Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கல்வி, மருத்துவத்துறையினர் அடுத்த வாரம் தொடர் ஆர்ப்பாட்டம்! அரசு அதிர்ச்சியில்

altதமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடித் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அடுத்தவாரமளவில் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் களமிறங்குவதற்கு மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் அவசர முடிவொன்றை எடுத்துள்ளன. இதனால் கல்வி, மருத்துவத்துறைப் பணிகள் அடுத்த வாரத்தில் முற்றாக ஸ்தம்பிதமடையும் அபாயநிலை காணப்படுகின்றது.

 

பல்கலை விரிவுரையாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவம், கல்வி சார்ந்த தொழிற்சங்கங்களும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முஸ்தீபு செய்துள்ள மையானது அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, உத்தேச வரவு செலவுத் திட்டத்தை அரசு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருவதால் அந்நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது எனத் தெரியவருகிறது.

எது எப்படியிருந்தபோதிலும், ஒருவார காலத்துக்குள் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வின்றேல் போராட்டங்கள் வெடிப்பதைத் தவிர்க்கமுடியாதென குறித்த தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

அரசின் சம்பளக் கொள்கையின் பிரகாரம் அரச வைத்தியர்களின் சம்பளம் உயர்த்தப்படவேண்டும், பிரயாணக் கொடுப்பனவுகளை வழங்கவேண்டும் மற்றும்  உறுதியளித்ததன் பிரகாரம் தொலைபேசிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்துவித கொடுப்பனவுகளையும் அரசு வழங்கவேண்டுமென வலியுறுத்தியே அரச வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

அதேவேளை, முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 24 ஆம் திகதியளவில் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ளன. எனவே, அடுத்தவாரமளவில் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளதால் நாட்டில் முக்கிய பல சேவைகள் ஸ்தம்பிதமடையும் அபாயநிலை ஏற்படலாம்.என்று தெரிவிக்கப்படுகின்றது.