Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

50 நாட்களை கடந்து தொடரும் தொலைத்தொடர்பு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கல் 1978 களில் ஆரம்பமானது. அரச நிறுவனங்களை தனியாருக்கு கையளிக்கும் செயல்பாடு 1978இல் ஜே.ஆர் ஜெயவர்த்தனா கொண்டு வந்த நவதாராளவாத பொருளாதாரவாத கொள்கையுடன் ஆரம்பமானதாகும். இலங்கை ரெலிகொம் அரச நிறுவனமும் இந்த திட்டத்திற்கு அமைய தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. மிக நீண்ட காலமாக இங்கு வேலைக்கு சேர்த்து கொள்ளப்படும் ஊழியர்கள் மான் பவர் (Man Power) என்னும் அடிமைக் கம்பனி ஊடாகவே வேலைக்கு சேர்த்து கொள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக பல தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் இன்றி அடிமைக் கம்பனி ஊடக வேலை செய்து வருவதுடன் தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டும், வேலைக்கு உத்தரவாதம் இன்றியும் அல்லல் பட்டு கொண்டு இருக்கின்றனர்.

இதற்கு முடிவு கட்டும் முகமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரெலிகொம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரியும், தொழிலாளர் உரிமைகளை வற்புறுத்தியும், மான் பவர் முறையினை ஒழிக்கக் கோரியும் கடந்த 50 நாட்களிற்கு மேலாக  இரவு பகலாக ரெலி கொம் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளிற்கு இதுவரை எந்த பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் பதில் அளிக்காததுடன், ஊழியர்களுடன் பேச்சு வார்த்தைக்கும் வரத் தயாரற்று இருக்கின்றனர்.

மாறாக இனம் தெரியாத ஆயுததாரிகள் கறுத்த வானில் போராட்ட தலைவர்களில் ஒருவரை வீடு செல்லும் வழியில் கடத்தி சென்று மூன்று நாட்களிற்கு மேலாக அடைத்து வைத்து, போராட்டத்தை கைவிடும்படி அச்சுறுத்தி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸில் குறித்த போராட்ட தலைவரை காணவில்லை என முறைப்பாடு செய்ய சென்ற குடும்ப உறுப்பினர்கள் அலைக்கழிக்கப்பட்டதுடன், அவர் போராட்டத்திற்கு விளம்பரம் தேட எங்கோ ஒழித்திருந்து கொண்டு கடத்தப்பட்டதாக நாடகம் நடத்துவதாக கூறி முறைப்பாட்டை தட்டிக்கழித்தனர்.

மகிந்த ஆட்சியில் வெள்ளை வான் கடத்தல். இன்று நல்லாட்சியில் கறுத்த வானில் கடத்தல் ஆரம்பமாகி உள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலான கால சம்பள இழப்பு  மற்றும் பலத்த நெருக்கடிகளின் மத்தியில், மான் பவர் அடிமை முறைக்கு முடிவு கட்ட தொழிலாளர்கள் உறுதி உடன் போராட்டத்தை தொடந்து கொண்டிருக்கின்றனர்.

மேன் பவர் அடிமைத்தனத்தை ஒழி!

அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்கு!

நிரந்தர சம்பளம் வழங்கு!

தொழிலாளர் உரிமைகளை அங்கீகரி!

Armed abductors threaten trade union leader to give up strike action