Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

“ஓட்டை-ஒடிசல-அடியு(பு)ண்ட சட்டி-பானைகள் உள்ளதே மகிந்தாவின் வரவு-செலவுத் திட்டம்!?”

வடக்கின் வசந்தத்திற்கு, கிழக்கின் வடிவெள்ளிகளுக்கு….கோமணம் கூட கொடுபடவில்லை!

நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் பாடசாலைக்கு செல்லும்போது, வீதி வியாபாரிகள் தேங்காய், மாங்காய், பட்டாணிச் சுண்டல், ஓட்டை-ஒடிசல் அடியுண்ட-அடிபுண்ட சட்டி பானைகள் இருக்கா என்ற ஓங்கார ஒலிகொண்ட கூவியழைப்புடன் வியாபாரம் செய்வார்கள்! இந்த “றேஞ்ச்”சில் தான் 2012-ற்கான வரவு-செலலுத் திட்டத்தை வாசித்துள்ளார் மகிந்தர்!

இவரின் வரவு-செலவை எப்படிப் (கூட்டி, கழித்து, பெருக்கி, பிரித்துப்) பார்த்தாலும் எஞ்சி-மிஞ்சி நிற்பது வெறும் சீரோ(0)தான்! இது தான் நாட்டுமக்களிற்கான எதிர்காலப் பயன்பாடும்!

பாராளுமன்றத்திற்கு “அத்தி பூத்தால்ப் போல்த் தான் வருவார்” யாரில் முழித்து வந்தாரோ தெரியவில்லை! இம்முறை வருகை எதிர்க்கட்சியினரின் தாக்குதல்கள், இவரின் அடியாட்களின் எதிர்தாக்குதல் சண்டைக்காட்சிகளாகத்தான் இருந்தது! இதையும் ரசித்துத்தான் வாசிக்க நேர்ந்ததது…வரவு எட்டணா, செலலு பதினாறு அணா என்ற இவரின் வ.செ. எனும் திட்டத்தை!

பாரிய இனவழிப்பின் பின் முட்கம்பி வேலிக்குள் அவலமான அகதிமுகாம் வாழ்வு வாழ்ந்த மக்கள், மீள்குடியேற்றத்தில் அதனிலும் கேவலமான வாழ்வையே வாழ்கின்றார்கள்! இதற்குள் வடகிழக்கில் வாழ்விழந்து வாழும் அபலைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கில்….பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் தலா 750- கொடுக்க முடியும், ஆனால் இவர்களுக்கு ஓர் 500-வது….?

 

குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு அவசரமாக 14 ஆயிரம் மில்லியன் ருபா தேவையென சுவீடன் உயர் அதிகாரிகளிடம் யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்! இதில் 14,000-ரூபாவது வடகிழக்கு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? இதை “பட்டுவேட்டிக் கனவில் வாழும்” வடக்கின் வசந்தத்திடமும், கிழக்கின் விடிவெள்ளிகளிடமும் கேட்கவேண்டியுள்ளது? தன்மான இணைப்பரசியலாளர்களே…! வரவு-செலவுத் திட்டத்தில் கேவலம் உங்கள் கோவணங்களுக்காவது?….

இந்த லட்சண்தில் தான் புலன்(ம்) பெயர்ந்த சில சாதிச்சங்க பிரமுகர்களும், ஓடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு மகிந்தாவுடன் எம். சி. சுப்பிரமணிய “இணைப்பரசியல்” நடாத்தப் போகின்றார்களாம்! இதற்கு மந்திரியைக் கூப்பிட்டு தேசியப்பட்டியலில் எம்.பி. பதவியும் கேட்கின்றார்கள்! மகிந்த மடியில் விளையாடும் டக்கிளஸ்-பிள்ளையான்-கருணாவிற்கே வரவு-செலவுத் திட்டத்தில் கோவணம் கூட இல்லை! அதுவும் உங்களுக்கு….?  

அகிலன்

22/11/2011