Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

துப்பாக்கி சூடு செய்தி: வானொலி தயாரிப்பாளர் பணி நீக்கம்

இலங்கையின் வெலிவேரிய பகுதியில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து இலங்கையின் தெரண எப்.எம் என்ற வானொலியின் நிகழ்ச்சி ஒன்றில் , அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

 அந்த வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கலும் அமரசிங்க ஆகஸ்ட் முதல் நாள் நடந்த இந்த சம்பவம் குறித்து பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை தனது நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியபோது தெரிவித்த சில கருத்துக்களை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட்தாக்க் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று அவரிடம் பிபிசி சந்தேஷ்ய சார்பில் கேட்டபோது பதிலளித்த அவர்

“வியாழக்கிழமையன்று, ரதுபஸ்வலவில் ராணுவத்தாக்குதல் நடந்ததாக செய்திகள் வந்தன. அனேகமாக எல்லா பத்திரிகைகளும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. லங்கதீபாவில் மேலதிகச் செய்திகள் வந்திருந்தன. பத்திரிகையாளர்களை இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடக்கூடாது என்று ராணுவ அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வந்தன.நிறைய தகவல்கள் வந்திருந்தன. லங்கதீபவின் பெண் செய்தியாளரே ராணுவக் காவலில் மாலை 8 மணி வரை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. அவருக்கு மருந்து கூட எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இந்த செய்தியைப் படித்த பின்னர், இந்த விஷயத்தில் பத்திரிகையாளர்கள் ஏதாவது செய்யவேண்டிய நேரம் வந்துவிட்ட்தா என்று நான் ஒரு கேள்வியை எழுப்பினேன். இதில் மற்றொரு செய்தி வாசிக்கப்பட்ட்து. அந்த செய்தியில் பாதுகாப்பு அமைச்சகம் ரதுபஸ்வலவுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டிருந்த்து. இந்த செய்திக்குப் பின்னர், நாட்டில் இருக்கும் ஒரே ஒரு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம்தானா என்று நான் கேட்டேன்” என்றார்

இந்த சம்பவம் குறித்து தெரன நிர்வாகத்தின் கருத்தைப் பெற சந்தேஷ்ய செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதனிடையே , வெலிவேரிய துப்பாக்கிச்சூட்டை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆசிய மனித உரிமைக் கமிஷன் மற்றும் மற்றுக் கொள்கைகளுக்கான மையம் போன்ற அமைப்புகள் கண்டித்துள்ளன.

இந்த சம்பவத்தில் ராணுவமே தன்னைத்தானே விசாரித்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் இது குறித்த ஒரு சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அம்னெஸ்டி கோரியிருக்கிறது.