Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனியொருவின் பொய்களும், பொறுக்கித்தனங்களும்: ஆறுமுகநாவலன்

"வெறுமனே மகிந்தவின் துணைப்படை போன்றதாக அல்லாமல் மகிந்தவுடன் ஆலோசனை நடத்தி கொலை செய்யும் அளவிற்கு பிள்ளையான் செயற்பட்டிருக்கிறார். பலம்மிக்க மாபியா பாணியிலான அமைப்புப் போன்று இயங்கி வந்த பிள்ளையான் குழுவிற்கு தென்னிந்திய பின்னவீனத்துவ அடையாள அரசியலின் ஆதரவும் இருந்து வந்திருக்கிறது. தவிர, பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும் அதன் பின்னர் அவரது புலம்பெயர் ஆதரவுக் குழுகளுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது".

குமார் குணரத்தினம் என்ற முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர், பிள்ளையான் என்ற கொலைகாரனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின என்று "இனியொரு" இணையத்தளம் எந்த விதமான ஊடக நாணயமும் இன்றி ஒரு பச்சைப் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறது. நாங்கள் பகிரங்கமாக சவால் விடுகிறோம்; இப்படி ஒரு தகவல் எப்போது வெளியாகியது என்பதை இனியொரு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் கொம்யுனிசம், முற்போக்கு என்று பேசி அந்த தத்துவங்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இனியொருவில் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள். இந்த இரண்டு ஆசாமிகளும் முன்னொரு காலத்தில், முப்பது வருடங்களிற்கு முன்னால் இயக்கங்களில் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ இருந்ததை வைத்துக் கொண்டு தாங்கள் பெரிய புண்ணாக்குகள் என்பது போல எழுதி வருகிறார்கள். இயக்கங்களில் இருந்த காலங்களில் அதற்குள் நடந்த கொலைகள், சித்திரவதைகள் என்பவற்றை எல்லாம் சேர்ந்து செய்து விட்டு இப்போது நல்லவர்கள் போலவும், தங்களிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் கதை விடுகிறார்கள்.

முன்னிலை சோசலிசக் கட்சியுடன் தொடர்பு வைப்பதற்காக ஒரு காலத்தில் ஓடித் திரிந்தார்கள். அவர்களிற்கு இவர்களின் நேர்மையற்ற தன்மையும், பொறுக்கித்தனமும் கொஞ்சக் காலத்திலேயே தெரிய வந்ததினால் இவர்களின் தொடர்புகளை துண்டித்து விட்டார்கள். அந்த ஆத்திரமும், அரசியலில் அனாதைகளாக இருப்பதனால் ஏற்படும் மனோவியாதிகளும் சேர்ந்ததினால் பச்சைப்பொய்களை சொல்லி ஒரு பொறுக்கி இணையத்தளம் நடத்துகிறார்கள்.

குமார் குணரத்தினம், இலங்கை தேர்தல் நேரத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை சென்ற போது மகிந்தவிற்கு ஆதரவாக செல்கிறார் என்று பொய்கள் சொல்லப்பட்டன. "லங்கா ஈ நியூஸ்" என்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு இணையத்தளம் இப்படியான பொய்களை அவிழ்த்து விட "இனியொரு" மாதிரியான பொறுக்கிகள் அதை கொப்பி பண்ணி பொய் சொன்னார்கள். ஆனால் "லங்கா ஈ நியூஸ்" மற்றும் இலங்கையின் வலதுசாரி ஊடகங்கள் எதுவுமே குமார் குணரத்தினமும், பிள்ளையானும் சந்தித்ததாக செய்திகள் வெளிவிடவில்லை. ஆனால் அப்படி ஒரு செய்தி வெளியாகியதாக இந்த பொறுக்கி இணையத்தளம் பொய் சொல்லுகிறது.

முன்னிலை சோசலிசக் கட்சி, சமவுரிமை இயக்கம் என்பன தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. அண்மையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ், சிங்கள மக்களை இணைத்து போராட்டம் நடத்தியது. இலங்கை அரசினால் எந்த விதமான வழக்குகளும் இன்றி தடுத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அதில் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யச் சொல்லியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கச் சொல்லியும் சுவரொட்டிப் பிரச்சாரத்தை சமவுரிமை இயக்கம் நடத்தியது.

இப்போராட்டங்கள் தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்துவர்களிற்கு பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. அதனால் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் மீது சேறு பூசினார்கள். அந்த சேறு பூசலின் தொடர்ச்சியாகவே புலம்பெயர் பிழைப்பு இணையத்தளம் இனியொரு குமார் குனரத்தினமும், கொலைகாரன் பிள்ளையானும் சந்தித்ததாக பொய் சொல்லுகிறது. எந்தவொரு நடைமுறை வேலையும் இல்லாமல் தாங்களும் அரசியல் செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் இனியொருவில் இருக்கும் இரண்டு பேருக்கும் முற்போக்கு சக்திகளின் மேல் சேறு அடிப்பது தான் மிஞ்சி இருக்கும் ஒரே வேலை.

மீண்டும் சொல்கிறோம் ஒரு இணையத்தளம் என்ற போர்வைவையில் பொய்களையும், புனைவுகளயும் சொல்லுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களால் பொய்களை மட்டும் தான் சொல்ல முடியும்; ஆனால் எங்களால் உங்களது கடந்த காலங்களை பகிரங்கமாக ஆதாரங்களுடன் சொல்ல முடியும். கொலைகளும், மோசடிகளும் மறைக்கக் கூடியவை அல்ல.