Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

முதல் 100 செல்வந்தர்களின் ஆண்டு வருமானம் உலக வறுமையை ஒழிக்கப் போதும்

உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் மோசமான வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்றேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது.

 

ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந்த சந்திப்பு ஒன்றில் ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.

உலகின் ஏற்றத்தாழ்வை ஒழிக்க உலகத் தலைவர்கள் ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

அளவுக்கு அதிகமான செல்வம் என்பது, ''பொருளாதார ரீதியான செயற்திறன் இன்மையையும் சமூக ரீதியான பிளவையும் காட்டுகிறது'' என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

அனைத்து மனித சமூகத்தின் நலனுக்காக உலக பொருளாதார முறைமையில் மாற்றம் வரவேண்டும் என்று அது கூறியுள்ளது.

உலக சனத்தொகையில் ஒரு வீதமான செல்வந்தர்கள் கடந்த 20 வருடங்களில் தமது வருமானத்தை 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.

உலக வரி முறைமைகளில் மாற்றம் செய்யப்படுவதுடன், இலவசமான பொதுச் சேவைகளிலும் சுகவீனமுற்றவர்கள் மற்றும் வேலையற்றவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் ஒக்ஸ்பாம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உலக நாடுகளின் தலைவர்கள் தமது மட்டத்தில் முதலில் ஏற்றத்தாழ்வை சரி செய்ய வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு, பலவீனமான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஒக்ஸ்பாம் வலியுறுத்தியுள்ளது.

உலக பொருளாதார முறைமையில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது என்று ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் தலைமை இயக்குனரான பார்பரா ஸ்டோக்கிங் கூறியுள்ளார்.