Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மியான்மரில் தொடர்கிறது மோதல்: 20,000 பேர் தாய்லாந்தில் தஞ்சம்!

மியான்மரில் தொடர்கிறது மோதல்: 20, 000 பேர் தாய்லாந்தில் தஞ்சம்!

ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஊடாக ஐனநாயகம் புத்துயிர் பெறுமா?

மியான்மரில் ராணுவ வீரர்களுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதலுக்குப் பயந்து மியான்மரில் இருப்பிடத்தை காலி செய்து கொண்டு 20,000 பேர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியில் இந்த மோதல் நடக்கிறது. ராணுவ வீரர்களும் போராட்டக் குழுவினரும் சரிநிகராக சண்டையிட்டு வருகின்றனர். இதில் இரு தரப்பினரும் துப்பாக்கி உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.

 

எல்லைப் பகுதியில் ராக்கெட்டுகள் சீறி வருவதாலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து வருவதாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அச்சம் அவர்களை தொற்றிக்கொண்டுள்ளது.

இதனால் வேறுவழியின்றி சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதில் பெரும்பாலோர் பெண்கள் சிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் தாய்லாந்துக்குள் வருவதைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது என்று தாய்லாந்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் இருந்து அகதிகளாக வருபவர்களுக்கு தாய்லாந்து புகலிடம் அளித்து வருகிறது. எல்லைப் பகுதியை ஒட்டி அவர்களுக்கு தாற்காலிக முகாம்களை அமைத்துக் கொடுத்துள்ளது.

எல்லைப் பகுதியில் நிலவும் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தாய்லாந்து அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

புகலிடம் தேடிவரும் மியான்மர் மக்களுக்கு உதவும் பணியை மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து தாய்லாந்து மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மியான்மர் மக்கள் சோகம்:

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மியான்மரில் பொதுத் தேர்தல் நடந்ததால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தல் விவகாரத்தில் ராணுவம் நடந்து கொண்டவிதத்தால் மக்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

மியான்மரில் ஜனநாயகம் மலரும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ராணுவ ஆட்சி மறைமுகமாகத் தொடரப்போவது உறுதியாகிவிட்டது என்று நினைத்து அவர்கள் மனத்தை தேற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். 15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து விடுதலையானார் ஆங் சான் சூகி:

மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி(65) 15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து இன்று மாலை விடுதலையானார். அவரின் வீட்டின் முன் கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள் இந்த விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஆனால் இவ்விடுதலைக்கு ஊடாக மியான்மார் மக்கள் அந்நாட்டு அரசின் பாஸிஸப் பிடியிலிருந்து உடனடியாக விடுபடவே மாட்டார்கள்! அதற்கான போராட்ட அரசியல் சூழல்கள் உடனடியாக ஏற்பட்டு விடாது! தற்போது இராணுவத்துடன் போராடும் போராட்டக் குழுவினரின் போராட்டம், மக்களின் வெகுஐனப் போராக மாற்றம் பெறவேண்டும். அத்துடன் ஆங் சான் சூகியின் தேசிய ஐனநாயக லீக் கட்சியின் ஐனநாயகத்திற்கான  எதிர்காலப் போராட்டங்களையும், இராணுவ ஆட்சி விட்டு வைக்காது! இவைகளைத் தாண்டிய எதிர்காலப் போராட்டங்களை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

சுமகால அரசியலில் மியான்மாரின் இராணுவ ஆட்சியும் எம் நாட்டின் மகிந்த ~~மன்னனின்~ பேரினவாத குடும்ப சர்வாதிகார ஆட்சியும் ஒரே திசை நோக்கியே செல்கின்றன. மக்கள் அங்கு ஐனநாயகத்திற்கான சகலதையும் இழந்துள்ளனர். இங்கு இழந்து வருகின்றனர்.