Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏப்பிரல் வீரர்களின் 43வது ஞாபகார்த்த லண்டன் கூட்ட செய்தி: படங்கள்

லண்டனில் 05/04/2014, 43வது ஏப்பிரல் வீரர்கள் தினம் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரித்தானிய கிளையினரால் அனுஸ்டிக்கப்பட்டது. இங்கு 71 ஏப்பிரல் கிளர்ச்சி பற்றிய தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகள் வாசிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் 71 கிளர்ச்சியின் போது தாம் சிறுவர்களாக இருந்ததாகவும், அப்போது கிளர்ச்சி குறித்து தாம் கேட்ட கதைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து ஸ்கைப் மூலம் உரையாற்றிய தோழர் குமார் குணரட்ணம் அவர்கள், 71 கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் வீரப்பிரதாபங்களை ஞாபகப்படுத்துவது மட்டுமே இந்த மாதிரியான நிகழ்வுகளின் மையமான விடயமாக இல்லாது, ஏன் இந்த வீரர்களின் போராட்டம் தோற்றுப்போனது. எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்து செல்வது பற்றி சிந்திப்பதும், பேசுவதும் தான் இந்த நிகழ்வுகளின் வெற்றியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

மேலும் 71 கிளர்ச்சியானது பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வுக்காக முதலாளித்துவ அரசுக்கெதிரான போராட்டமாக இருந்த போதும், மக்களை அணிதிரட்டாது அவர்களிடமிருந்து அந்நியப்பட்ட இளைஞர்களால் சேகுவேரா பாணியில் நடைபெற்ற கிளர்ச்சியாகும். இது அன்றைய ஆட்சியாளர்களினால் இலகுவாக  நசுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் 87 -89 களில்  போராட்டம் மறுபடியும் பழைய சேகுவாரா பாணியில், மக்களை அணிதிரட்டாமல் முன்னெடுக்கப்பட்டு  பாரிய தோல்வியினை அடைந்தது.

எனவே இந்த நாளில் நாம் இந்த கிளர்ச்சிகளின் தோல்விக்கான பிரதான காரணமான போராட்ட சித்தாந்தம் குறித்து சிந்திக்க வேண்டும். பரந்து பட்ட மக்களை போராட்டத்தில் இணைக்க கூடிய மாக்சிச லெனினிய முன்னணி வீரர்களாக உருவாக்குவது குறித்து பேச வேண்டும். மக்கள் மீது ஆளும் முதலாளித்துவ அரசுகள் சுமத்துகின்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை, பொருளாதரா சுமைகளிற்கு எதிராக மக்களை போராடக் கற்றுக் கொடுப்பது பற்றி நாம் பேச வேண்டும். மக்களுடன் இணைந்து மக்கள் போராட்டத்தினை முன்னெடுப்பது குறித்து பேச வேண்டும். மேலும் ஏப்பிரல் வீரர்களின் தியாகங்களிற்கு நாம் செய்யக் கூடிய மரியாதையானது, போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி முன்னெடுப்பதே என தெரிவித்தார்.