Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நவ தாராளவாதமும் அரசியலும் மனிதத்துவம் இழக்கும் சமூகமும் - பேராசிரியர் சிறி ஹெட்டிகே

கடந்த சில தசாப்தங்களில் ஏறக்குறைய முழு உலகமுமே நவ தாரளவாதத்தின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உட்பட நவ தாராள சிந்தனையாளர்கள், அரசானது பொருளாதார சமூக பரப்புகளில் உள்ள பங்கினை தானே முன்வந்து குறைத்து; பொருட்கள் சேவைகளின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு மட்டுமல்லாது மனிதனின் பிரதானமான ஏனைய பல செயற்பாடுகளிலும் சந்தைக்கு தீர்மானங்களை மேற்கொள்ள வழிவிட வேண்டும் என குறிப்பிடுகின்றனர்.

இது மனித விவகாரங்களையும், சுற்றுச் சூழலையும் சந்தையின் ஊசலாட்டங்களுக்கு கையளிக்கக்கூடாது என்ற சமூக ஜனநாயக நோக்கில் இருந்து மாறுபட்டதாகும். நவ தாராள யுகத்தில் சந்தையின் பாதகமான தாக்கங்களை தணிப்பதற்கான பலமிக்க கூட்டு செயற்பாடு இல்லாத நிலையில் உள்ளார்ந்த பண்புகளையுடைய பல மனித பொருளாயத லாபத்தை பெற்றுக் கொள்வதற்கான காரண காரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. விஞ்ஞான ஆய்வு, அறிவுசார் உற்பத்தி, கலைகள், விளையாட்டு, கல்வி, சுகாதாரம், தொடர்பாடல் சேவை, சமூக சேவை, அரசியல், உளவள ஆலோசனை மற்றும் இன்ன பிறவும் இதற்கு உட்பட்டுள்ளது. ஆக, பாடசாலைகளின் நிருவாகம் மற்றும் முகாமை பற்றி ஒழுங்குபடுத்தல்களை எவ்விதத்திலும் செய்ய முனையாத கம்பனி சட்டத்தின் கீழ் இலங்கையில் சர்வதேச பாடசாலைகள் தாபிக்கப்பட்டிருக்கின்றமை வியப்புக்குரியதல்ல. முன்னனி பௌத்த பிக்குகள் இனிவரும் காலங்களில் கிராமங்களிலும் நகரங்களிலும் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் போன்றோருக்கு ஆசி வழங்க நடந்து திரிய போவதில்லை. மாறாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆடம்பர வாகனங்களில் பயணிப்பர்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு தமது நன்மைக்கும் தங்கள் பரிவாரத்திற்குமாக பொது நிதியை மோசடி செய்வது ஒருபோதும் வெட்கக்கேடான செயலாக இராது. ஆசிரியர்கள் தம் மாணவர்களிடம் இருந்து கட்டணம் அறவிடுவதற்காக வெட்கப்பட போவதில்லை. ஒரே நாளில் பல நூறு நோயாளிகளை பார்க்க பல சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல ஓடும் வைத்தியருக்கு மன அமைதி இல்லை. அபிவிருத்தியடைந்த நாடுகளின் சமூக பிரக்ஞை கொண்ட பிரஜைகளின் சிறிய பங்களிப்பினை கொண்டு கொள்வனவு செய்த சொகுசு வாகங்களில் (SUVs)) தொண்டர் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் உலாக்களை மேற்கொள்வர்.

மன வள ஆலோசகர்கள் ஒரு விலையை நிர்ணயித்து உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகின்றனர். மத்திய கிழக்கில் உள்ள பணம் படைத்த மனைகளில், சிறுவர் பராமரிப்பு உட்பட வீட்டு பணியாளர்களாக பணியாற்ற தமது சொந்த குழந்தைகளை, தமது பணிகளைகூட நிறைவேற்ற முடியாத தாத்தா பாட்டியிடம் ஒப்படைக்கின்றனர். சட்டத்தை பாதுகாக்க பொறுப்பளிக்கப்பட்டவர்கள் நியாத்தை வழங்குவதற்கு பதிலாக அம்முறைமையில் இருந்து அனுகூலங்;களை பெறுகின்றனர். முன்னைய காலத்தில் புலமையாளர்களாக வகைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தன்னைத் தேடி மாணவர்கள் வரும் வரை காத்திருக்க முடிவதில்லை. அவர்களில் சிலர் தாம் பணியாற்றும் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பிற்கான பரீட்சைகளுக்கு தயார்ப்படுத்தும் பெரிய பகுதி நேர வகுப்புகளை (tuition) நடாத்த அடுத்த மாகாணங்களுக்கு தமது வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். அத்தோடு பல எழுத்தாளர்கள் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டவன்றி வியாபார நோக்கத்திற்காகவே புத்தகங்களை பிரசுரிப்பதையும் காண முடிகிறது.

மேற்குறிப்பிட்டவை இலங்கையிலும், ஏனைய நாடுகளிலும் கடந்த சில தசாப்தங்களில் இடம்பெற்றுள்ள மாற்றங்களில் சில உதாரணங்கள் மட்டுமே. ரிச்சர்ட் செனர்ட் (Richard Sennert) தனது அளுமையின் அழிப்பு (Corrosion of Character) என்ற நூலில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் புதிய எலி ஓட்டப் (முடிவற்ற, சுய தோற்கடிப்பை கொண்ட அர்த்தமற்ற நாட்டம்) பந்தயங்களில் முடக்க எவ்வாறு இளந்தலைமுறையினர்களின் குணவியல்புகளில் நவ தாரளவாதம் ஆளமாக ஊடுருவுகின்றது என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். மேலே காட்டப்பட்ட உதாரணங்களிலிருந்து உள்ளார்ந்த மனித பண்புகள் இழக்கப்பட்டுள்ளதை எடுத்தியம்புகின்றன. இதற்கான முதன்மை காரணங்கள் யாதெனில் ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறன் என்பது கட்டணம் (pயல) செலுத்துவதற்கான திறனிலேயே தங்கியுள்ளமையாகும். செல்வங்களை திரட்டியுள்ளவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நுகர்வில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சாதாரண மக்கள் தங்களின் அன்றாட தேவைகளான உணவு, போக்குவரத்து, அல்லது சுகாதாரத்தை அடைந்துகொள்ள முகங்கொடுக்கும் கஷ்டங்களை அறிந்துகொண்டதாக தெரியவில்லை.

வர்த்தக துறை சார்ந்த பணிப்பாளர் ஒருவர் ஆடைத் தொழிற்சாலையில் தொழிலாளி ஒருவரின் மாதச் சம்பளத்திற்கு சமமான பணத்தை கொழும்பில் ரெஸ்டூரண்டில் ஒரு இரவு போசனத்திற்கு செலவு செய்கிறார். ஒரு நிபுணத்துவ (specialist) மருத்துவர் ஒருமுறை ஆலோசனை வழங்க திறனற்ற தொழிலாளியின் இரு நாட்கள் சம்பளத்திற்கு சமமான பணத்தை அறவிடுகின்றார். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ச்சியாக போராடி வரும் மக்களைக் கொண்ட எமது நாட்டில் ஒரு அரசியல் தலைவர் ரூபா பத்து மில்லியனை விட அதிக செலவில் சொகுசு வாகனம் ஒன்றை வாங்குகிறார். பெருந்தோட்ட தொழிலாளர்களைப் போன்ற அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருபவர்கள் கஸ்ட நிலையில் வாழுகின்றனர். கட்டுபாடுகள் அற்ற தனியார் பஸ் சாரதிதிகள் இலாபத்தை அதிகரிக்க சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொள்வதோடு பயணிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாரிய அனர்த்தங்;களைக் கொடுக்கின்றனர். மதுபானத்தின் மூலம் பெறப்படும் வருவாயை விட அதிக சுகாதார செலவு மற்றும் ஏனையவைகளுக்கு ஏற்படுகின்ற போதும் குற்றங்கள், வன்முறை, பொது ஒழுங்கு சீர்கேடு, விபத்துகள், நோயுறு தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்கும் மதுபான பொருளாதார பரவுதலை குறைக்க எதனையும் அரசினால் செய்ய முடியாதுள்ளது. வழக்கிடுதல் என்ற கொடிய செயன்முறை மூலம் கிராம நிலத்தின் உரித்தை உறுதி செய்ய போராடுகின்ற வரிய கிராமத்தவர்களை வாழ்நாள் சேவை நாடுனாராக வைத்துக் கொள்வதில் சட்டத்தரணிகளுக்கு மனசாட்சிப்பற்றிய எவ்வித பிரச்சினையும் இருப்பதில்லை. ஏழை கிராமத்தவர்களிடத்தில் சுய தேவைப் பூர்த்தியை மேம்படுத்துவதற்கு கொடையாளர்களை தக்க வைத்துக்கொள்ள சுய தேவைப் பூர்த்தி பற்றி பிரசாரம் செய்யும் அரசாங்கம் சாரா நிறுவனங்கள் திட்ட முன்மொழிவுகளை வரைவதில் அவசரமாய் உள்ளனர். நீண்டகால கடனூடாக தங்கியிருத்தல் அபிவிருத்தியை (dependent development) நிலைநிறுத்துவதில் சுய நிலைத்தல் கொண்ட கொடை வழங்கும் பணியாளர்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சாதாரண மக்களின் மனதில் அநீதியையும் பாதுகாப்பற்ற தன்மையையும் ஆழமாக விதைக்கின்றன. அத்தோடு இறுதியில் சமூகமானது அதன் மனித பண்பினை இழந்துள்ளது என இயல்பாக உணரும் நிiயை ஏற்படுத்துகிறது. உயர் குழாத்தினரின் பிரதிநிதிகள் இனிமேலும் காப்பவர்களாகவும் கருணையாளர்களாகவும் கொள்ள முடியாது. சுருக்கமாக சொல்வதானால் அவர்களுக்கு இனிமேல் மக்கள் தொடர்பான தார்மீக பொறுப்பு இருக்கப்போவதில்லை. எனினும் சாதாரண மக்களுக்கு தெரிவுகள் இல்லை. பல்வேறு நலன்களுக்கும் சேவைகளுக்கும் அவர்கள் உயர் குழாத்தினரிடத்தில் தங்கியே இருந்து வருகின்றனர். இந்த செயன்முறையில் பொதுவாக அவர்கள் அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். இதன்போது சிலர் கொடூரமாகவும் மனித மாண்புக்கு அப்பாற்பட்டும் எதிர்விணை புரிந்து குற்றவாளிகளாகவும் பணத்திற்காக அல்லது பழிவாங்கலுக்கு கொலை செய்பவர்களாயும் ஆகின்றனர். ஏனையோர் அரசியல் அதிகார அல்லது புதிய ஆன்மீக இயக்கங்களுக்கு மாறுகின்றனர். சிலர் இன்னும் கீழ் நிலைக்குச் சென்று மனநோயாளிகளாக மாறுகின்றனர் அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நாட்டில் நடப்பவற்றை சுற்றும் முற்றும் நோக்கும் போது மேற்குறிப்பிட்டள்ள அனைத்தையும் அதாவது குற்றம், தற்கொலை, வன்முறை, வழிப்பறி, உள நோய், திருட்டு, பயங்கரவாதம், கொலை இன்னபிறவற்றையும் காணலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக நல அமைச்சு வெளியிட்ட வயோதிபர்களின் வாழ்நிலை பற்றிய அறிக்கையானது மிகவும் பாதகமான ஒரு நிலையைக் காட்டுகின்றது. அவ்வறிக்கையின்படி தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வளங்கள் இல்லாத நிலையிலேயே பெரும்பாலான வயோதிபர்கள் உள்ளனர். எனவே அவர்கள் முடியாத வயதிலும் வேலை செய்து வருகின்றனர். நவ தாராளவாதத்தின் கீழ் தொழிற்படையைத் தற்காலிகத் தன்மை கொண்டதாக அதிகரிப்பதனூடாக மேற்குறிப்பிட்ட சூழ்நிலையானது மேலும் மோசமடைதல் மட்டுமே இடம்பெறக்கூடியதாகும். அரிசியின் மிகை உற்பத்தி என்றவாற அறிக்கைகள் உள்ள போதும் பல சிறுவர்கள் மந்த போசாக்கிற்குள்ளானவர்களாவர்.

எனினும் இது பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஏனெனில் எமது தலைவர்கள் நாட்டின் சிசு மரண வீதத்தை குறைத்துள்ளதாக தற்பெருமை கொள்ள முடியும். பரந்தளவிலான மதுபாவனை நிலவும் நிலையில் பெருந்தோட்டப்பிரதேசங்களில் வறுமை அதிகரித்துள்ளது. பெண்கள் வெளிநாடு செல்வதாலும், வெளிநாடு செல்லும் மனைவியரின் கணவர்களிடம் மதுபாவனை காரணமாகவும் தகாத உறவு இந் நாட்டில் முக்கிய பிரச்சினையாகியுள்ளது.

பொருளாதார குற்றச் செயல் நாட்டிற்கு ஒரு நோய் தாக்கம் என்பதோடு பணத்திற்கான மோதல் ஒழுக்க நெறிகளின் சிதைவின் குறிகாட்டியாகும். கொடூரமான ஆயுதங்களைக் கொண்ட பல குற்றவாளிகள் எமது அரசியல்வாதிகளை சிலரை ஒத்தவகையில் சொகுசு வாகனங்களில் உலா வருவதுடன் சொகுசு வீடுகளில் வசித்து வருகின்றனர். பல குற்றவாளிகள் முதலில் ஒருவரைக் கொன்று பின்னர் அவரின் உடைமைகளை கொள்ளையிடுகின்றனர்.

மறுபுறம், சிறிய மாதாந்த வருமானம் உங்களை எதனையும் செய்துகொள்ள முடியாத நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. ஒரு பாரதூரமான நோய் ஒரு நடுத்தரக் குடும்பம் ஒன்றின் சேமிப்புக்கள் அனைத்தையும் துடைத்தெடுக்கக்கூடியது. வறியவர் ஒருவர் வேறு வழிகள் இல்லமையினால் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் மருந்துகளுக்கும் கட்டணம் செலுத்த வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கிறார். பணம் படைத்தவர்களும், அதிகாரம் கொண்டவர்களும் அவ்வாறனவர்களுக்க முகங்கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்களின் காவலாளிகள் அவர்களை துரத்தி விடுவார்கள். நெரிசல்மிக்க பொது போக்குவருத்தில் இருந்து மீள நடுத்தர்க்க கீழ் வகுப்பினர் (Lower Middle Class) குடும்பங்களுக்கு சொந்தமான போக்குவரத்து வசதி தேவைப்படுகிறது. பலர் மோட்டார் சைக்கிள்களை வாங்க கடன்களை பெறுகின்றனர். மழை, நச்சுப் புகை மற்றும் தூசு என்பனவற்றுக்கு வழிவிட்டு சிறுவர்கள் பாதிக்கும் வகையில் முழு குடும்பத்துடன் பயணம் செய்கின்றனர். அரச துறையில் கீழ் நிலையில் உள்ள பணியார்களில் பலருக்கு ஊழலே வாழ்வியலாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி என்பது நவீன நுகர்வியலின் வெளிப்பாட்டின் காரணியாக காணப்படுகிறது. தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் நுகர வேண்டும் என்ற நவீன நுகர்தலை அடிப்படையாக கொண்டு ‘நல்ல வாழ்க்கை’ என்பதை ஊடகங்கள் வரையறுக்கின்றன. நவீன நுகர்வுக்கு எந்தளவு பணமும் போதுமானதல்ல. முறையற்ற விதத்தில் சேர்ந்த பெரும் பணத்தை கொழும்பில் உள்ள உயர் ரக சுதாட்டத்தில் செலவு செய்யவிடினும் ஒரேதடவையில் உயர் ரக தேவைகளுக்கு செலவு செய்யலாம்.

சமூக ரீதியாக ஒழுங்குபடுத்தலுக்கு உட்படாத (unregulated) சந்தையானது வியாபார உயர் குழாத்தினரும் ஏனையோரும் செல்வங்களை குவித்துக் கொள்ள வழிவிடுகிறது. இலங்கையின் செல்வந்த வியாபாரிகள் ஆய்வும் அபிவிருத்தியும் உற்பத்தி மேம்பாடு, நீண்டகால முதலீடுகளையும் மேற்கொள்பவர்கள் அல்லர். எமது வியாபார தலைவர்களில் பலர் வேறுநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவதும் விற்பதுமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாவர். அவர்கள் துரிதமாக இலாபத்தைப் அடையக்கூடிய துறைகளிலேயெ முதலீடுகின்றனர். இதற்கு மிகவும் வெளிப்படையான உதாரணமாக வீட்டு கட்டுமானத்துறை காணப்படுகிறது. இதிலும் பெருவாரியான முதலீடுகள் விலையுயர்ந்த வீட்டு கட்டுமானத் திட்டங்களுக்கே இடப்படுகிறது. குறைந்த விலையுடனான வீட்டு நிர்மாணத் திட்டங்களைக் காண்பது மிகவும் அரிது. இதே நிலையே சுகாதாரம், கல்வித் துறை முதலீடுகளிலும் காணப்படுகிறது.

நிதிச் சேவைகள், சில்லறை மொத்த வியாபார வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், ரியல் எஸ்டேட், சுகாதார சேவைகள், இன்னபிறவற்றால் இலங்கையின் தனியார் துறை நிலை பெற்றுள்ளது. கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் குறைவு. எனவே, அனேகமாய் (பொருட்களை) புழக்கத்திற்கு விடும் செயன்முறையின் மூலமே உபரி பெறப்படுகிறதே தவிர உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பதனூடாக அல்ல.

இதன் காரணமாகவே பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தி சில தசாப்தங்கள் கடந்த பின்னரும் மொத்த தேசிய உற்பத்தியில் 16 வீதம் என்ற குறைவான அளவில் உற்பத்தித் துறை காணப்படுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் தொழிற் துறைகள் தாபிக்கப்பட்டிருப்பின் இன்றுள்ளது போல் செல்வங்கள்ஃவளங்கள் கொழும்பை மையப்படுத்தி இருந்திருக்காது. வளங்கள் கொழும்பை மையப்படுத்தி இருக்கும் போது விலையுயர்ந்த பொருட்கள், சேவைகளுக்கான கொழும்பை மையப்படுத்தி நிலைபெறும் போக்கு காணப்படுகிறது. இதனால் வருமானம், நுகர்வு என்பனவற்றுக்கு கொழும்பையே நாடுகின்றனர். அதன் விளைவு, உயர் சன அடர்த்தியைக்கு மேல்மாகாணம் உட்பட்டமையாகும். இன்று மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மேல் மாகாணத்தில் நிலை கொண்டுள்ளனர். இது சுற்றுசூழல் பாதிப்புக்கும், பெரு நகரங்களின் வாழ்க்கை தரத்தை பராமரிக்க முக்கியத்துவமிக்கதாக உள்ள திறந்த வெளிகளை இல்லாது போவதற்கும் வழிவகுக்கின்றது. சனத்தொகை அடர்த்திக் கொண்ட பிரதேசங்களில் உள்ள எவ்வகை காணிகளையும் சுற்றி வளைத்து பெற்றுக் கொள்வதனூடாக ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இச் செயன்முறையை துரிதப்படுத்துகின்றார்கள்.

தொகுத்து நோக்கும் போது நாட்டின் உயர் குழாத்தினர் பொது மக்களிடத்தில் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். முன்சொன்னவர்கள் எவ்வித தார்மீக பொறுப்பையும் பின் சொன்னவர்கள் மீது கொண்டில்லை. உயர் குழத்தினர் சுய சேவை மட்டும் கவனனிக்கும் அடுத்தவரில் அக்கறையற்ற, ஒழுக்கமற்றவர்கள் என்பதே பொது மக்களின் நோக்கு நிலையாகும். அதிகாரமும் வளமும் கொண்டவர்கள் சமூக தார்மீக பொறுப்புணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. மாறாக சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களாகவே உள்ளனர்.

தமது நெறிமுறையின் அடிப்படையில் கந்தலாய்ப் போயுள்ள சமூக பொரளாதார முறைமைக்கு அவர்கள் தலைமை தாங்குகின்றனர். அவ்வாறான முறைமையானது வன்முறை, சகிப்புத் தன்மை இன்மை, குற்றம், மனநல குறைவு, சுய அழிப்பு, பேராசை, சுகாதார கேடு மற்றும் இன்னபிறவற்றை பெருக்குவதாகவே இருக்க முடியும். வளங்களின் அபிவிருத்தி மற்றும் மீள் பங்கீட்டிற்கும் ஒழுங்குப்படுத்தல் முறைறைமையை அமைக்க வேண்டிய அரசானது, குறிப்பாக அரசியல் தலைவர்களின் சொந்த நலன்கள், சந்தையையும் தனியார் துறையினரையும் நிபந்தனையற்ற விதத்தில் அங்கீகரித்தல் மற்றும் பரவலடைந்த ஊழல்கள் என்பனவற்றினால் செயலற்றதாக்கியுள்ளது. செயற்திறன் மிக்க (proactive) அரசுகள் அபிவிருத்தி செயன்முறை மற்றும் வள மீள் பகிர்ந்தளித்தல் என்பனவற்றில் வலுவான பிடியைக் கொண்டிருந்த தென்கிழக்காசிய நாடுகளில் இந்நிலையை காண முடிவதில்லை.

தமிழில் – சுகுமாரன் விஜயகுமார்

நன்றி: Daily Mirror 17.12.2013