Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சட்டத்தின் ஆணைக்கு அப்பாற்பட்டவர் ஜனாதிபதி!

பதினெட்டாவது திருத்தத்தால் பிரதம நீதியரசரை அப்பதவியிலிருந்து ஜனாதிபதியால் வெளியேற்ற முடியும். அதனை சட்டம் தடுக்க முடியாது. சட்டத்தின் ஆணைக்கு அப்பாற்பட்டவர் ஜனாதிபதி என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக அரசாங்கம் குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரதம நீதியரசரை வெளியேற்றும் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், பிரதம நீதியரசர் நீதிமன்றம் தனக்கு சார்பாக வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியின் கடிதத்தையும் ஏற்காது பலாத்காரமாக பதவியை பிடித்துக் கொண்டுள்ளார். இது சட்டவிரோதமாகும்.

பிரதம நீதியரசர் இவ்வாறு அடம் பிடித்தால் 18ஆவது திருத்தத்தால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பிரதம நீதியரசரை வெளியேற்ற முடியும் என்றார்.

இன்றைய புதிய பொருளாதார ஒழுங்கில் இப்படியான சகல வல்ல அதிகாரங்களைக் கொண்ட ஒரு சர்வாதிகாரியைத்தான் முதலாளித்துவ நாடுகள் எதிர்பார்க்கின்றன. இப்படியான மக்கள் விரோதிகளை பதவியில் வைத்திருப்பதன் மூலம் உள்நாட்டில் தமது மூலதன கொள்ளையினை இலகுவாக நடாத்திட முடியும். இந்த உயர்நீதியரசர் விவகாரத்தில் வெறும் கண்டனங்கள், கண்துடைப்புக்களுடன் தமது போலி ஜனநாயக வேடத்தினை அமெரிக்கா, ஜரோப்பா, ஜ.நா போன்றவை மிக நல்லாவவே நடித்துக் காட்டுகின்றனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சியினை கட்டவிழ்த்து விட்டுள்ள மகிந்த குடும்ப அரசு, இதனை விட பாரிய ஜனநாயக மறுப்பக்களையும் கேலிக் கூத்துக்களையும் எதிர்காலத்தில் நிச்சயமாக நடாத்தத்தான் போகின்றது.

இந்த மக்கள் விரோத பாசிச அரசிற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராட வேண்டிய தலையாய பணி ஜனநாயக்தை நேசிக்கின்ற அனைவரினதும் முதற்பணியாக இன்று உள்ளது.