வெள்ளைவானும் வெள்ளை வேட்டியும்..!
சற்ற ஓய்ந்திருந்த வெள்ளைவான் கடத்தல் மீண்டும் தலை தூக்கிவிட்டது. மக்கள் அமைதியாக இருந்தால் வெள்ளை வானும் வெளியில் வராமல் உள்ளுக்குள்ளே அமைதியாக இருந்துவிடும், மக்கள் அரசுக்கு எதிராக ஏதாவது குரல் கொடுத்தால் வெள்ளை வானும் வெளியில் வந்து விடும்.
இது தான் மகிந்த வெள்ளை வேட்டி கடத்தல்காரர்களின் அரசியல். மக்களை மிரட்டாமல் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்களால் அரசியல் நடாத்துவது என்பது முடியாத காரியம். அந்த அளவிற்கு மக்கள் விரோத ஊழல், வன்முறை, குற்றங்கள் நிறைந்த பாசிச ஆட்சி இவர்களது. தங்கள் குற்றங்களை மக்களுக்கும், சர்வதேசங்களுக்கு மறைக்க வேண்டுமாயின் இந்த வெள்ளைவான் கடத்தலும் கொலையும் இவர்கள் அரசியலுக்கு மிகவும் அவசியம். மகிந்த குடும்ப அரசியல்வாதிகள் மட்டுமல்ல இவர்களோடு கூட்டு சேர்ந்துள்ள சகல அரசியற் கள்ளர்களின் அரசியலும் இது தான். இவர்கள் அமுல்படுத்தியுள்ள சர்வாதிகார இராணுவ அரசியலுக்கு வெளியிலே வர இவர்களால் ஒருபோதும் முடியாது. தங்கள் இந்த கொடூர முகங்கள் மக்களுக்கு அம்பலப்பட்டு விடக் கூடாதென்பதற்காக இவர்கள் போடும் ஜனநாயக வேடங்களோ ஏராளம்.
அண்மையில் கொலன்னாவை பிரதேச மக்களினால் சுற்றிவளைக்கப்பட்ட WP 8649 இலக்கமுடைய வெள்ளை வான் இராணுவ அதிகாரியொருவரால் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டது என்றும், இந்த வெள்ளை வான் 2011ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முதல்முறையாக மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தல் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பதிவுக்கமைய இந்த வாகனத்தின் உரிமையாளர் கிளிநொச்சி பிரதேசத்தில் 1139 இலக்கத்தில் வசித்துவரும் அருள்நாயகம் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் கிளிநொச்சியில் இந்த விலாசத்தில் அருள்நாயகம் என்று ஒரு நபர் இல்லை என்றும் இந்த பெயரும் விலாசமும் போலியானது எனத் தெரியவந்துள்ளது. இராணுவ அதிகாரி ஒருவரே தமிழர் ஒருவரின் பெயரில் இந்த வெள்ளைவானை பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் அடிச்சட்ட இலக்கம் LAJRSKF 16 A 000 2174. இராணுவ அதிகாரி இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு இந்த வாகனத்தை மாதாந்தம் 55ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு விட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் கோதபாயாவின் நேரடி கண்காணிப்பிலேயே இந்த வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இது இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தி. இது போன்று பல செய்திகள் வெளிவந்தாலும் இன்று கிடைத்துள்ள இந்த செய்தியில் சில ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மகிந்த குடும்ப அரசியலின் பொய்முகத்தினை இந்த செய்தி வெளிக்காட்டி உள்ளது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் தங்கள் வெள்ளை வேட்டிக்குள் இதை சுலபமாக மூடிமறைத்து விடுவார்கள். இதில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிக்கும் ஒரு வெள்ளை வானை அனுப்பிவிட்டால் இந்த உண்மைகளை குழிதோண்டி புதைத்து விடலாம். இதற்காக மகிந்தாவின் காலடியில் எத்தனை தமிழ்-சிங்கள மக்கள் விரோத அரசியல்வாதிகள், இராணுவக் கடையர்கள் ஏவல் நாய்களாய் காத்துக் கிடக்கிறார்கள். இந்த வெள்ளை வேட்டி அரசியலும் வெள்ளை வானும் தொடரத் தான் போகிறது.
மக்களுக்கு..! நீங்கள் தனித்து உதிரிகளாக நின்று இவர்களை எதுவும் செய்ய முடியாது. இனவாதத்தை கடந்து ஒன்று சேருங்கள்..! எதிர்த்து நில்லுங்கள்...!
தேவன் 16/03/2012