Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!

ழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2009-ஆம் ஆண்டு மே மாதம்) இலங்கையின் இனவெறி பாசிச, பயங்கரவாத அரசும் இராணுவமும் நடத்திய ஈழத் தமிழின அழிப்புப் படுகொலைகள் மிகக் கொடூரமாகவும் வக்கிரமாகவும், மனிதத் தன்மைகள் சிறிதுமற்றதாக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள்தாம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆதாரங்கள் ஏற்கெனவே தொடர்ந்து வெளிவந்துள்ளன.

இந்த போர்க் குற்றங்களை நடத்திய இலங்கை அரச பயங்கரவாதிகள் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை, கடும் தண்டனை என்பதற்கு பதிலாக “மனித உரிமை மீறல்கள்” என்ற நீர்த்துப்போன பெயர் சூட்டி குற்றவாளிகளே விசாரித்து, நிவாரணம் தேடிக் கொள்ளச் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு நிறைவேற்றி ஓராண்டாகப் போகிறது. அதன் மீதான பரிசீலனை இம்மாதம் அவ்வமைப்பில் வரவிருக்கும் சூழலில் சேனல்-4 என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி “நிகழாத அமைதி மண்டலம் – இலங்கையின் படுகொலைக் களம்” என்ற ஆவணப் படத்தை அவ்வமைப்பின் ஜெனிவா மாநாட்டில் முன்வைக்கப் போகிறது.

அந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அவை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன், தனது ஐந்து மெய்க் காப்பாளர்களோடு இலங்கையின் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பல மணி நேரம் இராணுவ முகாமில் காவலில் வைத்திருந்து, கொடூரமாகவும் வக்கிரமாகவும் கொல்லப்பட்டான் என்பதை சேனல்-4 தெலைக்காட்சி நிரூபிக்கும் காட்சிப் படங்கள். “பிரபாகரனின் மகன் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் ஊடே சிக்கிக் குண்டு பாய்ந்து இறந்து போனான்” என்று இலங்கை அரசு சொல்லிவருவது அப்பட்டமான பொய்தான் என்பதை அப்படங்கள் நிரூபிப்பதாக உள்ளன. இலங்கை இராணுவத்தின் வன்கொடுமைப் பிரிவான 53-வது பட்டாளத்திடம் பாலச்சந்திரனும் அவனது ஐந்து மெய்க்காப்பாளர்களும் சரணடைந்தனர். அதிபர் ராஜபக்சேவின் தம்பியும் இராணுவச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே உத்திரவிட்டதன் பேரில் சரணடைந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அப்படங்கள், சிங்கள இனவெறிப் பாசிச -அரச பயங்கரவாதப் போர்க் குற்றவாளிகள் மற்றும் இந்திய ஆட்சியாளர்கள் போன்ற அவர்களின் சர்வதேசப் பங்காளிகள் தவிர உலக மக்கள் அனைவரின் நெஞ்சங்களையும் பதைபதைக்கச் செய்துவிட்டன. ஆனால், இனஅழிப்புக் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் பங்காளிகளுக்கு இவை ஒன்றும் புதிதானவை அல்ல. இனஅழிப்புப் போரில் தாம் புரிந்த குற்றங்களை எல்லாம் வெளியில் அடியோடு மறுத்து வந்தாலும், அந்தக் குற்றங்களைத் தமது வீரதீரச் சாதனைகளாக – வெற்றிப் பதக்கங்களாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே, ராஜபக்சேக்கள் தலைமையிலான சிங்கள இனவெறி பாசிச, பயங்கரவாதிகளின் போர்க்குற்றச் சாதனை ஆவணங்களின் பட்டியலில் உள்ளவைதாம் தவணை முறையில் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்போர்க் குற்றங்களின் உண்மை விவரங்கள் முழுமையும் இப்போது அவர்களுக்கு மட்டுமே தெரிந்தவை அல்ல. ராஜபக்சேக்களே கூறியதைப் போல, இந்தியாவுக்காக அவர்கள் நடத்திய ஈழப் போரின் குற்றங்கள் இந்தியாவின் “ரா” உளவுப் படை மற்றும் இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் நடந்தவைதாம். இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான சிவசங்கரமேனன், எம்.கே. நாராயணன் போன்ற அதிகாரிகள் வழிகாட்டி நடந்தவைதாம். அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ. மற்றும் ஐ.நா. பேரவை அதிகாரிகள் கண்முன்பாக நடந்தவைதாம்.

அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசானது, உலகமெங்கும் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே வகையான செயல்தந்திரங்களை மேற்கொள்வதில்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசி பேரழிவு நடத்தியது, தற்போது ஆஃப்கான், ஈராக் மீது பகிரங்கமான ஆக்கிரமிப்புப் பேரழிவுப் போரை நடத்தியது; – இவை ஒருவகை. உலகின் பல ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் சி.ஐ.ஏ. உளவுப் படைகளை – கூலிப் படைகளை ஏவி ஆட்சியாளர்களைப் படுகொலை செய்து ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தியது; தெற்கு வியத்நாம், காங்கோ, சிலியில் அரங்கேற்றிய -இவை மற்றொரு வகை. மேலும் ஒரு வகைதான், விடுதலை இயக்கங்களுக்குள் ஊடுருவி, சதிவேலைகள் புரிந்து, தனது முகமையாளர்கள் மூலம் இயக்கங்களைச் சீர்குலைத்து அவற்றின் இலட்சியங்களைச் சீரழிப்பது; இதற்கு மிக அண்மைக்கால எடுத்துக் காட்டு அரபு நாடுகளில் வெடித்த அரபு மக்கள் எழுச்சிகளுக்குள் புகுந்து, உள்ளிருந்து அவற்றை வீழ்த்தியது. நார்வே நாட்டு எரிக்சோல்ஹைம், ஐக்கிய நாடுகள் அவையின் விஜய் நம்பியார் போன்ற தனது கைக்கூலிகள் மூலம் போர் நிறுத்தம், சமாதான முன்னெடுப்பு என்ற பெயரில் இலங்கை – ஈழப்போரில் நுழைந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைமையிடம் போர் நிறுத்தம், மீட்புக் கப்பல் வருகை, சரணடைவு ஏற்பாடு ஆகிய சதித் திட்டங்களை முன்வைத்து நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டது. இந்த வகையில் ஈழத்தில் நடந்தேறிய போர்க் குற்றங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிந்தே நடந்தேறின.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் உள்ள இன்றைய உலகின் வெனிசுலா, கியூபா, வடகொரியா, ஈரான் போன்ற பகை முரண்பாடு கொண்ட நாடுகளைத் தவிர, அமெரிக்க சி.ஐ.ஏ. உட்பட உளவுப் படைகள் எளிதில் நுழைந்து இராணுவ, அரசியல் இரகசியங்களை அறிய முடியாத நாடுகள் எதுவும் கிடையாது.

இலங்கை அரசின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்று, விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து தனது நாட்டில் வேட்டையாடியது. ஆகவே, சர்வதேச கிரிமினல்களான ராஜபக்சேக்கள் ஈழத்தில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் எதுவும் அமெரிக்கா அறியாதவை அல்ல. அமெரிக்கா விரும்பினால் போஸ்னியா, ஆஃப்கான், ஈராக்கில் செய்ததைப் போல இப்போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இலங்கையின் மீது நேரடித் தண்டனை நடவடிக்கையாக அதிரடி இராணுவத் தாக்குதல்கள் நடத்த முடியும். ஆனால், அமெரிக்கா அவ்வாறு செய்யாமல் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ராஜபக்சேக்களே விசாரிக்கலாம், தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று மென்மையாக அணுகுகிறது. ஏனென்றால் இலங்கை அதன் பகை சக்தி அல்ல; நட்பு நாடுதான்.

அமெரிக்காவும் அதன் எடுபிடி நாடுகளும் சொல்லிக் கொள்வதைப் போல “உலகில் எங்குமே பயங்கரவாதக் குற்றச் செயல்களும் அரச பயங்கரவாதப் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடக்கவே கூடாது. எங்கும் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்” என்பது அவற்றின் உண்மையான நோக்கமல்ல. அமெரிக்காவே உலகின் பல நாடுகளிலும் உள்ள பாசிச பயங்கரவாத, முடியரசு சர்வாதிகார இராணுவக் கொடுங்கோன்மை அரசுகளை மட்டுமல்ல, பல பயங்கரவாத கிரிமினல் குற்றக் கும்பல்களையும் ஊட்டி வளர்க்கிறது. தானே உலகின் பல இடங்களில் ஆள்கடத்தல்கள், வதை முகாம்கள், படுகொலைகள், ஆளில்லா விமானங்களை ஏவி கொத்துக் குண்டுகளை, நச்சுக் குண்டுகளை வீசி சிவிலியன் மக்களைப் படுகொலைகள் புரிவது ஆகிய இராணுவ – அரச பயங்கரவாதக் குற்றச் செயல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

அவ்வாறான ஒரு நாடு இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரித்து நடவடிக்கை எடுத்திடக் கோரும் ஒரு தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை அரங்கில் முன்மொழிந்து, அதன் எடுபிடி நாடுகள் ஆதரிக்கின்றன என்றால், இவை அனைத்தும் சர்வதேச பூகோள – அரசியல் மற்றும் இராணுவ உள்நோக்கங்களுக்காக நடத்தப்படும் வெறும் அரசு தந்திர மாறாட்டங்கள் தவிர வேறொன்றும் அல்ல. உலகின் கிழக்கு நாடுகளையும் மேற்கு நாடுகளையும் இணைக்கும் பெருங்கடல் வழித்தடத்தில், சர்வதேச இராணுவ, பொருளாதார, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்தில் உள்ள இலங்கையை அமெரிக்கா தனது முழுமையான மேலாதிக்கத்தின் கீழ் இருத்திக் கொள்வதற்கான நோக்கங்களை உள்ளடக்கியதுதான். மற்றபடி போர்க் குற்றங்களுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்காகவும் நடுநிலை விசாரணை நடத்தி இலங்கை அரசு மீதும் ராஜபக்சேக்கள் மீதும் தண்டனை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமே கிடையாது.

எனவேதான், இலங்கை அரசு மீதான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசே விசாரித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற வரம்புகளைத் தாண்டாத ஒரு தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்து, ஐ.நா. அவையின் மனித உரிமைகள் அமைப்பின் கடந்த ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அது போதாதென்று, “இலங்கை அரசின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடாது” என்று இலங்கை அரசுக்குத் துணை போகும் வகையிலான இந்தியா கொண்டு வந்த திருத்தமும் மறுக்காமல் ஏற்கப்பட்டது. கடந்த ஆண்டுத் தீர்மானத்தை ஒரு அணுஅளவு கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், இலங்கை அரசுக்கு எதிரானதென்று கூறப்படும் இந்த ஆண்டுத் தீர்மானமோ, இந்தியத் திருத்தத்தோடு மேலும் நீர்த்துப் போவதற்காகவே அமெரிக்காவால் முன்வைக்கப்படுகிறது.

இவ்வாறான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்; ஈழ மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – என்பவைதாம் கருணாநிதி, வீரமணி, திருமா தலைமையிலான “டெசோ” அமைப்பின் கோரிக்கை. இக்கோரிக்கைகளோடு, இலங்கை ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்கள் மீது நடுநிலையான சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி மன்றத்தால் தண்டிக்கப் படவேண்டும் என்று மற்ற பிற தமிழினவாத அமைப்புகள் கோருகின்றன.

ஈழத் தமிழினப் பிரச்சினையில் எவ்வளவோ பின்னடைவுகள் – இழப்புகளுக்குப் பிறகும் சரியான பாடங்கள் கற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் துரோகங்கள், அதே தவறுகள் அரங்கேற்றப்படுகின்றன. முதலாவதாக நட்பு சக்திகளையும், எதிரி சக்திகளையும் வரையறுத்துக் கொள்வதில், அதற்கேற்ப இயக்கங்களை வழிநடத்துவதில் மீண்டும் தவறிழைக்கப்படுகிறது.

இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் என்ன நேர்ந்தாலும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழினத்துக்கு ஆதரவாகவும் நிலையெடுக்கவே மாட்டா. அதில்தான் இந்தியாவின் அரசியல், பொருளாதார, அரசுதந்திர, பிராந்திய விரிவாக்க ஆதிக்க நலன்கள் தங்கியிருக்கின்றன. இலங்கையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதிக்கம் பெறுவதைக் காட்டி இந்தியா ஈழத்தை ஆதரிக்க வேண்டுமென்றோ, ஈழம் இந்திய நலன்களுக்கு எதிராகப் போகாது; எப்போதும் துணைநிற்கும் என்று வாக்குறுதியளித்தோ இன்னும் பலவாறான “தாஜா”க்கள் செய்தோ இந்தியாவின் ஆதரவைப் பெறமுடியாது. பிரபாகரன் காலத்திலேயே அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போய்விட்டன. அமெரிக்காவும் இந்தியாவைப் போன்ற தன்மை உடைய நாடுதான்; அதைவிட மேலாக உலக மேலாதிக்கத்துக்காக வெறிபிடித்து அலையும் நாடுதான்.

இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் போர்க் குற்றங்களை விசாரித்துத் தண்டிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் துணை நிற்குமென்பது, பொய்த் தோற்றத்தை உருவாக்கி உலகத் தமிழர்களை ஏமாற்றுவதுதான். ஈழ ஆதரவு நாடகமாடும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தலைமையிலான இரண்டு திராவிடக் கட்சிகளும் நன்கு தெரிந்தே இத்தகைய ஏமாற்று வேலையைச் செய்கின்றன. ஏனெனில், இந்திய அரசின் சதிகளை அறிந்திருந்தும் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு வெறும் பார்வையாளர்களாகவே இருந்து அதற்குத் துரோகத்தனமாகத் துணைபோனவைதாம், இக்கட்சிகள். ஓட்டுக் கட்சி அரசியல் ஆதாயத்துக்காக அவ்வப்போது ஈழ ஆதரவு சவடால்கள் அடித்தாலும், இவை தமது பிழைப்புவாத அரசியல் நலன்களுக்கு மாறாக ஒருபோதும் ஈழ ஆதரவு நிலையெடுக்கமாட்டா.

இன்றைய நிலையில் ஈழப் பிரச்சினையில் அக்கறையுள்ள தமிழர் அமைப்புகள் என்ன நிலை எடுத்துள்ளன? அவை என்ன செய்கின்றன? அவை சரியானவைதானா? விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் விமர்சனமற்ற விசுவாசம் காட்டும், பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, தவறே செய்யாத, தன்னிகரற்ற பிம்பமாக வழிபடும் தமிழினவாதக் குழுக்கள் மேற்கண்ட கேள்விகளை எழுப்புகிறவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்குத் தயாராக உள்ளன. விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் விமர்சனம் வைத்தவர்கள், பிரபாகரன் தலைமையை ஏற்காதவர்கள் எல்லோரும் ஈழத் தமிழினத்துக்கே எதிரானவர்கள்; எதிரியின் கைக்கூலிகள்; அப்படிப்பட்ட ஈழத் தலைவர்களைக் கொன்றதுகூடத் தவறல்ல; அப்படிப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்வதையும் செய்வதையும் ஏற்கக்கூடாது என்பதுதான் அத்தமிழினவாதக் குழுக்களின் நிலைப்பாடு.

இந்திரா, எம்.ஜி.ஆர், “ரா” போன்ற எதிரிகளுக்குத் துணைபோன அதேசமயம், ஈழ விடுதலைக்கான சகோதர இயக்கத்தினரை புலிகள் அழித்தொழித்தனர். தப்பிக்கவே வழியில்லாத ஓரிரு சதுரக் கிலோமீட்டர் அளவுள்ள புவிப் பரப்பில், ஈழத்தின் எதிரிகள் (இந்தியா, அமெரிக்கா) வந்து காப்பார்கள் என நம்பி இலட்சக்கணக்கான தமிழர்களைக் குவித்தனர். இவ்வாறு ஈழ விடுதலைப் போரைத் தலைமையேற்று வழிநடத்துவதில், நண்பர்களையும் எதிரிகளையும், ஈழப் போரின் அரசியல் நிலைமைகளையும் மதிப்பீடு செய்து அணுகுவதில் தொடங்கி ஏராளமான அரசியல், இராணுவப் பிழைகள் செய்த பிரபாகரன் மீதுதான் உலகமகா அரசியல், இராணுவத் தலைவர் என்ற கருத்துருவாக்கமும் தனி நபர் வழிபாடும் உருவாக்கப்பட்டது.

இதில் தமிழகத் தமிழினவாதக் குழுக்களின் பங்கு கொஞ்சமல்ல. இதோ பலாலியில் புலிக் கொடியேற்றி விட்டார்கள்; நாளையே சுதந்திரத் ஈழம் பிறப்பிக்கப்படும் என்றார்கள்; முள்ளிவாய்க்காலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட புலிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்; மூன்று வாரங்களுக்கு முன்புகூட புலிகள் முல்லைத்தீவில் முடங்குவதற்குக் காரணம் பிரபாகரன் ஏதோ இரகசியத் திட்டங்கள் வைத்திருக்கிறார் என்றார்கள்.

இப்போதும்கூட, பிரபாகரன் அரசியல் – இராணுவத் தவறே செய்யவில்லை; 20 நாடுகள் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலையை நடத்தினர் என்று கூறி, ஈழப்போரின் பேரிழப்பு, பின்னடைவுக்கான காரணங்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு மறுக்கிறார்கள். அவ்வாறு செய்தால் விடுதலைப் புலிகள், பிரபாகரன் மீது தாம் உருவாக்கிய பிம்பங்கள் கலைந்து போகும்; அதில் தமது பங்கிற்குப் பொறுப்பேற்க வேண்டிவரும். அதனால்தான் பிரபாகரன் கொல்லப்பட்ட உண்மையைக்கூட ஒப்புக்கொள்ளும் துணிவற்றவர்களாயுள்ளனர். மேலும் பிரபாகரன் நடந்த அதே பிழையான அரசியல் பாதையில் போகின்றனர்.

இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரித்துத் தண்டிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் துணை நிற்குமென்ற நம்பிக்கையை,பொய்த் தோற்றத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்போதும் இந்த “தமிழினத் தலைவர்”களும், “தமிழினவாதக் குழு”க்களும் “தமிழினப் போராளி”களும் ஏற்படுத்துகின்றனர். ஈழத்தில் நடந்த போர்க் குற்றங்களில் இந்தியாவும் கூட்டுப் பங்காளிதான் என்று முள்ளிவாய்க்காலுக்குப் பிறகாவது கண்டுபிடித்த சிலர், தமிழக அரசியல் கட்சிகளும் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு அழுத்தம் கொடுத்தால் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளது நிர்ப்பந்தத்தின் மூலமாக சர்வதேச விசாரணை நடத்தி ராஜபக்சேக்களை வீழ்த்த முடியும்; ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழம் தன்னாட்சியும் பெறவும் முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள்.

ஆனால், இவை எல்லாமும் இனவாத அடிப்படையிலான இலட்சியமும், தீர்வும், ஓட்டுக் கட்சி பாணியிலான அரசியல், நடைமுறை சிந்தனையும்தாம். இன்றைய ஈழம், இலங்கை, மற்றும் அனைத்து நாட்டு அரசியல் நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டவையல்ல. இன்றைய ஈழப் பிரச்சினையின் யதார்த்த நிலையில் உடனடியான, தற்காலிகத் தீர்வு எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் அரிச்சுவடியிலிருந்து தொடங்கி அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இனவாத நோக்கில் உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, சிறியவையானாலும் ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான் நீண்டகாலம் பிடித்தாலும், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.

____________________________________________________________________________

புதிய ஜனநாயகம் – மார்ச் 2013