Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"ஆயுத எழுத்து" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி

"ஆயுத எழுத்து" ஒரு கற்பனை நாவல் அல்ல. அது சுயவிமர்சனமோ, சுயவிளக்கமோ அல்ல. மாறாக புலிகளின் இனவாத அரசியல், இராணுவ நடத்தைகள் இந்த நாவல் மூலம் நியாப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை கட்டமைத்த புலியிச நடத்தைகளையும், அதை எப்படி மாபியத்தன கிரிமினல் வழிகளில் நாங்கள் அரங்கேற்றினோம் என்பதையும் இலக்கியம் ஊடாக பேசி இருக்கின்றது. கடந்த கால பாசிசத்தினை நியாயப்படுத்தும் படைப்பே ஆயுத எழுத்து.

இந்த நாவல் புலி அரசியலை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. புலிகளின் நடத்தைகளை யாழ் மேலாதிக்க நடத்தைகளின் அங்கமாக முன்னிறுத்தி நியாயப்படுத்தி இருக்கின்றது. புலிகளை முன்தள்ளி நக்கிப் பிழைத்த பாசிட்டுகள், புலிகள் இல்லாத இன்றைய சூழலுக்குரிய சந்தர்ப்பவாதத்துடன், குறித்த காலத்தை மையப்படுத்தி தனிமனிதப் புலம்பலாக வெளிவரும் புலி விமர்சன இலக்கிய வரிசையில், "ஆயுத எழுத்து" புலிகளின் நடத்தைகளை நியாயப்படுத்தி வெளிவந்திருகின்றது. இந்த அடிப்படையில் புலிகளின் நடத்தைகள் ஒட்டிய முரண்பாடுகளை, இலக்கிய அரங்கில் அரசியல் தர்க்கமாக மாற்றியிருக்கின்றது. புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம், இலக்கியத்தை முடக்கி இருக்கின்றது. இதன் மூலம் புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம் இன்றைய தமிழ் இலக்கியப் போக்கினை மாற்றி இருகின்றது. இன்றைய இலக்கிய அரங்கானது புலி அரசியலை பாதுக்காக்கும் புலி நடத்தையை மையப்படுத்திய புலம்பல் இலக்கியமாக குறுகி இருகின்றது. யுத்தத்தில் தோற்றுப்போன சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையில் புலம்பல்களே இத்தகைய இலக்கிய படைப்புகளும் அதனை காவித் திரிவோரினதும் நடத்தைகளுமாகும்.

சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே புலியிசம்

புலியிச சிந்தனை முறை புலிக்குள் மட்டும் இருந்த ஒன்றல்ல. மக்களை மையப்படுத்தாத தேசியம், இனவாதம், சுயநிர்ணயம்… என்று, இதைச் சுற்றிய இயங்கிய எல்லா சிந்தனை முறையிலும், சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே இயங்கியது, இயங்குகின்றது. இது உருவாக்கிய புலியிசம் என்பது, வெறுமனே வலதுசாரிய வெளிப் பூச்சுகளல்ல. நிலவுகின்ற யாழ் மேலாதிக்க சமூக அமைப்பின் மகிழ்ச்சியையோ, அதன் வெளிப்புற அழகையையோ கொண்டு கட்டமைக்கப்பட்ட வெளித் தோற்றமல்ல. ஒழுக்கம், அறம், தூய்மை, பாண்பாடு... என்ற போலியான இழிவான சமூக மேலாதிக்க பாசிச சொல்லாடல்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட புனித புலிகள் பற்றிய விம்பத்துக்கு முரணாதே புலிகளின் நடத்தைகள். மக்களை ஏமாற்றி அவர்களை ஒடுக்கிய புலிகளின் எதார்த்தம் மனித விரோத நடத்தைகளானது. அதற்காக அவர்கள் கையாண்ட வாழ்க்கை நெறியினையும் அரசியலையும் "ஆயுத எழுத்து" பிரதிபலிக்கின்றது.

இயல்பாகவே ஜனநாயக விரோத்தையும், பாசிசத்தையும், மாபியத்தனத்தையும், கிரிமினல் தனத்தையும்... கொண்ட இனவாதம் மூலம் தான், புலிகள் தங்கள் அதிகாரத்தை நிறுவ முடிந்தது. மோசடி, ஊழல், முகம் பார்த்தல், பயன்படுத்தல், பழிவங்குதல்.. என்று அதன் எல்லா இழி கேட்டிலும் ஈடுபட்டவர்கள், வன்முறை கடத்தல், கப்பம், கொலை.. என்று எல்லாவற்றிலும் ஈடுபட்டார்கள். புலிகளின் இந்த வலதுசாரிய அரசியல் பாதையில் பயணித்து, அந்த காதபாத்திரங்களாக முன்னின்று செயற்பட்டவர்கள் தான், உண்மையான அதன் அரசியல் உணர்வுடன் பயணித்த புலிகள்.

புலி அரசியலால் உருவாக்கப்பட்ட ஒருவர் தான் சாத்திரி. எது அவரது புலி அரசியல் வாழ்க்கையாக இருந்ததோ, அதையே தன் "ஆயுத எழுத்து" மூலம் சாத்திரி வெளி உலக்கு கொண்டு வந்து இருக்கின்றார். சாத்திரி இன்னும் புலியாகவே இருப்பதாலும், புலியாக சிந்திப்பதாலும் தான் உண்மையான புலியின் படைப்பாக "ஆயுத எழுத்து" இருக்கின்றது. புலி பற்றி போலி விம்பம் உருவாக்கி பிழைக்கும் கும்பலுக்கும், புலியை நம்பும் அப்பாவிகளுக்கும் "ஆயுத எழுத்து" சொல்லும் உண்மைகள் அதிர்வாக மாறி இருக்கின்றது. புலிகளைச் சொல்லி பிழைத்த பிழைப்புக்கு இது சாவல் விடுகின்றது.

இதில் ஈடுபட்ட ஒருவனின் தொடர்ச்சியான அதே அரசியல் பிழைப்புக்கு, இந்த உண்மை தான் அவனுக்கான ஆயுதம். புலியாக சிந்திக்கும் ஒருவனிடம் சுயவிமர்சனத்தைத் தேடுவது, சுயவிமர்சனத்தைக் கொண்டு இருப்பதாக சுய தர்க்க அறிவில் இருந்து கற்பிப்பதும் காட்டுவதும் அபத்தம்.

நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை மூலமாக புலியிச நடத்தைகளை அது எப்படி அணுகுகின்றது என்பதை விடுத்து, சுய தர்க்க அறிவு மூலம் சுயவிமர்சனமாக விளக்க முற்படுவது உண்மையில் யாழ் மையவாத சிந்தனையின் முரண்பட்ட மற்றொரு வடிவமாகும்.

சாத்திரியின் நாவலின் அரசியலும் சரி, நாவலுக்கான விமர்சன அரசியலும் சரி, மக்களைச் சார்ந்து முன்வைக்கப்படுகின்றதா எனின் இல்லை. பிரமுகர்த்தன இருப்பை தக்க வைக்கின்ற சுய தர்க்கங்களாக குறுகி இருப்பதால், இந்த நாவல் கொண்டு இருக்கும் புலி அரசியல் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

"ஆயுத எழுத்து" ஒரு நாவலா?

"ஆயுத எழுத்து" ஒரு நாவல் அல்ல என்று இலக்கியவாதிகள் என கூறுபவர்கள் சிலரால் பேசப்படுகின்றது. இதன் அரசியல் பின்புலமானது, அடிப்படையில் தங்களை இலக்கியவாதிகளாக பிற்றிக் கொள்ளும் தரப்பின் பொது அச்சமாகும். உண்மையான மனிதர்களின் யதார்த்தவாதத்தை இலக்கியமாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற, வலதுசாரிய சிந்தனை முறையாகும். கற்பனையையும், இயற்கையையும், மொழியையும் முதன்மையாக கொண்டிராத படைப்பு இலக்கியமல்ல என்ற புரட்டுவாதம், உயிர் உள்ள மனிதனையும், அவன் வாழ்வையும் முதன்மையாக கொண்ட படைப்பு இலக்கியத்தை மறுக்கின்ற இலக்கியமாகும். இது இலக்கியதுக்கே இலக்கியம் என்ற வலதுசாரிய வரட்டுப் பார்வையாகும்.

இந்த வரட்டுப் பார்வை கடந்து பார்த்தால் "ஆயுத எழுத்து" ஒரு நாவல். கடந்த இலங்கை வரலாற்றுடன் தொடர்புள்ள சம்பவங்களுடன், தொடர்புபட்ட ஒருவனின் சொந்தக் கதை. நான் என்ற பாத்திரத்தை தவிர்த்து "அவன்" என்ற ஒருவன் ஊடாக நடந்தவற்றில், சிலதைக் கூற முனைகின்றது.

இந்த நாவலில் கூறப்படும் சம்பவங்கள் அன்றைய செய்திகளிலும், மக்கள் சார்ந்த கருத்து ரீதியான அரசியல் விமர்னங்களிலும் காணமுடியும். வன்னிப் புலிகள் தொடங்கி அதன் சர்வதேச வலைப் பின்னல் வரையான, அதன் மக்கள் விரோதப் போக்கும், அதற்கு இசைவான அதன் மாபியத்தனம் வரை, மக்கள் சார்ந்த கருத்து நிலை அரசியலை முன்வைத்தவர்கள் முன் இவை புதியவை அல்ல. இதை புலியாக முன்னின்று செய்தவனுக்கு, இது தான் அவனின் அரசியல் வாழ்க்கை. ஆனால் இந்த வலதுசாரிய செயற்பாடுகளை சரியானதாக ஏற்றுக் கொண்டு, அதையே தமிழ் தேசியமாக கருதியவர்களும், கண்ணை மூடிக்கொண்டு இதன் பின்னால் கும்மியடித்தவர்களுக்கும் "ஆயுத எழுத்து" அதிர்ச்சியளிக்க கூடியவையல்ல. அந்த வகையில் இந்த நாவல் உண்மையின் எதார்த்தமாகும்.

இங்கு "அவன்" அதாவது நான், இதை இப்படிச் செய்தேன் என்பது, நடந்த எதார்த்தத்தினை நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்மையை தங்களைப் போல் மூடிமறைக்காது சொன்னதே, சாத்திரிக்கு எதிரான புலியைச் சொல்லி பிழைக்கும் புலித் தரப்பின் இன்றைய எதிர்வினையாகும்.

உதாரணமாக சோபாசக்தியின் நாவல்களை எடுத்தால் அதன் உள்ளடக்கத்துக்கு "ஆயுத எழுத்து"க்கும் இடையேயான அரசியல் ஒற்றுமையையும், வலதுசாரிய ஒத்த நோக்கையும் காண முடியும். அடிப்படையில் புலி அரசியலை விமர்சித்த இலக்கியமாக இருப்பதில்லை. சம்பங்களைத் தவறானதாகவோ அல்லது சரியானதாகவோ காட்டுவதே இந்த இலக்கியத்தில் உள்ள அரசியல் ஒற்றுமையாகும். இந்த இலக்கிய மூகமுடித்தனம் அம்பலமாவதைத் தடுக்கவே, இதை நாவல் இல்லை என்ற நிறுவ முனையும் இலக்கிய விமர்சனப் போக்கைக் காண முடியும்.

குறிப்பாக இந்த இலக்கிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்தோ, சமூகம் நோக்கம் சார்ந்தோ, படைப்பு நோக்கத்தைக் கொண்டு இருப்பதில்லை என்பதே அடிப்படையான உண்மை. சாத்திரி கூட சோபாசக்தியின் நோக்கில் இருந்து முரண்படவில்லை.நடந்ததை சரியென்று அப்படியே சொல்லி விடும் சாத்திரியின் நேர்மை, சோபாசக்திக்கும் கிடையாது. சாத்திரி சொன்ன புலி எதார்த்தம் இலக்கிய தன்மை குறைவானதாகவும், சோபாசக்தி மூடிமறைத்து சொல்லும் கையாளும் இலக்கிய மொழி இலக்கியம் என்று கூறுவது தான், இதை நாவல் அல்ல என்று கூறி முன்வைக்கின்றவர்கள் கூறமுனையும் அடிப்படை வேறுபாடகும். இவர்களால் அரசியல் வேறுபாட்டை முன்வைக்க முடிவதில்லை.

"ஆயுத எழுத்தை" இலக்கியமாக குறுக்கிக் காட்டும் இலக்கிய அரசியல்

கலை - இலக்கியத்தை அரசியலுக்கு வெளியில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறுவது கூட ஒரு அரசியல். படைப்பு இலக்கிய தன்மை இருக்கின்றதா என்பதைக் கொண்டு, அதை மதிப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். கற்பனைப் படைப்புகளின் அரசியலை மூடிமறைத்தது போன்று, யதார்த்த படைப்புகளில் இதை செய்ய முடியாது. எதார்த்தத்தில் படைப்பாளியும் உயிருள்ள அங்கமாக இருப்பதால், அது பற்றிய தங்கள் கருத்து மூலம் அம்பலப்பட்டுப்போவதை தவிர்க்க, இலக்கிய தன்மை கொண்டு இருக்கின்றதா என்பதை முன்னிறுத்தி விடுகின்ற விமர்சனப் போக்கைக் காணமுடியும்.

கடந்த 30 வருடத்தின் மனித அவலங்கள் வெறும் நிகழ்வுகள் அல்ல. அதன் பின்னால் பாரிய மனித அழிவும், அவலங்களும் நிலவியது. இக்காலத்தில் நாம் வாழ்ந்து இருக்கின்றோம். பங்கு பற்றி இருக்கின்றோம். இந்த மனித அவலத்தை தடுக்க, மக்களை சார்ந்த எதிர் நிலை கருத்துகள் இருந்தன. பல போராட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இது பற்றி அன்றும், இன்றும் அக்கறையற்ற, சமூக நோக்கற்ற இலக்கியம், இலக்கிய ஆய்வுகள் மூலம் நடந்ததை நியாயப்படுத்திவிடுகின்ற குறுகிய போக்கு தான், இலக்கியமாக குறுக்கிவிடுகின்ற விமர்னங்களாக வெளிவருகின்றன. மேட்டுக்குடி – மத்தியதர வர்க்க தனிமனித பிரச்சனைதான், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையாக சித்தரிக்கின்ற இலக்கியங்களை தான் இலக்கியம் என்ற அகாரதியை "ஆயுத எழுத்து" விமர்சனம் மூலம் கட்டமைக்க முனைகின்றனர்.

"ஆயுத எழுத்து" புலிக்கு எதிரானது என்ற விமர்சனம்

"ஆயுத எழுத்து" நூல் புலிக்கு எதிரானது என்பது பெரும் பொய், மாறாக புலிக்கு சார்பானது. புலி அரசியலை கேள்விக்கு உட்படுத்தாதது. புலிக்குள் இயங்கிய "அவன்" அதாவது நான் எது சரி என்று புலி கருதியதோ, அதை செய்ததை நியாயப்படுத்திவிடுகின்ற ஒரு நூல். புலிகளாக தங்களைத் தாங்கள் உணருகின்ற ஒருவனின் நடத்தை. இது தான் யாழ் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு.

புலிகள் இயக்கத்தில் உண்மையான அதன் செயற்பாட்டில் இருந்த ஒருவன், இன்று தன்னை புலியாக உணருகின்ற ஒருவனின் மனநிலை தான் "ஆயுத எழுத்து". சாத்திரி தன்னை புலிக்கு வெளியில் நிறுத்தி இதை எழுதவில்லை. புலியாகவே நின்று எழுதுகின்றார். புலிகளை சுற்றிய பிழைப்புவாதிகள், அவர்களின் புலிமனப்பாங்கில் இருந்து விலகியதற்கு எதிரான எதிர்வினை தான் இந்த நாவல். உண்மையாக போராடியவர்கள், பிழைப்புவாத புலிகளால் இன்று கைவிடப்பட்ட நிலையில், தாங்கள் போராடிய வடிவத்தை புலிகளின் மனநிலையில் நின்று சொல்லும் படைப்பு.

யுத்தத்தில் பங்கு பற்றியவர்கள் தொடங்கி புலிகளின் சர்வதேச மாபிய வலைப் பின்னல் வரை இயங்கியவர்கள், புலிகளின் பினாமிச் சொத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் புலிகளால் புறக்கணிபட்ட இன்றைய சூழலை அங்கீகரிப்பதில்லை. புலிகளின் பாசிச - கிரிமினல் புலி நடத்தையை தங்களின் வீரச்செயலாக காட்டி, தம்மை அங்கீகரிக்கக் கோருகின்றது இந்த நாவல்.