந்தார். பாதுகாப்புச் செயலர் மட்டுமல்லாது சிறிலங்கா அதிபரின் சகோதரர் என்ற வகையில், எவ்வித தாமதமுமின்றி இராணுவத்திற்குத் தேவையான வளங்களை மிக வேகமாக வழங்கக் கூடிய தகைமையையும் இவர் கொண்டிருந்தார். சிறிலங்காவின் முப்படைகளுக்கும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கும் விதமாக மிகப் பெரிய பரப்புரையை மேற்கொள்வதற்கு கோத்தபாய முதுகெலும்பாக விளங்கினார். இராணுவ வெற்றியானது கோத்தபாயவுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கியதுடன் இவரை கதாநாயகனாகவும் மாற்றியது. போர் வெற்றிக்கான முக்கிய மூன்று கதாநாயகர்களில் கோத்தபாயவும் ஒருவராவார்.

இதற்கும் அப்பால், சாதாரண அரசாங்க அதிகாரியாக இருந்து கொண்டும் சிறிலங்கா அதிபருக்கு அடுத்ததாக மிகவும் சக்தி வாய்ந்த ஒருவராக கோத்தா விளங்குகிறார். ஜெனரல் சரத் பொன்சேகா பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் மிகவும் மேலான அதிகாரத்தைக் கொண்டுள்ள ஒருவராக சிறிலங்கா அதிபர் விளங்குகிறார். முப்படைத் தளபதிகள், சிறிலங்கா காவற்துறை மா அதிபர் மற்றும் கோத்தபாய ஆகியோருக்கிடையிலான இடைவெளி வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பைப் போன்றது. சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது சகோதரர்களான சமல், பசில் ஆகியோர் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றனர். ஆனால் கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு 'அரசியல் விலங்கு' அல்ல. இவர் ஒரு 'இராணுவ விலங்கு' ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணுவக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார்.

தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர்:

போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினரின் நலன்சார் செயற்பாடுகள், போர் வெற்றிக்கான கதாநாயகன் எனப் புகழப்படும் கோத்தபாயவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோத்தபாயவின் இராணுவ மேலாண்மையானது வடக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டுமல்லாது நாடு முழுவதையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டில் செயற்படும் கிளர்ச்சிவாதிகள் அழிக்கப்பட்ட பின்னர் தோற்கடிக்கப்பட்ட கிளர்ச்சி வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வெற்றிபெற்ற பாதுகாப்புப் படைகளிடம் வழங்கப்படுவதில்லை. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாசனமாகக் காணப்படுகிறது.

1971ல், அப்போதைய சிறிலங்கா அரசாங்கத்திடம் சரணடைந்த அல்லது சிறைப்பிடிக்கப்பட்ட 18,000 கைதிகளைப் பராமரிப்பதற்கான பொறுப்பை சிறிமாவோ பண்டாரநாயக்கா, பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கவில்லை. பதிலாக, இக்கைதிகளைப் பராமரிப்பதற்கான அனுமதி சிறைச்சாலைத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டது. இவர்களைப் பராமரிப்பதற்கு சிறைச்சாலை ஆணைக்குழுவிடம் போதியளவு ஆளணி வளம் காணப்படாததால் சிறைச்சாலை ஆணைக்குழு தனக்குத் தேவையான ஆட்களை புதிதாக நியமனம் செய்தது. சிறைகளில் போதியளவு வசதிகள் காணப்படாததால் இக்கைதிகளைப் பராமரிப்பதற்கான தற்காலிக முகாங்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாங்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்தப்படவில்லை. இவை சிறைச்சாலைத் திணைக்களத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. பொதுவாக பாதுகாப்புப் படையினர் நாட்டில் போர் இடம்பெறும் போது அல்லது அழிவுகள் ஏற்படும் சூழலிலேயே இராணுவ முகாங்களுக்கு வெளியில் கொண்டு செல்லப்படுகின்றனர். போர் முடிவடைந்த கையோடு இவர்கள் மீண்டும் அவர்களது முகாங்களுக்குள் கொண்டு செல்லப்படுவர். இதன்மூலம் நாட்டில் சிவில் நிர்வாகம் இடம்பெற முடியும். இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனமாகக் காணப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமையானது உள்நாட்டில் செயற்பட்ட முதலாவது ஆயுதக் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டதாகக் கருதப்பட முடியாது. சிறிலங்காவைப் பொறுத்தளவில் இது மூன்றாவது சம்பவமாகும். இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது நாட்டின் பல பாகங்களிலும் தற்காலிக இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டன. ஜே.வி.பி கிளர்ச்சிக்கு எதிராக சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையை மேற்கொண்ட போது பலர் அதனை எதிர்த்தனர்.

தென்சிறிலங்காவைச் சேர்ந்த சிங்களவர்கள் இராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போது தென் சிறிலங்காவைச் சேர்ந்த சிங்களவர்கள் பாதுகாப்புப் படையினர் போர் வெற்றிக்கான கதாநாயகர்கள் எனக் கருதினர். ஆனால் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி முடிவடைந்த போது இதே சிங்களவர்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் போர்க் கதாநாயகர்களாக ஏற்றுக் கொண்டு கொண்டாடவில்லை. ஜே.வி.பி கிளர்ச்சியின் போது சிறிலங்கா பாதுகாப்புப் படையினரை விமர்சித்த சம்பிக்க றணவக்க மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்கள் கூட தற்போது தமிழ் இளையோர்களைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது பாதுகாப்புப் படையினரைப் போர்க் கதாநாயகர்கள் எனப் போற்றிப் புகழ்கின்றனர்.

ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்க விரும்பாத தென்னிலங்கை சிறிலங்கர்கள் கூட பாதுகாப்புப் படையினரின் தலையீட்டை விரும்பவில்லை என்பதை அதிபர் பிறேமதாச உணர்ந்திருந்தார். இதன் காரணமாகவே பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக இராணுவ முகாங்களை ஜே.வி.பி கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட கையோடு அகற்றுவதென பிறேமதாச தீர்மானித்தார்.

இக்கோட்பாடானது வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் பொருத்தமானதாகும். வடக்கில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இராணுவ அடக்குமுறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. இதற்கு கோத்தபாயவே முக்கிய காரணமாகும். கோத்தபாய அரசியல் சார் நோக்குகளுக்குப் பதிலாக இராணுவ நோக்கைக் கொண்டிருப்பதே இதற்கான அடிப்படையாக இருக்க முடியும். பாதுகாப்புச் செயலர் என்ற வகையில் போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவப் படைகளை மீண்டும் அவர்களது முகாங்களுக்குள் கொண்டு செல்வதைக் கோத்தபாய கடைப்பிடித்திருக்காவிடினும், நாட்டின் அதிபர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச இதனைச் செய்திருக்க முடியும்.

அதாவது போர் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களை நிர்வாகம் செய்வதற்கான அனுமதியை சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு வழங்காது அவர்களை மீண்டும் அவர்களது முகாங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற கோட்பாட்டை சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றோ அல்லது முன்னாள் அதிபர் பிறேமதாச போன்றோ மகிந்த ராஜபக்ச கடைப்பிடித்திருக்க முடியும்.

சிறிலங்கா அதிபர் மற்றைய அதிகாரிகளின் பொறுப்புக்களில் தலையீடு செய்வது போன்று தனது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாயவின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதில்லை. கோத்தா, அதிபரின் சகோதரர் என்ற வகையில் மட்டுமல்லாது, மிகப் பெரிய இடர்களின் மத்தியில் கோத்தபாய ராஜபக்ச இராணுவப் போரை வெற்றி கொண்டமையே இதற்கான காரணமாகும். எந்தவொரு தலையீடுமின்றி கோத்தபாய தனது திட்டங்களை அமுல்படுத்த முடியும் என்பதே சிறிலங்கா அதிபரின் கோட்பாடாக உள்ளது. பாதுகாப்புச் செயலர் அதிகாரம் மிக்கவர் என்ற வகையில் இவர் எவருக்கும் கட்டுப்படமாட்டார் என்பதை இது பிரதிபலிக்கிறது.

தான் தனது சகோதரரை மிஞ்சி எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்பதை கோத்தபாய அவாக்களாகக் கொண்டிருந்தாலும் கூட, இராணுவக் கண்ணோட்டத்தின் ஊடாக அரசியல் நகர்வுகளை ஆராய்கின்ற மனப்பாங்கைக் கொண்டவர் என்ற வகையில் கோத்தா, தனது சகோதரருக்கு மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் நலன்களையும் குழிதோண்டிப் புதைப்பவராக உருவாகியுள்ளார்.

இறந்தவர்களை நினைவுகூருதல்:

தமிழர்கள் வாழும் வடக்கில் ஒரேயொரு ஆயுத அமைப்பு மட்டுமே இருந்தது. சிங்களவர்கள் வாழும் தென் சிறிலங்காவில் ஒரே அமைப்பின் கீழ் இரண்டு கிளர்ச்சிவாதிகள் இருந்தனர். இவ்விரு கிளர்ச்சிக் குழுக்களையும் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் நேசத்திற்குரியவர்கள் இவர்களை நினைவுகூரினர். அக்காலப்பகுதியில் கிளர்ச்சிகளின் போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருவதற்காக அன்னையர் முன்னணி என்கின்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பினை தீவிரமாக ஆதரித்தவர்களில் மகிந்த ராஜபக்சவும் ஒருவராவார்.

ஒருவர் எவ்வகையில் இறந்தாலும் கூட இறந்தவர்களின் உறவுகள் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். ஆனால் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கு கோத்தபாய ராஜபக்ச மறுத்துவருவதானது இவர் அரசியல் இதயத்தைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக இராணுவ இதயத்தைக் கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம். தமிழ்ப் புலிகளின் சமூக அரசியல் பின்னணி எதுவும் கோத்தபாயவுக்குத் தெரியாது என்பதையே இது சுட்டிநிற்கிறது. இவர்களைப் பயங்கரவாதிகள் என்றே கோத்தாவின் இராணுவக் கண் நோக்குகிறது. கோத்தாவுக்கு பயங்கரவாதியாக ஒருவர் உருவாவதற்கான அடிப்படை சமூக பொருளாதாரக் காரணிகள் எவை என்பது தெரியாது. தன்னால் தோற்கடிக்கப்பட்ட புலிகள் ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளும் வெளிநாட்டு இராணுவம் அல்ல என்பதும் இவர்கள் சிறிலங்காவின் சொந்த மக்களான தமிழர்களின் பிள்ளைகள் தான் என்பதையும் கோத்தா புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்.

போர்க் காலத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கோத்தபாய அனுமதிக்கவில்லை. சிறிலங்காவானது தனது உள்நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நேர்மையான உள்ளக விசாரணையை மேற்கொண்டு, தவறிழைத்தவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கியிருந்தால், அனைத்துலகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கத் தேவையில்லை. இந்தவகையில், இவ்வாறான ஒரு வாய்ப்பை சிறிலங்கா நழுவவிட்டதற்கும், இலகுவாகத் தீர்க்க முடியாத நெருக்கடியை நாடு எதிர்கொள்வதற்கும் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பாளி ஆவார். தனக்கு விருப்பமான தனது இளைய சகோதரர் அவர் விரும்பியவாறு செயற்படுவதற்கு சிறிலங்கா அதிபர் அனுமதித்ததானது மிகப் பெரிய தவறாகும்.

இழப்புக்கள் என்பது எந்தவொரு யுத்தத்திலும் தவிர்க்க முடியாததாகும். 71 கிளர்ச்சிகளின் போதும் இழப்புக்கள் ஏற்பட்டன. இக்கிளர்ச்சியின் போது படுகொலை செய்யப்பட்டவர்களுள் அழகிய அரசியான சோமாவதி மன்னம்பரியின் படுகொலை அனைத்துலக மட்டத்தில் அதிகம் கலந்துரையாடப்பட்ட விடயமாகும். இவரைக் கொலை செய்த இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்து தண்டனை வழங்குமாறு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கட்டளையிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் உச்ச தண்டனையை வழங்கியது. இது இராணுவத்தினருக்குச் செய்யப்பட்ட துரோகம் அல்ல. இந்தக் கொலை வழக்கின் மூலம் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட அவப்பெயரைக் களைவதற்கு நீதிமன்றின் இத்தகைய தண்டனை உதவியது.

கோத்தபாயவால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்:

சிறிலங்கா இராணுவத்தினர் சிவில் நிர்வாகங்களில் தலையீடு செய்வதற்கான கட்டளையை கோத்தா வழங்கியதானது மிக மோசமான விளைவாகக் காணப்படுகிறது. சிவில் நிர்வாகங்களால் முகாமை செய்ய வேண்டிய பல்வேறு பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருத்தமான பயிற்சிகள் வழங்கப்படாது இராணுவ அதிகாரிகள் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இராணுவ சார் கற்கைகளை மட்டுமே பூர்த்தி செய்துள்ளனர். சிறிலங்காவின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவது மட்டுமன்றி நாட்டின் சிவில் அரசியல் நிறுவக முறைமையும் சீர்குலைக்கப்பட்டுள்ளது. நீதிக்கு அப்பால் குற்றவாளிகளுக்கு மிகக் கொடூரமான தண்டனை வழங்கும் முறைமையை கோத்தா அறிமுகப்படுத்தியுள்ளார். இது அனைத்துலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு பாசிச நடவடிக்கையாகக் காணப்படுகிறது.

அரசியல் செயற்பாடுகளில் உத்தியோகபூர்வமாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையிலும் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்துவதானது கோத்தாவால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய குற்றமாகக் காணப்படுகிறது. போர்க் காலத்தின் போது சில நிறுவனங்கள் போருக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டன. அக்காலப்பகுதியில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையானது போரில் ஈடுபடுவது பிழையானது என்பதை உணர்த்தினாலும் கூட, இந்த அமைப்புக்களை அடக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நீதிக்கு அப்பாலான வன்முறை சார் கோட்பாடானது இந்தப் பரப்புரை நடவடிக்கைகளைக் குழப்பியது. இப்பரப்புரைகளில் ஈடுபட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் காணாமற்போயினர். சில ஊடகங்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான சில மோசமான சம்பவங்களில் இராணுவத்துடன் தொடர்புபட்டவர்கள் ஈடுபட்டனர் என்பது வெளிப்படையானது. போர் முடிவடைந்த பின்னரும், இவ்வாறான வன்முறைகள் நிறுத்தப்படவில்லை. பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்ந்தும் நாட்டில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களை மேற்கொண்டனர்.

தீவிரவாதத்திற்கு ஆதரவளித்தல்:

சிறிலங்காவில் தற்போது அதிகம் பேசப்படும் தீவிரவாத பௌத்த அமைப்பான பொது பல சேனவிற்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பாதுகாப்பு வழங்குகிறார். இந்த அமைப்பால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை நிறுத்துவதற்குப் பதிலாக மேலும் மேலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு கோத்தபாய ஆதரவு வழங்குகிறார். பொது பல சேனவின் தலைவரான ஞானசார தேரர் பல்வேறு வன்முறைகளில் ஈடுபடுகின்ற போது நாட்டின் பாதுகாப்புப் படையினர் அதற்கான அனுமதியை வழங்குகின்றனர். சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலருக்கும் தேரருக்கும் இடையிலான தொடர்பை பாதுகாப்புப் படையினர் அனைவரும் நன்கறிந்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்க அமைச்சர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேரரால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வன்முறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இதில் கோத்தபாயவின் ஆதரவு உள்ளது என்பதை உணர்ந்து இவர்கள் அமைதி காக்கின்றனா. இதேபோன்று ஞானசார தேரரின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத முன்னணி பௌத்த பிக்குகள் கூட தேரருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பால் அமைதி காக்கின்றனர்.

ஹலால் பிரச்சினை தோன்றிய போது, பிரபலமான, மதிக்கப்படுகின்ற பௌத்த பிக்குகள் சிலர் இதனை சமரசமாகத் தீர்க்க முன்வந்தனர். இந்தப் பிரச்சினையில் ஈடுபட்ட அமைப்பானது குறித்த பிக்குகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டியதுடன் கூடாத வார்த்தைகளால் திட்டியது. இதனால் இந்தப் பிக்குள் தமது முயற்சியைக் கைவிட்டனர். பாதுகாப்பு அமைச்சருக்கும் பொது பல சேனவுக்கும் இடையிலான வரவேற்கப்படாத உறவால் பெருவலவில் துன்பியல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. பெருவலவில் பௌத்த நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் ஊர்வலமானது அந்தப் பகுதியில் மிகப் பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என அரசியல் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, சில சிங்கள அமைச்சர்கள் கூட இந்த ஊர்வலத்தை நிறுத்துமாறு காவற்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பாதுகாப்புச் செயலரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலால் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.

இதேபோன்று அளுத்கமவில், ஞானசேரா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இவர் இந்த இடத்தில் பெற்றோல் ஊற்றப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறினார். இதன்பின்னர் இவரது கையாட்களால் இங்கு தீ வைக்கப்பட்டது. சிவில் உடையில் நின்ற பாதுகாப்புப் படையினர் இந்த கலகத்தில் ஈடுபட்டதாக இப்பகுதி வாழ் முஸ்லீம்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் தெரிவித்தனர். ஞானசேர தேரரின் நடவடிக்கையானது பௌத்தத்துடனோ அல்லது துறவற நிலை சார்ந்ததோ இல்லை என்பதால் இவர் விரைவில் பொது பல சேனவின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவார் என இதன் தலைவர் கிரமா விமலஜோதி தேரர் விடுத்த சிறப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதுகாப்புச் செயலருக்கும் பொது பல சேனவுக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என்பதை ஊடக மாநாட்டின் மூலம் தெரியப்படுத்துமாறு ஞானசேரவிடம் பாதுகாப்புச் செயலர் அறிவுறுத்தியிருந்தார். இதனை நான் சில ஊடகவியலாளர்கள் மூலம் அறிந்துகொண்டேன். ஊடக நிறுவனம் ஒன்றின் செய்திப் பணிமனையிடம் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொது பல சேனவின் ஊடகக் கருத்தரங்கை முதன்மைப்படுத்துமாறு கோரியிருந்தார். ஆனால் இதற்கு குறித்த ஊடகவியலாளர் சாதகமான பதிலை வழங்காததை அடுத்து, பாதுகாப்புச் செயலர் ஊடக நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஞானசேர தேரரின் ஊடகக் கருத்தரங்கை முதன்மைப்படுத்துமாறு கோரினார். இவ் ஊடகக் கருத்தரங்கில், தமது அமைப்பிற்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என மீண்டும் மீண்டும் தெரிவித்தார். இது பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த பூனையை வெளியில் எடுத்துவிட்ட கதைக்கு ஒப்பானதாகும்.

வரலாற்றின் ஒரு கட்டத்தில், பிரபாகரனின் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து சிறிலங்கா இராணுவத்தினரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியவர் என்பதால் போர்க் கதாநாயகன் எனப் போற்றப்படும் கோத்தபாய ராஜபக்ச, இன்று நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவராக உள்ளமை இதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி:theindpendent.lk

http://tamil.theindependent.lk/index.php/news2/3056-2014-07-12-04-40-56