Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 28

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 28

 

கம்யூனிசத்தை நோக்கி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதே, ஸ்டாலின் பற்றி, மார்க்சியம் முன்னிறுத்தும் ஆய்வுரையாகும்.

ஸ்டாலின் காலம் பற்றிய ஆய்வை கொண்டு வரவேண்டிய அளவுக்கு, வரலாற்றுச் சூழல் கோருகின்றது. மக்களின் நலன்களை கைவிட்டு ஒட்டம் பிடிக்கும் அரசியல் போக்கில் தொற்றிக் கொள்வோர், ஸ்டாலின் மீதான தாக்குதலை குவிக்கின்றனர். மார்க்சியத்தை பாதுகாத்து, அதன் புரட்சிகரமான பாத்திரத்தை முன்னிறுத்தும் போராட்டத்தில், கோட்பாட்டு ரீதியாக முகம் கொடுக்க முடியாதவர்கள், ஸ்டாலின் ஊடாக தாக்குதலை நடத்துகின்றனர். ஸ்டாலின் 1930 களில் இழைத்த தவறுகளை, மார்க்சியவாதிகளாகிய நாங்கள் எப்போதும் விமர்சித்து வந்துள்ளோம். அதேநேரம் ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அதில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருந்த வராலற்று பாத்திரத்தை எப்போதும் பாதுகாப்பதில், நாம் உறுதியானவர்கள்.

அன்று குருசேவ், ஸ்டாலினை கொலைகாரன், குற்றவாளி, சூதாடி, கொடுங்கோலன், சர்வாதிகாரி, மடையன், முட்டாள்.. எனப் பலவாக தூற்றி இழிவாக்கி அவதூறு செய்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குழிதோண்டி புதைத்தான். ஆனால் லெனின் தனது தலைமையில் உருவாக்கிய ஸ்டாலின் போன்ற தலைவர்களை பற்றி

வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை – ஒரு இயக்கத்தைக் கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றச் சிறந்த தனது பிரதிநிதிகளை- உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை”

என்றார். பாட்டாளி வர்க்க தலைவரான ஸ்டாலின் மீதான அவதூறுகள் முதல் அவரின் தவறுகளை அரசியல் ரீதியாக, உள்ளடக அடிப்படைகளை புரிய வைக்க துல்லியமான ஆய்வு தேவைப்படுகிறது.

ஸ்டாலின் பற்றிய ஆய்வுகளில் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்வது தொடர்பானதாகவும். அதை மக்கள் திரள் பாதை ஊடாக சாதிப்பதும் என்ற அரசியல் எல்லையில்தான், ஸ்டாலின் சரியான பக்கங்கள் மற்றும் தவறுகள் இனம் காணப்பட்டு, அவதூறுகள் வேறுபிரித்து அம்பலம் செய்ய வேண்டியுள்ளது. வர்க்கப் போராட்டம் பற்றி மார்க்ஸ் கூறினார்

எழுச்சியும் போரும் மற்றக் கலைகளைப் போலவே ஒரு கலையாகும். அது சிற்சில செயல்முறை விதிகளுக்கு உட்பட்டதாகும். அவ்விதிகளைப் புறக்கணித்தால், அப்படிப் புறக்கணிக்கும் கட்சிக்குச் சீரழிவுதான் ஏற்படும்”

என்றார். இது தீர்க்கமான அரசியல் ரீதியான ஆய்வுரையாகும். எழுச்சியும், போரும் மட்டுமல்ல அதை வென்று முன்னெடுக்கும் கட்டுமானத்தில் தொடர்வதும் கூட, இந்த நியதிக்கு பொருத்தமானது. சோசலிச சமூகத்தை கட்டுவது, அதை பாதுகாப்பது, முன்னேற்றுவது, புரட்சியை தொடர்வது என்ற இடைவிடாத புரட்சிகளை, புறக்கணிக்கும் எல்லா நிலையிலும், சீரழிவுதான் அதன் விளைவாகும். புரட்சியை இடைவிடாது தொடர்வதை நிராகரிக்கும், எல்லா நிரந்தரமான இயங்கியல் மறுப்பு வாய்வீச்சும், இறுதியில் சீரழிவில் முடியும். இடைவிடாத புரட்சிக் கலையை கற்றுக் கொள்ளாத, கற்றுக் கொடுக்காத அரசியல், இயங்கியல்; மறுப்பில் முடங்கி சீரழிவை விளைவாக்கும். லெனின் புரட்சியை பற்றி என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம்.

“… முதல் வெற்றியை நீங்கள் போராடி அடையவேண்டும் பிறகு வெற்றியிலிருந்து வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், எதிரியின் குழப்பத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, எதிரியை எதிர்த்தத் தாக்குதலை என்றுமே நிறுத்திவிடக்கூடாது”

என்று மார்க்ஸ்சின் அடிப்படையை, அடிப்படையாக கொண்டு விளக்கினர்.

லெனின் புரட்சியை நடத்தும் முன்பு கூறினார்

வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்பவர்கள் மார்க்சியவாதிகள் ஆகிவிடமாட்டார்கள்… வர்க்கப் போராட்டத்தை ஏற்பதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்பதுவரை விரித்துச் செல்பவனே மார்க்சியவாதியாவன்”

என்றார். புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை தொடர்ந்து நடத்த, யார் விரித்து சொல்லுகின்றார்களோ, அவர்கள் தான் மார்க்சியவாதிகள். இல்லாத அனைவரும் மார்க்சியத்தின் எதிரிகள் ஆவர். சோவியத் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், மார்க்சியவாதி யார் என்பதே, எல்லாவற்றையும் விட அடிப்படையான கேள்வியாகிறது. வர்க்க புரட்சியை நடத்தியவர்களும், பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தை ஏற்பவர்களும் அல்ல, மாறாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், புரட்சியை தொடர்ந்து நடத்துபவனே மார்க்சியவாதியாகிறான். இதை மறுப்பவன் மார்க்சியவாதியாக இருப்பதில்லை. இது என்? என்பதை கம்யூனிஸ் கட்சி அறிகையில் இருந்து பார்ப்போம்.

பாட்டாளி வர்க்கத்தை ஆளும்வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவது, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பதுதான் உழைக்கும் மக்களின் போராட்டத்தின் முதல் நடவடிக்கையாகும்”

என்று தெளிவுபடவே விளக்குகிறது. சோசலிச புரட்சியின் கடமைகளை நிறைவு செய்ய, வர்க்கப் போராட்டத்தை ஏற்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்பதும், அதை நடைமுறை படுத்துவதும் போதுமானது. ஆனால் கம்யூனிச சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கு இவை இரண்டும் போதுமானது அல்ல. மாறாக இதன் கீழ் புரட்சியை தொடர்வதை ஏற்று, அதை நடைமுறை படுத்துபவனே மார்க்சியவாதியாகின்றான். சோசாலிச சமூகத்தில் இவைதான் மார்க்சியவாதிக்கும், திரிபு வாதத்துக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபட்ட அரசியல் உள்ளடக்கமாகும். இதற்குள் தான் முதலாளித்துவ மீட்சி தன்னை மீள் அமைக்கின்றது. லெனின் ‘ஒடுகாலி காவுஸ்கி’ என்ற தலைப்பில் எழுதும் போது

எல்லா நாடுகளிலும் புரட்சியை வளர்க்கவும் ஆதரிக்கவும் எழச்செய்யவும் வேண்டி, ஒரு நாட்டில் உயர்ந்தபட்சம் இயன்றது அனைத்தையும் செய்தல் வேண்டும்”

என்றார். இதைச் செய்ய மறுக்கின்ற யாரும் மார்க்சிய வாதியாக இருக்க முடியாது. ஒரு நாட்டின் புரட்சியை தொடர்வது, பாதுகாப்பது தலையாய வர்க்கக் கடமையாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்

பொதுவுடைமையாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் உடனடியான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காகப் போராடுகிறார்கள், அவ்வப்போதைய நலன்களை நடைமுறைப்படுத்துவதற்காகப் போராடுகிறார்கள், ஆனால் நிகழ்கால இயக்கத்தில் அவர்கள் அவ்வியக்கத்தின் எதிர்காலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அதன்மீது கவனம் செலுத்துகிறார்கள்”

இதை மறுப்பது பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்வதாகும். புரட்சியை எதற்காக ஒரு கட்சி தனது வர்க்கம் சார்ந்து நடத்துகின்றதோ, அதை தொடர மறுப்பது அக் கட்சியின் அல்லது நபரின் சீரழிவை பிரகடனம் செய்வதாகும்.

லெனின் புரட்சி என்றால் என்ன? என்பது பற்றி

உண்மையில், மார்க்சியப் பார்வை நிலையில் புரட்சி என்பது என்ன? காலாவதியாகிவிட்ட அரசியல் மேற்கட்டுமானத்தை வலிமையைக் கொண்டு இடித்துத் தள்ளுவது…”

என்றார். ஒரு புரட்சியின் சரியான விளைவை, அதன் தகர்வில் தெளிவுபட லெனின் விளக்கிவிடுகின்றார். இங்கு புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியை தொடர்வதனை எப்படி நாம் புரிந்து கொள்வது. புரட்சிக்கு முந்திய சமுதாயத்தில் அடிக்கட்டுமானத்துக்கும், மேல்கட்டுமானத்துக்கும் இடையில் எற்படும் பகை முரண்பாடு, மேற்கட்டுமானத்தை செல்லரிக்க வைக்கின்றது. இங்கு மேல் கட்டுமானத்தை இடித்து தள்ளுவதன் மூலம், அடிகட்டுமானத்தில் புரட்சி நடக்கின்றது. இங்கு மேல் கட்டுமான தகர்வுக்கு பின்பே, அடிக்கட்டுமானம் தகர்கின்றது. புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் மேல், கீழ் கட்டுமானத்தில் தொடர்ச்சியான இடைவிடாத புரட்சி, இயல்பாக தொடர்ச்சியாக பழையவற்றை காலவாதியாக்கும் வகையில் காணப்படும். இதில் எதாவது ஒன்று பின்தள்ளப்படும் போது, முதலாளித்துவ மீட்சி, அதன் ஊடாக புகுந்துவிடுகின்றது.

லெனின் புரட்சியின் வர்க்க கடமை பற்றி

ரசியப் புரட்சியின் துவக்கம் எளிதானதாகவும், தொடர்ந்து முன்னேறிச் செல்வது கடினமானதாகவும் இருந்தது என்பதை மறப்பது மிகப் பெரும் அறியாமையாகும், மிகப் பெரும் தவறாகும்”

என்று மிக தெளிவபடவே பல உதாரணங்கள் மூலம் முன்வைக்கின்றார். இவற்றில் இருந்தே நாம் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புரட்சி, புரட்சியின் நோக்கம், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் எப்படி புரட்சியைத் தொடர்வது என்ற அரசியலில் இருந்தே, ஸ்டாலினை நாம் ஆராய வேண்டும், ஆராய முடியும். இல்லாதவரை அவை அவதூறாகி, தூற்றுவதே அரசியல் உள்ளடக்கமாகிவிடுகின்றது.

ஸ்டாலின் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கவும், தொடரவும் முனைந்த போக்கில், இழைத்த சில கடுமையான தவறுகள் அனைத்தும், ஒரேயோரு அரசியல் தவறால் ஏற்பட்டவை. அதாவது புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியைத் தொடரும் மக்கள்திரள் பாதையை அவர் கண்டறியத் தவறியதுதான், அவரின் அரசியல், தவறுகளின் மூலமாகவும், மையமாகவும் உள்ளது. ஸ்டாலின் கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும், கட்சி தலைவராகவும் இருந்த காலத்தில், புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில் அவர் மக்கள் திரள் பாதையை நடைமுறையில் தொடர்வதில், அவரைவிட சிறந்த வேறு எவரையும் அவருக்கு நிகராக முன்னிறுத்த முடியாது. இதே ஸ்டாலின் புரட்சிக்கு பிந்திய கால கட்டத்தில் இதைத் தொடர, ஒரு மக்கள் திரள் பாதையை கண்டறியத் தவறியதன் விளைவு, 1930 களின் கடுமையான தவறுகளை இழைக்க நேர்ந்தது. அதுவும் குறிப்பாக 1935க்கு பின் முரண்பாடுகள் சதியாக கூர்மையான போது, தவறு, இயல்பில் கடுமையாக தவறு இழைக்க வைக்கின்றது. இந்த தன்மை ஸ்டாலின் தனிப்பட்ட இயல்போ, சமுதாயத்தின் நிலையோ அல்ல. மாறாக புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியை தொடர்வது எப்படி? என்ற மக்கள்திரள் பாதை கண்டறியப்பட்டு இருப்பின், ஸ்டாலின் மீதான தவறு என்பது விவாத்துக்குரிய விடயமாக இருந்திருக்காது. அத்துடன் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை எதிர்த்து, டிராட்ஸ்கி மற்றும் புக்காரின் போன்றோர் தொடர்சியாக எதோ ஒரு வகையில் தமது எதிர்ப்பை சதிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கா விட்டாலும், ஸ்டாலின் பற்றிய விவாதம் அவசியமற்றவைதான். ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை தொடரும் அரசியல் மார்க்கத்தை எதிர்த்து, அதை எதிர்த்தவர்கள் மௌனமாக கைகட்டி உறங்கியிருக்கவில்லை. மாறாக எல்லாவிதமான முயற்சியிலும், வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை எதிர்த்து, சகலவிதமான எதிர் புரட்சி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்கள். ஆனால் இன்று விமர்சனத்தை ஸ்டாலின் மீது மட்டும் குற்றம் கூறுபவர்கள், எதிர்தரப்பு பற்றி மௌனம் சாதிப்பது ஏன்? எதிர்தரப்பின் அரசியல் இதனுடாக வாங்குரோத்தாகி விடக் கூடாது என்ற, ஒரே ஒரு நம்பாசைதான் இதில் புதைந்து கிடக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் ஸ்டாலினை குற்றம் சாட்டுபவர்கள், எதிர்தரப்பையும் அதன் அரசியல் நடத்தையும் கூட குற்றம் சாட்டவேண்டும். எதிர்தரப்பின் அரசியல் நடத்தையை எதிர்கொண்டே ஸ்டாலின் செயல்பட்டார். வெறும் வெற்றிடத்தில் அல்ல, அல்லவா!

ஸ்டாலின் காலத்தில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதே அடிப்படையான கேள்வியாகவும், முதலாளித்துவ மீட்சிகான மையப்புள்ளியாகவும் இருந்தது. இங்குதான் திரிபு வாதமும், சந்தர்ப்பவாதமும் புரையோடிக்கிடந்தது. பாட்டாளி வர்க்கப் புரட்சியை தொடர்வதை, எதோ ஒரு காரணத்தைக் கூறி மறுத்தவர்கள் அனைவரையும் முன்நிறுத்தியே, ஸ்டாலினை பாதுகாக்க வேண்டிய வரலாற்று கட்டத்தில் நாம் உள்ளளோம்;. இக்காலத்திலும் சரி அதற்கு பின்னாலென்றாலும் சரி, யாரும் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கான, மக்கள் திரள் பாதையை முன்வைத்ததில்லை. ஸ்டாலின் வழிமுறை எற்படுத்தும் தவறை இனம் கண்ட மாவோ, இதற்கு மாறாக முதன் முதலாக மக்கள் திரள்வழிமுறையை முன்வைக்கின்றார்.

ஸ்டாலின் பற்றிய விமர்சனத்தையும், சோசலிச சமூகம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தவர்கள் அனைவரும், புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை மறுத்தே, கருத்தை முன்வைத்தனர். இவர்கள் யாரும் மார்க்சியவாதியாக இருப்பதில்லை. மார்க்சியத்தை குறுக்கி அதை முடக்கும் வகையில் தம்மை வெளிப்படுத்தினர். கம்யூனிசத்தை நோக்கி முன்னேறுவதா அல்லது சோசலிசத்துடன் முடங்கி முதலாளித்துவ மீட்பை கொண்டு வருவதா, என்ற அடிப்படையான கேள்வியில், வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை மறுப்பதன் ஊடாக, புரட்சியின் கடமையை மறுப்பதில் இவ் விமர்சனங்கள் அமைந்திருந்தன. இதனால் இந்த மார்க்சிய எதிர்ப்பு சார்ந்த, கம்யூனிசத்தை நோக்கி முன்னேறும் வர்க்கப் போராட்டம் தொடர மறுப்பதை அரசியலாக கொண்ட, அனைவரையும் ஈவிரக்கமற்ற வகையில், எதிர்த்து போராடும் வகையில், ஸ்டாலின் பற்றிய அனைத்து பக்கத்தையும் சுருக்கமாக இங்கு ஆய்வு செய்கின்றது.

முதற்பதிவு: செங்கொடி

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20

21. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 21

22. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 22

23. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 23

24. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 24

25. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 25

26. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 26

27. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 27