Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

வடகிழக்கின் இணைப்பை பிரிப்பை தீர்மானிப்பவர்கள் மக்களே!!

பிள்ளையானும் ரம்புக்வெல்லவும் தமிழ்மக்களின் ஏகப்பிரதிநதிகள் அல்ல!!.

வடகிழக்கின் இணைப்பை பிரிப்பை தீர்மானிப்பவர்கள் மக்களே!!

இந்திய மேலாதிக்கமும் சிங்களப் பேரினவாதிகளும் அல்ல!!

இலங்கையின் அண்மைக்கால அரசியலை மகிந்தாவிற்கான பொற்கால அரசியலாக கொள்ளலாம். இப்பொற்காலம் பேரினவாத வெறியாக, தனிநபர் பாஸிச சர்வாதிகாரமாக தலை விரித்தாடுகினறது. புலிகளின் அழிவிற்குப் பின்னான மகிந்தக் குடும்பப் பேரினவாதம் மிகத் திமிர் கொண்டெழுந்துள்ளது. இதனூடே அது முழுத் தமிழ் மக்களையும் புலியாகவே பார்க்கின்றது. அண்மையில் இதை கோத்தபாயா, "உண்மையைக் கண்டறியும்  ஆணைக்குழு" முன் சாட்சியமளிக்கையில் முன்மொழிந்தார்.  இப்பாங்கிலேயே மேலும் பல பேரினவாதிகள் சாட்சியங்களிலும் பேட்டிகளிலும் சொல்கின்றனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் ஓர்  படி மேலே சென்று மகிந்தாவிற்கு கைகட்டி வாய் பொத்தி பேரினவாத அடிமை குடிமை சேவகம் செய்யும் பிள்ளையானும் செயற்படுகின்றார்.  இவர் தேசிய இனப்பிரச்சினையில்,  தேசிய இன வரைவிலக்கணத்தில் அண்மைக்கால "நுன்னறிவுப் பேராசிரியர்" ஆகியுள்ளார். இப் பேராய்வின் துணைகொண்டு வடகிழக்கை பிரிக்கக் கூடாதாம். இதற்கான காரண காரியங்கள் அவருக்கே தெரியவில்லை. ஆனால் கடும் எதிர்ப்பாம்!

 

வடக்கு-கிழக்கு இணைப்பு பிள்ளையான் கடும் எதிர்ப்பு.

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி அறிவித்துள்ளது.  வடக்கு கிழக்கை மீள இணைப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் ஆதரவு.

இந்த நாட்டின் எந்தவொரு பிரதேசமும் எந்தவொரு தனி இனத்தவர்களுக்கோ அல்லது மதத்தவர்களுக்கோ ஒதுக்கப்படவில்லை. அத்துடன் எந்தவொரு பிரதேசமும் இது சிங்களவரது முஸ்லிம்களது கிறிஸ்தவர்களது அல்லது தமிழர்களது பிரதேசங்கள் என பிரிக்கப்படவில்லை. அவ்வாறு பிரிவடையக் காரணமான பயங்கரவாதமும் தற்போது முற்றா அழிக்கப்பட்டு நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறானதொரு நிலைமைக்கு தற்போது நாட்டில் இடமில்லை. …………கெஹெலிய ரம்புக்வெல்ல.

பிள்ளையானின்  கடந்தகாலத் தலைவர்கள், யாரையாவது சுடச் சொன்னால் சுடுவார், சின்னப்பிள்ளைகளை கடத்தச் சொன்னாலும் கடத்திவிடுவார். ஆப்பேர்ப்பட்ட  பேரறிவாளனுக்கு இப்போ மகிந்தா சொல்கிறார், அதனால் இவர் இதை எதிர்க்கிறார்.  நடைபெற்ற ஏதோ ஓர் தேர்தலில் வடக்கிலும் தன்ரை கட்சியிலும் போட்டி போட்டவர்,  பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு "வடகிழக்கு தமிழ் மக்களின் ஐககியத்திறகாகவே" என்றார். இதை எந்த மதிஉரைஞர் சொல்லிக் கொடுத்தவரோ?இவரைப் போல்தான்  கெஹெலிய ரம்புக்வெல்ல,  கோத்தபாய போன்ற கேள்வி ஞானக்கார்களும் இவர்களின் பத்திரிகைப் பேட்டிகளைத் தொகுத்து கூட்டிக் கழித்தால், மிஞ்சுவது பேரினவாத வெறியும் மகிந்த பக்தியுமே!

தேசியம்,  தேசியஇனம்,  தேசிய இனப்பிரச்சினை,  சுயநிர்னயம் என்பன பற்றிய மார்க்சிச லெனினிச வாதிகளின் ஏனைய சமுக விஞ்ஞானிகளின்  தரவுகள் வரைவிலக்கணங்கள் ஆய்வுகள் இன்றும் காலாவதியாகி விடவில்லை. இது பற்றிய புரிந்தும் புரியாத, அறவே புரியாதவர்கள தான் இத்தகைய கூப்பாடு போடுகின்றனர்.  இக்கூப்பாட்டுக்காரர்களின் இவ்வுளறல்கள் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கானதல்ல மட்டுமன்றி, சகல இன மக்களின் ஐக்கியத்திற்கு ஆனதும்ல்ல!

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக சிங்களப் பேரினவாதம் தேசிய இனப்பிரச்சினையை கையாண்ட விதம் மக்கள் நலன் சார்ந்த அவர்கள் அபிலாசைகள் கொண்டதல்ல! இது போன்றதே இலங்கை இந்திய ஒப்பந்தமும். இன்று இனவாதிகளால் சகலதும் இனவாதமாகிப் போயுள்ளது.  இக் காலகட்டத்தில் நர்ம் சரியானவைகளை உறுதியாக மக்களுக்கு சொல்லவேண்டும்!