விற்கமுடியாத பாலை வீதியில் இறைத்து போராட்டம்
- Details
- Published on Wednesday, 02 May 2012 22:47
- Written by ndpfront
- Hits: 244

இலங்கையில் நுவரெலியா மாவட்டம், ஹட்டன் நகரில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பால் பண்ணை உரிமையாளர்களும் தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான லீட்டர் பாலை வீதியில் வீசிஇறைத்து இன்று புதன்கிழமை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
தம்மிடமிருந்து இதுவரை காலமும் பாலை கொள்வனவு செய்துவந்த தனியார் நிறுவனங்கள் கொள்வனவை நிறுத்திக் கொண்டுள்ளதாக பால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அரச நிறுவனம் தமது பாலுக்கு உரிய விலை தர மறுப்பதால் தனியார் நிறுவனங்களை நம்பியிருந்தததாகவும், தற்போது அந்த நிறுவனங்களே தம்மைக் கைவிட்டுவிட்டதாகவும் பால் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அமைச்சின் செயலர் பதில்
தனியார் நிறுவனங்களிடம் இதுவரை பால் விற்றுவந்த பண்ணையாளர்களிடமிருந்து பாலை கொள்வனவு செய்ய அரச நிறுவனமான மில்கோ மறுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவான பண்ணைகளை வைத்திருக்கின்ற உரிமையாளர்களிடமிருந்து பாலை கொள்வனவு செய்கின்ற தனியார் நிறுவனங்கள் பால்மா தயாரிப்பில் ஈடுபடுகின்றன.
உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு?

அங்கு அடிக்கடி விலை அதிகரிப்பினால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகின்ற விடயங்களில் எரிபொருள் விலை, கோதுமை மா வரிசையில் பால் மா விலையும் ஒன்று.
உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடையவேண்டும் என்ற தொனியில் பொருளாதார செயற்திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறும் அரசாங்கம், விமானநிலையங்கள் போன்ற அபிவிருத்தி செயற்திட்டங்களை விட உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள பால் பண்ணை உரிமையாளர்களின் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று இலங்கை கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.டி.கேந்தரகம தமிழோசையிடம் தெரிவித்தார்.


