Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்ரேலியப் பாணியில் மகிந்த குடியேற்றம்!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 10-08-2010

“இங்கு சிறுபான்மை என்ற ஒன்றில்லையே
எல்லாம் பெரும்பான்மையெனக் கொள்க”    –மகிந்தக் குறள்

இஸ்ரேலியப் பாணியில் மகிந்த குடியேற்றம்!

A sinhalese Businessman does not belongs to that area building a two story Hotel at murukandy

ஏ.9 வீதிக்கு கிழக்காக உள்ள முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம்,  செல்வபுரம்  பிரதேசங்களை உள்ளடக்கிய  4611ஏக்கர் நிலப்பகுதி படையினரின் பயன்பாட்டிற்காக  அரசால் சுவீகரிக்கப்படவுள்ளது.   மிகவும் வளப்படுத்தப்பட்ட குடியிருப்புகள், வயல்க் காணிகள் தென்னை பனை உள்ளிட்ட நிரந்தர வருமானங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பயிர்ப்பிரதேசங்களைக் கொண்ட மக்கள் பாரம்பரியமா 3 தசாப்தத்திற்கு மேல் குடியிருந்த பெரு நிலம் படையினரால் அபகரிக்கப்படவுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரை இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் சந்தித்த போது உங்களது இந்தக் காணிகள் படையினரின் பயன்பாட்டிற்காக  அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் இவற்றிற்கு பதிலாக வேறு காணிகள் வழங்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இதனால் ஏ 9 வீதிக்கு கிழக்காக திருமுறுகண்டியில் இருந்து  கொக்காவில் மற்றும் இரணை மடு குளம் வரை  2கிலோ மீற்றர் நீள 2000 ஏக்கர்  நிலம் இந்துபரம், செல்வநகர், வசந்தபுரம், கிளிநொச்சியின் சாந்தபுரம்‐   பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன் 1400-குடும்பங்கள் நிர்க்கதிக்கும் உள்ளாகப்போகின்றார்கள். அத்துடன் 2011-ற்குள் முருகண்டி நகர் 75,000 சிங்களவர்கள் வழும் ஓர் நகரமாக மாறப்போகின்றது.

கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரச படைகளின் குடியிருப்பு வசதிக்காக அபகரிக்கப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துரத்தப்படுகின்றனர். மரணத்தின் விழிம்பிலிருந்து மீண்ட மக்கள் கூட்டம் தெருவிற்கு இழுத்துவரப்பட்டு மீண்டும் சூறையாடப்படுகிறது. .

12,000 இராணுவ குடும்பங்களும் அங்கு நிரந்தரமாக இருந்து பணியாற்றுவார்கள் அத்துடன் அவர்களுக்கான சிங்கள பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள்,பெளத்த கோயில் மற்றூம் பல பொது சேவைகள் உட்பட வர்த்தக நிலையமும் அமைக்கப்படவுள்ளது.

முற்றுமுழுதாக அங்கு மூன்று கிராமங்களில் உள்ள தமிழர்களை விரட்டியடித்து விட்டு, இந்த சிங்கள குடியேற்றம் மஹிந்தவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை அபகரித்து அங்கே யூத குடியிருப்புக்களை அமைப்பது போல மஹிந்த அதே பாணியில்  குடியேற்றங்களை  நிறுவவுள்ளார்!

“கருண-டக்கிஸ-பிள்ளையான-சங்கரியப்–பேரினவாத ஜனநாயக நீரோட்டம்” கொண்ட பத்துப்-பதினைந்து கட்சிகளின் முப்பது-நாற்பது பேர் கொண்டோர் அடிக்கடி கூடுகின்றனர். கதைக்கின்றனர். உந்த குடியேற்றம் பற்றி ஒன்றும் சொல்லக்காணோம்! தங்களின் மௌனம் சம்மததிற்கு அடையாளமோ? டக்கிஸ சொன்னார், தான் ஏதாவது ஒன்றை மகிந்தாவிற்கு ஒருதரம் சொன்னால், அவருக்கு அது நூறுமுறை கேட்டதுபோலிருக்குமாம்! அப்படியெனில் இதையும் (‘ஒருமுறை’) செய்யென்று ‘ஓக்கே’ சொல்விட்டாரோ? ஆதனால் தான் அவர் நூறு இடங்களில் குடியேற்றங்கள் செய்ய யோசிக்கினறார். உங்களை விட முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பரவாயில்லைப் போலிருக்கு.

போர் முடிவடைந்த பின்னரும் வடக்கு -கிழக்கில் திடீர் திடீரெனப் படைமுகாம்கள் அமைப்பது ஏன்? மக்களுக்குக் காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் என்கிறார் ஹக்கீம்

போர் முடிவடைந்த பின்பும் வடக்கு  கிழக்கில் படை முகாம்கள் திடீர் திடீரென அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் அச் சமடைந்துள்ளனர்.  இவ்வாறு முகாம்கள் அமைக்கப்படுவது ஏன்? அதற்கான கார ணத்தை அரசு மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளு மன்றில் பேசுகையில் கோரிக்கை விடுத்தார்.

போர் முடிந்த பின்பும் கூட அரசு இரா ணுவ முகாம்களை அமைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.

ஒலுவிலில் திடீரென கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நல்ல தண்ணியில் இரா ணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள் ளது. இதற்கான கார ணம் என்ன? இந்த முகாம்கள் அமைப்பதற்கான காரணத்தை அரசு உள் ளூர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு செய்வதில்லை.

கிழக்கில் காணி பறிபோகும்  நிலை ஏற்பட்டுள்ளது. பொத்துவிலில் உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை விட்டுச் செல்லும்படி அரசு, காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளைப் பறித்தெடுப்பது தொடர்பாக அரசு என்ன சொல்லப்போகிறது? காணியைப் பெறுவதென்றால் ஒரு மாதத்துக்கு முன் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கவேண்டும். ஆனால் அரசு அவ்வாறு அறிவிக்கவில்லை.

நாச்சிக்குடாவில் இருந்து இடம் பெயர்ந்து புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் நாச்சிக்குடாவிற்குச் சென்றபோது அவர்களின் காணிகளில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றனர். அந்தக் காணிகளை உரியவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க பொலிஸாரோ அல்லது பிரதேச செயலாளரோ ஆர்வம் காட்டத் தவறுகின்றனர்.  காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு இந்தப் பிரச்சினையை உடன் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் மேலதிக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் காரணத்தையும் அரசு மக்களுக்குக் கூறவேண்டும். இப்படி அவர் மேலும் தெரிவித்தார்.

என் செய்வது, தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்னும்!

இராணுவத்தின் பிடியில் தனது மகனுடன் இருந்த பாலகுமாரனுக்கு நடந்தது என்ன அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என காடியன் ……

ஈரோஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் சபையின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு வந்த ரி.பாலகுமாரனுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், புலிகள் அமைப்பின் ஏனைய தலைவர்களுக்கு ஏற்பட்ட கதியே பாலகுமாரனுக்கு ஏற்பட்டது என்ற மாயை காணப்பட்டது.

எனினும் அண்மையில் அமைச்சர் டியூ.குணசேகர வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்ததுடன்  யோகி மற்றும் பாலகுமாரனின் மனைவிமாரை சந்தித்துள்ளார். இவர்கள் யோகி மற்றும் பாலகுமாரனுக்கு என்ன நடந்தது என்பதை கூற தயங்கியுள்ளனர். அதேவேளை தமது கட்டுப்பாட்டின் கீழ் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்திருந்த போதிலும் யோகி மற்றும் பாலகுமாரன் ஆகியோர் அதில் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அது இன்னும் இரகசியமான விடயமல்ல, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பாலகுமாரன் வெள்ளை கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். அப்போது அவரது இடதுகாலில் காயம் காணப்பட்டதாக தெரியவருகிறது. அத்துடன் அவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் லங்கா காடியன் இணையத்தளத்திற்கு கிடைத்துள்ளது.

இந்தப் புகைப்படம் ஊகங்களை நீக்கிவிட்டு உண்மையை வெளிகொணரும் சாட்சியாக அமைந்துள்ளது. இந்த புகைப்படத்தில் பாலகுமாரன் தனது மகனுடன் இராணுவ முகாம் ஒன்றிற்கு அருகில் இருக்கிறார்.

தூரத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் செல்லும் காட்சி இந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதா என்பதை நாம் அறியவில்லை எனினும் பாலகுமாரன் உயிருடன் இராணுவத்தின் பிடியில் இருந்துள்ளார். அதாவது பிரபாகரனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரு தினங்களுக்கு முன்னர்  பாலகுமாரன் உயிரோடு இருந்துள்ளார். இதனால் பாலகுமாரனுக்கு என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய முக்கியமாகும் என ஸ்ரீலங்கா காடியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

2009-மே 17-18-19-ல் 300-மீற்றருக்கள் நடந்த பல பரிதாபங்களின் உண்மை நிலை இன்னும் புரியாத புதிராகவேயுள்ளது. இதில் பாலகுமாரனின் அரசியல் வாழ்வும், நீண்டகால தீர்க்க தரிசனமற்ற முடிவும், இருந்த இடத்தை விட்டு விட்டு, சேராத இடம் தனில் சேர்ந்து வஞசத்தில் வீழ்ந்ததன்றோ!

பிஸ்கட் சாப்பிட்டு சேலைன் போத்தலுடன் நடத்தப்பட்ட முதல் உண்ணாவிரதம்: பொன்சேகா கிண்டல் !

ஐ.நா. விவகாரத்தை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும். ஆனால், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு சேலைன் போத்தலுடன் அரசாங்க அனுசரணையில் இங்கு மட்டுமே உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. சேறும் பூசிக் கொள்ளப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உண்ணாவிரதம் முதலைக்கு நெத்தலி சவால் விடுத்த கதையாகும். இதன்மூலம் முகத்தில் சேறுபூசிக் கொள்ளப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பல்கலைக்கழக மாணவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சகலருக்கும் தெரியும். ஆனால் பொலிஸாருக்கு மட்டுமே இது தெரியாமற் போனது எவ்வாறு?

சட்டத்தரணி வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மலைநாட்டு பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சட்டம் எங்கே இருக்கின்றது.

அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தியதால் 10 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. வாகன போக்குவரத்துக்கு 6 மில்லியனும், போக்குவரத்துக்கு 2 மில்லியனும், சாப்பாட்டுக்கு 2 மில்லியனும் செலவிடப்பட்டது. இதில் பிரயோசனம் இருக்கின்றதா?

அத்துடன் 20 இலட்சம் ரூபா செலவில் பெந்தோட்டையில் அமைச்சர்கள் ஆட்டம் போடுகின்றனர். இவையெல்லாம் யாருடைய பணம், நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதியில்லாத நிலையில் இவையெல்லாம் தேவையா?

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போனமை தொடர்பில் உண்மையை தெளிவுபடுத்த அமைச்சர்கள் தயார் எனினும் அமைச்சு பதவிகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றனர்.

களத்தில் போராடி யுத்தத்தை வெற்றி கொண்ட தளபதி நான் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்து கொண்டு அதனைச் செய்யவில்லை. இவற்றிற்கு நானே பொறுப்பு என்றார்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரி, வெற்றி கண்ட யுத்தம், நானே பொறுப்பென்பதை “தங்கமலை ரகசியம்” சினிமாப்பாணியில் சொல்கின்றீர்கள். இதில் ‘உண்மைகளையும், திறில்களையும்’ பிரித்து சொல்லமுடியாதோ? சொல்வது சிக்கல்தான், இருந்தும் தங்கள் பீடிகை-சிலேடைகளில் நாடே குளம்புகின்றது.

அமைச்சர்களைக்கண்டால்பொதுமக்கள்ஓடிஒளிப்பர்இந்தநிலைவரும்என்கிறார் அரியநேத்திரன்

அரசாங்க அமைச்சர்களைக் கண்டு பொதுமக்கள் பயந்து ஓடி ஒளிக்கும் நிலை மை எதிர்காலத்தில் நிச்சயம் உருவாகிவிடும் என்பதையே பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா போன்றோரின் நடவடிக் கைகள் கட்டியம் கூறுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட எம்.பி. பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரைப் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிப் போட்டமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கை யிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை அரசின் நடவடிக்கைகள் எவ் வாறு இருக்கின்றன என்பதையே பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயற்பாடுகள் தெளிவாகப் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

இலங்கையில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? நிலவுகின்றது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவர் பிழை செய் தால் அவரை அமைச்சரோ பிரதி அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினரோ நேரடியாகத் தண்டிக்க முடியாது. குற்றம் செய்தவரைத் தண்டிக்க சட்டம் உண்டு. இவ்வாறு இருக்கப் பிரதி அமைச்சர் ஒருவர் அரசாங்க அதிகாரியை மரத்தில் கட்டிப் போடுகின்றமை என்பது நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

இப்படியான செயல்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் பொது மக்கள் அமைச்சர்களைக் கண்டு ஓடும் நிலைமை உரு வாகும். எனவே இந்தப் பிரதி அமைச்சருக்கு எதிராக அரசாங்கம் கட்டாயம் ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உங்கள் மந்தி(ரி)கள் சபையில் எனக்கொரு இடம் கொடுங்களேன்.! என்னைக் கண்டால் பொதுமக்கள் ஓடி ஒளிக்கமாட்டார்கள். மகிந்தாவைக் கூட மரத்தில் கட்டமாட்டேன். மகிந்த சிநதனையை என்னென்று அறிவேன். ஏனெனில் அதையவர் எங்களிடமே கற்றறிந்தார்.

அமெரிக்காவின் முகமூடியைக் கிழித்த விக்கிலீக்ஸ்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எங்களது உற்ற நண்பன் பாகிஸ்தான்” என்று அன்று அதிபராக இருந்த ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷும் இன்று அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமாவும் கூறியதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று என்பது, ஆஃப்கானிஸ்தான் போர் தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரக‌சிய ஆவணங்கள் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டன.

“ஆஃப்கானிஸ்தான் மக்களை தாலிபான் மற்றும் அல் கய்டா பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க” 2001ஆம் ஆண்டு முதல் தாங்கள் நடத்திவரும் போரில்இ முழுமையாக ‘உதவி’வரும் பாகிஸ்தானிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் (100 கோடி) டாலர் நிதியுதவி அளித்துவரும் அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தானில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்நாட்டின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.தான் தாலிபான்களுக்கும், அல் கய்டாவிற்கு உதவியிருக்கிறது என்கிற அமெரிக்க (இராணுவ) உளவு அமைப்பு திரட்டிக் கொடுத்த இரகசிய ஆவணங்கள் இன்று உலகின் பார்வைக்கு வெளியாகியிருப்பதில் முகம் வெளிறிப்போய் உள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூ யார்க்கின் இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆஃப்கானிஸ்தான் மீது (ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசை மிரட்டி தனது நண்பனாக்கிக் கொண்டு) போர் தொடுத்த அமெரிக்காவி்ற்கு, தனது நண்பனுக்கு இரண்டு முகங்கள் உண்டு என்பதை புரிந்துகொண்ட பின்னரும், அவனுடைய பயங்கரவாத முகத்தை உலகின் பார்வைக்கு கொண்டுவராமல், இன்று வரை ‘பாகிஸ்தான் துணையின்றி ஆஃப்கான் போர் சாத்தியமில்லை’ என்று கூறிவருவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை விக்கிலீக் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தொடங்கி, டெல்லியின் மக்கள் அதிகம் புழங்கும் சந்தைகள், அக்சார்தாம் கோயில், மும்பையின் புறநகர் ரெயில்கள், இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் என்று வரிசையாக பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த பின்னரும், தனது பாகிஸ்தான் நண்பனை விடாமல் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, பயங்கரவாத யுத்தத்தை தொடர்ந்துகொண்டிருந்த அமெரிக்கா, மும்பையின் மீது 2008ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தாக்குதலிற்குப் பிறகுதான், ‘தாக்குதலிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என்று ஓரளவிற்கு பேச ஆரம்பித்தது. அமெரிக்காவின் அயலுறவு அமைச்சரிலிருந்து ஒபாமா வரை எல்லோரும் கண்டிக்கும் தொனியில் பேசினாலும், பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டியது எதையும் நிறுத்தவில்லை, ஆயுதங்கள் உட்பட.

பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.பற்றி நேரிடையாக இந்தியா குற்றம்சாற்றிய போதெல்லாம், ஏதோ அந்த அமைப்பிற்கும் பாகிஸ்தானின் அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லாததுபோல், ‘குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பாகி்ஸ்தான் அரசிற்கு இந்தியா ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றுதான் சமாதானம் சொன்னதே தவிர, ஒருமுறை கூடஇ ஐ.எஸ்.ஐ.தான் பாகிஸ்தான் மண்ணில் இருந்து உருவெடுத்து வந்து இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது என்று ஒருபோதும் கூறவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் கூட, இந்தியா வந்திருந்த அமெரிக்க இராணுவக் கூட்டுப்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் மைக் முல்லன், “பாகிஸ்தானை தளமாகக் கொண்டு பயிற்சிபெற்று செயல்படும் லஸ்கர் இ தயிபா பயங்கரவாத இயக்கத்தினர் மும்பையில் நடத்தியதைப் போன்றதொரு தாக்குதலை இந்தியா மீது மீண்டும் நிகழ்த்த உள்ளனர்” என்று கூறியிருந்தார். அதுமட்டமின்றி, லஸ்கர் இயக்கம் சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அரசின், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவின்றி அந்த இயக்கம் எப்படி சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது என்பதை விளக்கவில்லை!

பாகிஸ்தானிற்குள் இருந்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுவரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக எந்த ஒரு கூட்டு நடவடிக்கை குறித்து என்றாவது அமெரிக்கத் தலைவர்கள் பேசியதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும்தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆகாத ஒன்றை மட்டும் பேசிவிட்டு, பிறகு இஸ்லாமாபாத்திற்குப் பறந்து செல்கின்றனர். அங்கு சென்று இதையெல்லாம் பேசுவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்துக் கொண்டிருப்பதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பாராட்டிப் பேசிவிட்டு ஆஃப்கானிற்கு பறந்து செல்வர். இதுதான் அன்றுமுதல் இன்றுவரை நடைபெற்று வருகிறது.