Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அரச படையால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை விடுவிக்க மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமை தினமான எதிர்வரும் 10ம் திகதி, அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட லலித், குகன் மற்றும் ஊடகவியளாலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வன்னி யுத்தத்தின் போது சரணடைந்து இன்று வரை என்ன நிகழ்ந்தது என அறிய முடியாதுள்ளவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பாரிய போராட்டம் ஒன்றிற்கு சகல இடதுசாரி கட்சிகளையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் பங்கேற்குமாறு, முன்னணி சோசலிச கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட கட்சிகள் சமூக செயற்பாட்டாளர்கள் இன்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பினை நிகழ்த்தியுள்ளனர். அரசாங்கப் படைகளினால் கடத்தப்பட்ட லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் உட்பட அனைவரையும் விடுதலை செய்யுமாறும், கடத்துதல், காணாமலாக்குதல், கொலை செய்தல் போன்றவற்றை உடனடியாக நிறுத்துமாறும் இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கூறுகின்றன.

இடதுசாரி அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து இன்று நடத்திய ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அரசாங்கத்தை வற்புறுத்தின.

இச்சந்திப்பின்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் கூறுகையில்,

''எதிர்வரும் 10ம் திகதி உலக மனித உரிமைகள் தினமாகும். 20011 வருடம் மனித உரிமைகள் தினத்தை நினைவு கூர்வதற்காக ஊடக சந்திப்பொன்றுக்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் செய்துக் கொண்டிருந்வேளையில் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரசாங்கத்தால் கடத்தப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த வாகனம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் காணப்பட்டது. அது குறித்து பொலிஸார் நம்ப முடியாத இந்தரஜாலக் கதைகளை கூறுகின்றனர். அதன் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அரசாங்க அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை இல்லை.

இது இலங்கையின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் பிரச்சினை. லலித் மற்றும் குகன் தோழர்கள் கடத்தப்பட்டமை, இலங்கையில் நடக்கும் கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், கொல்லப்படுதல் போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களில் இது ஒரு சம்பவம் மட்டுமே. அவர்களிடமிருந்த சிறப்பம்சம் தான் அவர்கள் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்தமை. வடபகுதி மக்கள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்களுக்கும, ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக செயற்பட்டார்கள்.

வடபகுதி மக்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள், இராணுவ ஆட்சி எப்படிப்பட்டது, கடத்தப்பட்ட, காணாமல்போன, மற்றும் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர், நண்பர்களுடைய அபவங்கள் எப்படிப்பட்டவை என அறிந்து, தென்பகுதி மக்களுக்கு அந்த செய்தியை சொல்வதற்கான ஊடகமாகவே அவர்கள் செயற்பட்டார்கள். அதேபோன்று தென்பகுதி மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நவ தாராளமய முதலாளித்துவத்தின் அனுபவங்களை வடபகுதி மக்களுக்கு தெரியப்படத்தவும் முயன்றார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒருங்திணைத்து பிரச்சிணைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்ற செய்தியையும் அவர்கள் வடபகுதிக்கு எடுத்துச் சென்றார்கள். இந்தக் கடத்தல்களை, காணாமலாக்குதல்களை, கொலைகளை தடுப்பதற்கான சமூக ஐக்கியமொன்று தேவைப்படுகிறது. அதனை முதலாளித்துவத்தினாலோ, நவதாராளமயவாதிகளினாலோ செய்ய முடியுமென்று நாங்கள் நினைக்கவில்லை. கடத்தப்பட்டவர்களினதும் காணாமலாக்கப்பட்டவர்களினதும் உயிர் சம்பந்தமான பிரச்சினைக்கு இந்த சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இந்த அனைவரையும் விடுதலை செய்யுமாறும், அதேபோன்று கடத்தல்கள், காணாமலாக்குதல்கள் போன்றவற்றை நிறுத்துமாறும் நாங்கள் அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம்" என்றார்.

altநவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருனாரத்ன அவர்கள், கருத்து தெரிவிக்கையில்,

''யுத்தத்தின்போது காயம் பட்ட எல்.டீ.டீ.ஈ. உறுப்பினர்கள் வேறு பகுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் தான் வெள்ளை வேனில் வந்து இப்படியான கடத்தல்களை செய்கிறார்கள் என்று அரசாங்கம் சொல்வது சட்டப்படியான பதில் அல்ல. கொலை சம்பவங்களின்போது அரசாங்கம் கூறியது, போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு மத்தியில் சிறு சிறு மோதல்களாலேயே கொலைகள் நடக்கிறது என்று. அதன் பின்னர் கைது செய்தவர்களை கொலை செய்தார்கள். விஷேடமாக அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமலாக்கப்படுவது பெரிய பிரச்சிணை. அது குறித்து அரசாங்கத்துக்கு பதில் கிடையாது. தனக்கும் பாதையில் நடமாட பயமாக இருக்கின்றதென வடமாகாண முதலமைச்சர்க விக்னேஸ்வரன் கூறுகிறார். அடுத்து லலித் குகனோடு விக்னேஸ்வரன் சேருவாரோ தெரியாது.

நான் யாழ்ப்பாணத்திற்கு சென்று வரும்போது எனது வாகனத்தின் மீ கல் விழுந்தது. இராணுவ வீரர்களுக்கு பின்னால் நின்றவர்தான் கல்லெறிந்தார். இது சம்பந்தமாக நான் எஸ்.எஸ்.பீ.யிடம் முறையிட்டேன். இதைச் செய்வது இராணுவ வீரர்கள்தான் என்று கூறிய அவர் தாங்களும் இராணுவ வீரர்களுக்கு பயந்தே இருப்பதாகக் கூறினார். இதுதான் உண்மையான நிலைமை. பாசிஸ ஆட்சியே இன்று நடந்துக் கொண்டிருக்கிறது. சட்டம் செயற்படுவதில்லை. பொது பல சேனா போன்ற அமைப்புகள் பொலிஸையும் மீறி செயற்படுகின்றன. அதன் பின்னணியில் கோட்டாபய ராஜபக்‌ஷ இருப்பது எல்லோருக்கும் தெரியும். அமெரிக்காவோ, பிரித்தானிய பிரதமர் கமரூனோ இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்று எல்லோருன் நினைக்கிறார்கள். அமெரிக்காவும், கமரூனும் தான் மத்தியக் கிழக்கில் தலையிட்டு பெரிய அநியாயங்களை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எமது பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்.

தமிழ் சமூகத்தில் சிலர் நினைக்கிறார்கள் மீண்டும் பிரபாகரன் வந்தால் நல்லதென்று. பிரபாகரன் மற்றவர்களை கொன்றபோதிலும் வடக்கு மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்று. கரில்லா யுத்தம் இதற்கு தீர்வாக இருக்காது. மக்களுக்கு தீர்வொன்று தேவை. அது தெற்கிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்" என்றார்.

விரிவுரையாளர் நிர்மால் ரஞ்சித் தேவசிரி அவர்கள்,

alt'' இலங்கையில் நடக்கும் கடத்தல், காணாமலாக்குதல் போன்றவற்றுக்கு சிறந்த உதாரணம்தான லலித் - குகன் கடத்தல். கடந்த காலங்களில் நடந்த இவ்வாறான சம்பவங்களில் சிவில் சமூகத்தினால் அவதானிக்கப்படாத சம்பவமாக லலித் -குகன் கடத்தலை கூறமுடியும். நான் நினைக்கிறேன் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் குழு மற்றும் அரசியல் நிலைப்பாடு போன்றன இதற்கு காரணமாக இருக்கலாம். அரசாங்கம் இரண்டு பூச்சாண்டிகளின் மீதே செயற்படுகிறது. ஒன்று பிரிவினைவாதம். மற்றது ஏகாதிபத்தியவாதம். ஹிட்லரின் காலத்திலும் இப்படியான மகிழ்விப்புகள் இருந்தன. மக்கள் பேரணிகள் நடந்தன. அதற்குள் மறைந்துக் கொண்டுகொலைக் குழுக்களும் செயற்பட்டன. இன்றும் அதே நிலைதான்.

லலித் - குகன் எல்.டீ.டீ.ஈ. யோடு சம்பந்தப்பட்ட அரசியலை செய்யவில்லை. வடக்கின் சமூகத்திற்கும், தெற்கின் சமூகத்திற்கும் மத்தியில் நல்லிணக்கத்தை கொண்டு வரும் அரசியலையே செய்தார்கள்".

பிரான்சிஸ் கூட்டுறவின் சுமித் சாமிந்த அவர்கள்,

alt'' வடக்கின் மற்றும் தெற்கின் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையே லலித் மற்றும் குகன் ஆகியோர் மேற்கொண்டனர். வடக்கு மற்றும் தெற்கின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்வதற்குப் பயந்த அரசாங்கம் பயந்தமையால் தான் லலித்தும் குகனும் கடத்தப்பட்டார்கள். 2010 க்குப் பின்னர் அரசாங்கம் நினைத்தது தெற்கின் பௌத்த வாக்குகளால் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியுமென்று. ஆகவேதான் பலவீனமான எதிர் கட்சியொன்றும் இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் இந்த ஆட்சியை ஒருவிதத்தில் காலனித்துவ ஆட்சியாகவே நான் கருதுகிறேன். அரசாங்கம் வடக்கை காலனித்துவப் பாணியிலேயே ஆட்சி செய்கிறது" .

திருமதி சந்யா எக்னெலிகொட,

alt''கடத்தல்கள், காணாமலாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் செயற்பட்டமையால்தான் 2011 டிசம்பர் 9ம் திகதி அவர்கள் கடத்தப்பட்டார்கள். காணாமல் போனவர்களை தேடுவதற்காக அரசாங்கம் ஆணைக்குழுவை நியமித்தது. 2009 மே 19ம் திகதிக்கு முன்னர் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காகவே அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல்போன எக்னெலிகொட குறித்தோ, 2011ல் காணாமல்போன லலித் - குகன் குறித்தோ அதில் முறையிட முடியாது.

லலித் மற்றும் குகன் உள்ளிட்ட ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆகவே தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்".

இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

alt''யுத்தத்தின் பின்னரும் காணாமல் போவதாயிருந்தால் அது பாதூரமான பிரச்சிணை. இன்று ஒட்டு மொத்த சமூகமும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக அரசாங்கன் 306 பில்லியன் ஒதுக்கியிருக்கிறது. அது கடந்த வருடத்தைவிட 16.7 பில்லியன் அதிகம். மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்த நிலைமையை தொடர்வதற்காகவே இவ்வாறு நிதி ஒதுக்கப்படுகிறது. வடக்கில் பாடசாலைகள் உடைக்கப்படுகின்றன. கோவில்கள் உடைக்கப்படுகின்றன. இந்த நிலைமைகள் மாற வேண்டும்".